வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா?
கேள்வி : வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா?இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்லறங்கள், நல்லவார்த்தைகள் ஆகியவற்றுக்கு வஸீலா என்று கூறப்படும். அது போன்று மறுமைநாளில் இறைவன் தன்னுடைய அடியார்களில் மிகவும் நெருக்கமான ஒருவருக்கு வழங்கும் பதவிக்கும் வஸீலா என்று கூறப்படும்.
பதில்:
பின்வரும் இறைவசனத்தில் இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்லறங்களைச் செய்வது வஸீலா என்று கூறப்பட்டுள்ளது.
இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். (வணக்க வழிபாடுகள் மூலம்) அவன் பக்கம் நெருங்கும் வழியைத் தேடிக் கொள்ளுங்கள்! அவனது பாதையில் போரிடுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.
மேற்கண்ட வசனத்தில் மூலத்தில் இடம் பெற்றுள்ள “வஸீலா” எனும் வார்த்தைக்கு இறைவனின் பக்கம் நெருங்கும் வழி என்று பொருளாகும்.
சொர்க்கத்தில் உள்ள ஓர் உயர் பதவிக்கும் வஸீலா என்று கூறப்படும். இதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாகும்.
நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது “ஸலவாத்’ சொல்லுங்கள். ஏனெனில், என்மீது
யார் ஒருமுறை “ஸலவாத்’ சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலா’வைக் கேளுங்கள். “வஸீலா’ என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ் விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
முஸ்லிம் (628)
இதன் காரணமாகத்தான் பாங்கு முடிந்த பிறகு ஓதும் துஆவில் நபிகள் நாயகத்திற்காக வஸீலா எனும் உயர்பதவியை நாம் கேட்குமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும் போது
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா
(இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் ளஸல்ன அவர்களுக்கு மட்டுமே உரித்தான சொர்க்கத்தின்ன உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)
என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
புகாரி (614)