மன்ஜில் என்ற நூலில் இன்னின்ன சூராக்களை ஓதி வந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ஆதாரப்பூர்வமான செய்திகளா?

கேள்வி-பதில்: பித்அத்

கேள்வி:

குர்ஆனின் சில சூராக்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட மன்ஜில் என்ற நூலில் இன்னின்ன சூராக்களை ஓதி வந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ஆதாரப்பூர்வமான செய்திகளா?

அப்துல்லாஹ்


பதில்:

மன்ஜில் என்ற நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக இந்த சூராவை ஓதினால் இன்ன நோய் குணமாகும், செல்வம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற கருத்தில் ஆதாரமற்ற செய்திகள் ஏராளமாக சமுதாயத்தில் உலவி வருகின்றன. இவற்றிற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் கிடையாது.

திருக்குர்ஆனில் நோய் நிவாரணம் இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.

وَنُنَزِّلُ مِنَ ٱلْقُرْءَانِ مَا هُوَ شِفَآءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ ٱلظَّـٰلِمِينَ إِلَّا خَسَارًا

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு அது நஷ்டத்தையே அதிகப்படுத்தும்.

(அல்குர்ஆன்: 17:82)➚

தேள் கடித்த ஒருவருக்கு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி மந்திரித்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்த செய்தி புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல நூற்களில் பதிவாகியுள்ளது.

இது தவிர குறிப்பிட்ட சூராவில் குறிப்பிட்ட இன்ன நோய்க்கு நிவாரணம் இருக்கிறது என்று ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»

“ யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. “அலிஃப் லாம் மீம் ‘ என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து ” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),

(திர்மிதீ: 2910)

இது தவிர சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூரத்துல் ஃபாத்திஹா, கஹ்ஃப், குல்ஹுவல்லாஹு அஹத், ஃபலக், நாஸ் போன்ற அத்தியாயங்களுக்கும் ஆயத்துல் குர்ஸீ போன்ற சில வசனங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில சிறப்புகளைக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ள செய்திகளில் பெரும்பாலும் மறுமைப் பயன் தொடர்புள்ளவை தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.