குற்றத்தை ஒப்புக்கொண்ட மனிதர் — நபி (ஸல்) ஓதிக்காட்டிய பாவமன்னிப்பு வசனம்
“நன்மைகள் தீமைகளை அழித்துவிடும்” என்ற வசனத்தை அவருக்காக ஓதிக்காட்டினார்கள் நபி (ஸல்)
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي عَالَجْتُ امْرَأَةً فِي أَقْصَى الْمَدِينَةِ، وَإِنِّي أَصَبْتُ مِنْهَا مَا دُونَ أَنْ أَمَسَّهَا، فَأَنَا هَذَا، فَاقْضِ فِيَّ مَا شِئْتَ، فَقَالَ لَهُ عُمَرُ: لَقَدْ سَتَرَكَ اللهُ، لَوْ سَتَرْتَ نَفْسَكَ، قَالَ: فَلَمْ يَرُدَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَقَامَ الرَّجُلُ فَانْطَلَقَ، فَأَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا دَعَاهُ، وَتَلَا عَلَيْهِ هَذِهِ الْآيَةَ: {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ، إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114] فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: يَا نَبِيَّ اللهِ هَذَا لَهُ خَاصَّةً؟ قَالَ: «بَلْ لِلنَّاسِ كَافَّةً»
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டேன். அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு செயல்களைச் செய்துவிட்டேன். இதோ நான் (இங்கு தயாராக நிற்கிறேன்). என் விஷயத்தில் நீங்கள் நாடியதை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார். அவரிடம் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வே உனது குற்றத்தை மறைத்துவிட்டிருக்க, நீ உன் குற்றத்தை மறைத்திருக்கக் கூடாதா?”
என்று கேட்டார்கள். ஆனால், அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை. பிறகு அந்த மனிதர் எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்துவர அவருக்குப் பின்னால் ஆளனுப்பினார்கள். அவரிடம், “பகலின் இரு ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்” (11:114➚)எனும் இந்த இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே!
இது இவருக்கு மட்டும் உரியதா? (அல்லது அனைவருக்குமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; மக்கள் அனைவருக்கும் உரியதுதான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 5335) ➚
தான் செய்த தவறை மறைக்காமல் நேரடியாக ஒப்புக்கொண்டு வந்த அந்த மனிதருக்கு, நபி (ஸல்) அவர்கள் தண்டனையை அல்ல, ஒரு வழியைக் காட்டினார்கள். நல்ல செயல்கள் தீய செயல்களை அழித்துவிடும் என்ற வசனத்தை ஓதிக்காட்டி, தவறு செய்தவரையும் நம்பிக்கை இழக்காமல் இருக்க வைத்தார்கள்.
நாம் தவறு செய்யும்போது, அதை மறைத்து வெட்கத்தில் மூழ்குவதற்குப் பதிலாக, திருந்தி நல்ல செயல்களில் ஈடுபடுவதே சரியான வழி. அல்லாஹ்வின் அருள் நம் தவறுகளை விட எப்போதும் பெரியது என்பதை இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.