ஒருவரும் நினைவுகூராத ஜுலைபீப் (ரலி)யை நபியே (ஸல்) தேடிக் கண்டெடுத்தது

ஹதீஸ் சம்பவங்கள்

“இவர் என்னைச் சேர்ந்தவர்; நான் இவரைச் சேர்ந்தவன்” என்று அவர் அருகே நின்றார்கள் நபி (ஸல்)

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ فِي مَغْزًى لَهُ، فَأَفَاءَ اللهُ عَلَيْهِ، فَقَالَ لِأَصْحَابِهِ: «هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ؟» قَالُوا: نَعَمْ، فُلَانًا، وَفُلَانًا، وَفُلَانًا، ثُمَّ قَالَ: «هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ؟» قَالُوا: نَعَمْ، فُلَانًا، وَفُلَانًا، وَفُلَانًا، ثُمَّ قَالَ: «هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ؟» قَالُوا: لَا، قَالَ: «لَكِنِّي أَفْقِدُ جُلَيْبِيبًا، فَاطْلُبُوهُ» فَطُلِبَ فِي الْقَتْلَى، فَوَجَدُوهُ إِلَى جَنْبِ سَبْعَةٍ قَدْ قَتَلَهُمْ، ثُمَّ قَتَلُوهُ، فَأَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَقَفَ عَلَيْهِ، فَقَالَ: «قَتَلَ سَبْعَةً، ثُمَّ قَتَلُوهُ هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ، هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ» قَالَ: فَوَضَعَهُ عَلَى سَاعِدَيْهِ لَيْسَ لَهُ إِلَّا سَاعِدَا النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَحُفِرَ لَهُ وَوُضِعَ فِي قَبْرِهِ، وَلَمْ يَذْكُرْ غَسْلًا

அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு போர் பயணத்தில் இருந்தார்கள். பிறகு அவர்களுக்கு அல்லாஹ் போர்ச் செல்வங்களை வழங்கினான். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “(உங்களில்) யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகிறீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “ஆம்; இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் (காணாமல் தேடுகிறோம்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்), “(உங்களில்) யாரையேனும் காணாமல் தேடுகிறீர்களா?”

என்று நபியவர்கள் கேட்டார்கள். தோழர்கள், “ஆம்; இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் (காணாமல் தேடுகிறோம்)” என்று கூறினர். பிறகு (மூன்றாவது முறையாக) “(உங்களில்) யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகிறீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், “இல்லை (எல்லாரும் கிடைத்துவிட்டனர்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “நான் ஜுலைபீபைக் காணாமல் தேடுகிறேன். நீங்களும் அவரைத் தேடுங்கள்” என்று கூறினார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர் தேடப்பட்டார்.

(எதிரிகளில்) ஏழு பேரின் உடல்களுக்கு அருகில் அவரது உடலைக் கண்டனர். ஜுலைபீப் அந்த எழுவரையும் கொல்ல, அவர்களும் ஜுலைபீபைக் கொன்றுவிட்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் வந்து ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு அருகில் நின்று, “இவர் (எதிரிகளில்) எழுவரைக் கொன்றார். அவர்களும் இவரைக் கொன்றுவிட்டனர். (இதோ) இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். நான் இவரைச் சேர்ந்தவன் ஆவேன். இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். நான் இவரைச் சேர்ந்தவர் ஆவேன்” என்று கூறினார்கள்.

பிறகு அவரைத் தமது (முன்)கையில் வைத்துத் தூக்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கைகளைத் தவிர (கட்டிலாக) வேறெதுவும் அவருக்கு இருக்கவில்லை. பிறகு குழி தோண்டப்பட்டு அவரது உடல் குழிக்குள் வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பில், அவர் நீராட்டப்பட்டாரா என்பது பற்றிய குறிப்பு இல்லை.

அறிவிப்பவர்: அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி)

நூல் – (முஸ்லிம்: 4877)

மூன்று முறை தம் தோழர்களிடம் யாரையேனும் காணவில்லையா எனக் கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள். ஒவ்வொரு முறையும் தோழர்கள் பெயர் பெயராகச் சொன்னார்களே தவிர, ஜுலைபீப் (ரலி)யின் பெயரை யாரும் நினைவுகூரவில்லை; அவரை நினைவுகூர்ந்து தேடச்சொன்னது நபியவர்கள் ஒருவரே.

பெயரோ செல்வமோ குடும்பப் பெருமையோ இல்லாதவர் என உலகம் ஒதுக்கிவைத்தவரை, தம் சொந்தக் கரங்களில் தூக்கி அடக்கம் செய்தார்கள் நபி (ஸல்) அவர்கள். அல்லாஹ்விடம் ஒருவரின் மதிப்பு நிர்ணயிக்கப்படுவது நம் பட்டியல்களால் அல்ல, நம் ஈடுபாட்டால் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.