மூன்று முறை அழைக்கப்பட்ட முஆத் (ரலி) — நரகத்தைத் தடுக்கும் சாட்சியம்

ஹதீஸ் சம்பவங்கள்

“எவர் உண்மையாய்ச் சாட்சி சொல்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்வான்”

أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ رَدِيفُهُ عَلَى الرَّحْلِ، قَالَ: «يَا مُعَاذُ» قَالَ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، قَالَ: «يَا مُعَاذُ» قَالَ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، قَالَ: «يَا مُعَاذُ» قَالَ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، قَالَ: «مَا مِنْ عَبْدٍ يَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ»، قَالَ: يَا رَسُولَ اللهِ أَفَلَا أُخْبِرُ بِهَا فَيَسْتَبْشِرُوا، قَالَ: «إِذًا يَتَّكِلُوا»، فَأَخْبَرَ بِهَا مُعَاذُ عِنْدَ مَوْتِهِ تَأَثُّمًا

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை “முஆத்!” என்று அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)” என்று முஆத் பதிலளித்தார்கள். (சிறிது தூரம் சென்ற பின்) “முஆத்!” என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்றார்கள்.

(இன்னும் சிறிது தூரம் சென்ற பின்) “முஆத்!” என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிகூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள். முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே!

இதை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் மக்கள் இதையே நம்பிக் கொண்டு (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்” என்று கூறினார்கள். (கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது இறப்பின்போதுதான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 53)

வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்ந்திருந்த முஆத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பெயர் சொல்லி அழைத்தார்கள். ஒவ்வொரு முறையும் பணிவுடன் பதிலிறுத்த முஆத் (ரலி)யின் அந்த மூன்று பதில்களிலேயே, ஏதோ முக்கியமான ஒன்று வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது. உண்மையான உள்ளத்துடன் சொல்லப்படும் சாட்சிய வாக்கியத்தின் மகத்துவத்தை அந்த மூன்று அழைப்புகளே நமக்கு உணர்த்துகின்றன.

இந்த நற்செய்தியை மக்களிடம் பகிரலாமா என்று முஆத் (ரலி) கேட்டபோது, மக்கள் நற்செயல்களை விட்டுவிடுவார்கள் என அஞ்சி நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிந்திருந்தும் இறக்கும் தறுவாய் வரை பகிராமல் காத்திருந்த முஆத் (ரலி)யின் பொறுப்புணர்ச்சி, நாம் அறிந்த அறிவை எப்போது, எவ்வளவு பகிர வேண்டும் என்பதிலும் நிதானம் காக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.