பொருள் தராததால் குறை சொன்னோருக்கு நபி (ஸல்) பதில் — அம்ர் இப்னு தக்லிப் (ரலி)

ஹதீஸ் சம்பவங்கள்

“சிவப்பு ஒட்டகங்களைவிட நபியின் அந்த வார்த்தையே எனக்குப் பிரியமானது”

أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمًا وَمَنَعَ آخَرِينَ، فَكَأَنَّهُمْ عَتَبُوا عَلَيْهِ، فَقَالَ: «إِنِّي أُعْطِي قَوْمًا أَخَافُ ظَلَعَهُمْ وَجَزَعَهُمْ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الخَيْرِ وَالغِنَى، مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ» فَقَالَ عَمْرُو بْنُ تَغْلِبَ: مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمْرَ النَّعَمِ، وَزَادَ أَبُو عَاصِمٍ، عَنْ جَرِيرٍ، قَالَ: سَمِعْتُ الحَسَنَ، يَقُولُ: حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمَالٍ أَوْ بِسَبْيٍ فَقَسَمَهُ بِهَذَا

அம்ர் இப்னு தக்லிப்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அவர்கள் (அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்) நபி(ஸல்) அவர்களைக் குறை சொல்வதைப் போன்ற சூழ்நிலை நிலவியது. எனவே, நபி(ஸல்), அவர்கள், ‘நம்பிக்கை பலவீனப்பட்டு விடுவார் என்றும், பொறுமையிழந்து நிலை குலைந்துவிடுவார் என்றும் எவரைக் குறித்து நான் அஞ்சுகிறேனோ அவருக்குக் கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போது மென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டு விடுகிறேன்.

அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர் தான் அம்ர் இப்னு தக்லிப் அவர்களும்’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை (நன்மையும் போதுமென்ற குணமும் உடையவர்களில் ஒருவனாகக் குறிப்பிட்டுப்) புகழ்ந்து பேசிய இச்சொல்லுக்குப் பகரமாக (விலையுயர்ந்த செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை எனக்குத் தருவதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்ப மாட்டேன். மற்றோர் அறிவிப்பில், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு செல்வத்தை… அல்லது போர்க் கைதிகளைக் கொண்டு வந்து இவ்வாறு பங்கிட்டார்கள்’ என்று வந்துள்ளது.

அறிவிப்பவர்: அம்ர் இப்னு தக்லிப் (ரலி)

நூல் – (புகாரி: 3145)

எல்லோருக்கும் சமமாகக் கொடுக்கவில்லை என்பதற்காக நபி (ஸல்) அவர்களைக் குறை சொன்னார்கள் சிலர். ஆனால், நம்பிக்கை பலவீனமானவர்களுக்கு உதவி தேவை; உள்ளத்தில் நிறைவு உள்ளவர்களுக்கு அது தேவையில்லை என்பதே அவர்களின் ஞானம்.

கொடுக்கப்படாதது ஒரு குறையல்ல என்பதை அம்ர் இப்னு தக்லிப் (ரலி) புரிந்திருந்தார். நபியின் ஒரு நல்வார்த்தையே தமக்குப் போதுமான செல்வம் என்று அவர் கருதியது, நம் மதிப்பு பொருளில் அல்ல, உள்ளத்தின் நிறைவில்தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.