“முஹம்மதை நிராகரி” என்று கடனை மறுத்த ஆஸ் பின் வாயிலுக்குக் கப்பாப் (ரலி) சொன்னது
“அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து மீண்டும் எழுப்பும்வரை நான் நிராகரிக்கமாட்டேன்”
«كَانَ لِي عَلَى الْعَاصِ بْنِ وَائِلٍ دَيْنٌ، فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ»، فَقَالَ لِي: لَنْ أَقْضِيَكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ، قَالَ: فَقُلْتُ لَهُ: ” إِنِّي لَنْ أَكْفُرَ بِمُحَمَّدٍ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ، قَالَ: وَإِنِّي لَمَبْعُوثٌ مِنْ بَعْدِ الْمَوْتِ؟ ” فَسَوْفَ أَقْضِيكَ إِذَا رَجَعْتُ إِلَى مَالٍ وَوَلَدٍ، قَالَ وَكِيعٌ: كَذَا قَالَ الْأَعْمَشُ، قَالَ: فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا} [مريم: 77] وَقَالَ: {لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا} [مريم: 77] إِلَى قَوْلِهِ: {وَيَأْتِينَا فَرْدًا} [مريم: 80]
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இணைவைப்பாளர்) ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், “நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் (உனது கடனை) உனக்குத் தரமாட்டேன்” என்று சொன்னார். நான், “அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” என்று கூறினேன். அவர், “நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?
அவ்வாறாயின், நான் (மறுமையில்) பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் திரும்பப் பெறும்போது நான் உனது கடனைச் செலுத்துவேன்” என்று (கிண்டலாகச்) சொன்னார். அப்போதுதான், “நம் வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? எனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் சொல்வதை நாம் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேடியாக நீட்டுவோம்.
அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனுடைய செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகிவிடுவோம். தன்னந்தனியாகவே நம்மிடம் அவன் வருவான்” (19:77-80➚) எனும் இந்த வசனங்கள் அருளப்பெற்றன.
அறிவிப்பவர்: கப்பாப் பின் அல்அரத் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 5387) ➚
தனக்குச் செலுத்த வேண்டிய கடனையே பேரம் பேசும் கருவியாக்கி, நம்பிக்கையை விட்டுவிடச் சொல்லும் அழுத்தம் இது. பணத்தின் தேவை பெரிதாக இருந்தும் கப்பாப் (ரலி) அவர்கள் ஒரு நொடி கூடத் தயங்காமல் மறுத்துவிட்டார்கள். பொருளாதார நெருக்கடி எவ்வளவு பெரிதானாலும் நம்பிக்கையை விற்கக்கூடாது என்பதை இது நமக்குக் கற்றுத் தருகிறது.
மறுமையைக் கேலி செய்தவனுக்குப் பதில் சொல்ல கப்பாப் (ரலி) தனியாக நிற்கவில்லை; அவருடைய நிலைப்பாட்டையே இறைவனின் வார்த்தை உறுதிசெய்தது. உண்மையை உறுதியாகச் சொல்லிவிட்டு, அதற்கான தீர்வையும் நேரத்தையும் இறைவனிடமே விட்டுவிடுவதே நம்பிக்கையாளரின் அடையாளம்.