அனுமதி கேட்ட மனிதரை “மோசமானவர்” என்ற நபி (ஸல்), உள்ளே வந்ததும் கனிவாய் பேசினார்

ஹதீஸ் சம்பவங்கள்

“மக்கள் யாருடைய அருவருப்பான பேச்சிலிருந்து விலகி ஒதுங்குகிறார்களோ, அவர்தான் அல்லாஹ்விடம் மறுமை நாளில் மோசமானவர்”

أَنَّ رَجُلًا اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ائْذَنُوا لَهُ، فَلَبِئْسَ ابْنُ الْعَشِيرَةِ، أَوْ بِئْسَ رَجُلُ الْعَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ عَلَيْهِ أَلَانَ لَهُ الْقَوْلَ، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ قُلْتَ لَهُ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الْقَوْلَ؟ قَالَ: «يَا عَائِشَةُ إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ، مَنْ وَدَعَهُ، أَوْ تَرَكَهُ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ»

– حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، كِلَاهُمَا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، فِي هَذَا الْإِسْنَادِ مِثْلَ مَعْنَاهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: «بِئْسَ أَخُو الْقَوْمِ وَابْنُ الْعَشِيرَةِ»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை உள்ளே வரச்சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு உள்ளே) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதைப் போன்றே) அவரிட(மு)ம் நபி (ஸல்) அவர்கள் கனிவாகப் பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவரைக் குறித்து ஒரு விதமாகச் சொன்னீர்கள்.

பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?” என்று கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர் யாரெனில், மக்கள் எவரது அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தம்மைத்) தற்காத்துக் கொள்ள ஒதுங்கிக்கொள்கிறார்களோ அவர்தான். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் – (முஸ்லிம்: 5051)

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் குறித்து முன்பே எச்சரிக்கையாகப் பேசிவிட்டு, அவர் வந்தபோது கனிவாகவே பேசினார்கள். இதைக் கண்ட ஆயிஷா (ரலி) குழம்பிப்போய் கேள்வி கேட்டதற்கு, அவர்கள் தந்த பதில் ஆழமானது — ஒருவரின் தீங்கிலிருந்து விலகி இருப்பதற்காக அவரை வெளிப்படையாக அவமானப்படுத்த வேண்டியதில்லை. எச்சரிக்கையும் கனிவும் ஒன்றை ஒன்று மறுக்காமல் இரண்டையும் காக்கக் கற்றுத் தந்தார்கள் நபி (ஸல்).

வீட்டிலோ, பணியிடத்திலோ, யாரையாவது காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருந்தால், அந்த எச்சரிக்கை நம்மை கடுமையான, முரட்டுத்தனமான மனிதராக மாற்றிவிடக் கூடாது. மற்றவரின் குறையை அடையாளம் கண்டுகொள்வதும், அவரிடம் நல்லெண்ணத்துடன் நடந்துகொள்வதும் ஒரே நேரத்தில் சாத்தியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்குக் கற்பிக்கிறது.