“திவாலானவன் யார் தெரியுமா?” — நபி (ஸல்) தோழர்களிடம் கேட்ட கேள்வி

ஹதீஸ் சம்பவங்கள்

தொழுகையும் நோன்பும் ஸகாத்துமாய் வந்தும் திவாலாகிப் போகும் மனிதன்

«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார்.

(அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் – (முஸ்லிம்: 5037)

பணமும் பொருளும் இல்லாதவனையே திவாலானவன் என்று நாம் நினைக்கிறோம்; ஆனால் அல்லாஹ்வின் கணக்கில் திவாலானவன் வேறு ஒருவன் — தொழுகை, நோன்பு, ஸகாத்துடன் வந்தும், தான் புண்படுத்திய, அடித்த, அநியாயமாகப் புசித்த ஒவ்வொருவருக்கும் தன் நன்மைகளையே கொடுத்துக் காலியாகிப் போகிறவன்.

நம் நாவும் கையும் பிறருக்கு இழைத்த ஒவ்வொரு அநியாயமும் மறுமையில் நம் நன்மைகளிலிருந்தே செலுத்தப்படும் கடன் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது. வணக்க வழிபாடுகளை மட்டும் நம்பி, மனிதர்களுக்கிடையேயான உரிமைகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது மிகப்பெரிய இழப்பாகும்.