கணவரும் தந்தையும் சகோதரரும் நீடூழி வாழ வேண்டுமெனப் பிரார்த்தித்த உம்மு ஹபீபா (ரலி)க்கு நபி (ஸல்) சொன்னது

ஹதீஸ் சம்பவங்கள்

“அல்லாஹ்விடம் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் காக்கும்படி நீ வேண்டியிருந்தால் உனக்கு நன்றாயிருந்திருக்கும்”

قَالَتْ أُمُّ حَبِيبَةَ اللهُمَّ مَتِّعْنِي بِزَوْجِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِأَبِي أَبِي سُفْيَانَ، وَبِأَخِي مُعَاوِيَةَ، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكِ سَأَلْتِ اللهَ لِآجَالٍ مَضْرُوبَةٍ، وَآثَارٍ مَوْطُوءَةٍ، وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ، لَا يُعَجِّلُ شَيْئًا مِنْهَا قَبْلَ حِلِّهِ، وَلَا يُؤَخِّرُ مِنْهَا شَيْئًا بَعْدَ حِلِّهِ، وَلَوْ سَأَلْتِ اللهَ أَنْ يُعَافِيَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ، وَعَذَابٍ فِي الْقَبْرِ لَكَانَ خَيْرًا لَكِ» قَالَ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ الْقِرَدَةُ وَالْخَنَازِيرُ، هِيَ مِمَّا مُسِخَ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَمْ يُهْلِكْ قَوْمًا، أَوْ يُعَذِّبْ قَوْمًا، فَيَجْعَلَ لَهُمْ نَسْلًا، وَإِنَّ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ كَانُوا قَبْلَ ذَلِكَ»

– حَدَّثَنِيهِ أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّهُ قَالَ: «وَآثَارٍ مَبْلُوغَةٍ»، قَالَ ابْنُ مَعْبَدٍ: وَرَوَى بَعْضُهُمْ «قَبْلَ حِلِّهِ» أَيْ نُزُولِهِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், “இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட காலம் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!”என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளுக்காகவும் (வரையறுக்கப்பட்டுவிட்ட) காலடிகளுக்காகவும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரங்களுக்காகவும் நீ அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருக்கிறாய்.

அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே கொண்டுவரமாட்டான்;அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தவுமாட்டான். அல்லாஹ்விடம் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் காக்கும்படி நீ வேண்டியிருந்தால் உனக்கு நன்றாயிருந்திருக்கும்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (தற்போதுள்ள) குரங்குகளும் பன்றிகளும் உருமாற்றப்பட்ட (பனூ இஸ்ராயீல் சமுதாயத்த)வர்களில் உள்ளவையோ?”

என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், எந்த ஒரு சமுதாயத்தையும் அழித்துவிட்டு அல்லது வேதனைப்படுத்திவிட்டு, அவர்களுக்குச் சந்ததியினரை ஏற்படுத்துவதில்லை. குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன” என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “சென்றடையும் காலடிகளுக்காகவும்” என்று காணப்படுகிறது. சுலைமான் பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதற்குரிய நேரத்திற்கு முன்பே, அதாவது அது நிகழ்வதற்கு முன்பே என்று சிலர் அறிவித்துள்ளனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 5177)

நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தித்த உம்மு ஹபீபா (ரலி)யிடம், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதை மாற்ற முடியாது என்பதை மென்மையாக நினைவூட்டி, அதற்குப் பதிலாக என்னதான் கேட்டிருக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். எது கிடைக்கும், எது கிடைக்காது என்பதைவிட, எதை நாம் கேட்க வேண்டும் என்பதே பிரார்த்தனையின் ஞானம்.

ஆயுளும் வாழ்வாதாரமும் ஏற்கெனவே பங்கிடப்பட்டுவிட்டவை என்ற நம்பிக்கை நமக்கு நிம்மதி தர வேண்டும். அதற்குப் பதிலாக, நரகத்திலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் காக்கும்படி இறைவனிடம் கேட்பதையே நம் பிரார்த்தனையின் மையமாக்கிக் கொள்வோம்.