கணவர் மட்டும் இஸ்லாத்தை ஏற்று மனைவி மறுத்தால்?
காஃபிராக இருந்த கணவன், மனைவி இருவரில் கணவர் மட்டும் இஸ்லாத்தைத் தழுவி உள்ளார். மனைவி இஸ்லாத்தை ஏற்க மறுக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடலாமா? இவர்களின் நிலை பற்றிக் குர்ஆன், ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளது?
அப்துர்ரஹ்மான், ஈரோடு
இணை கற்பிப்பவர்களிடத்தில் திருமண சம்பந்தம் செய்து கொள்வதற்குத் திருக்குர்ஆன் தடை விதித்துள்ளது.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
இந்த வசனம், இணை கற்பிக்கும் பெண்களைத் திருமணம் செய்வதற்குத் தடை விதிக்கிறது. ஏற்கனவே திருமணம் முடித்திருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின், மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவளுடன் இணைந்து வாழக் கூடாது. ஏனெனில் முஸ்லிமான கணவனுக்கு முஸ்லிமல்லாத பெண் அனுமதிக்கப்பட்டவள் அல்ல என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
இந்த வசனத்தின் அடிப்படையில் நபித்தோழர்கள், இஸ்லாத்தை ஏற்காத தங்கள் மனைவிமார்களை விவாகரத்துச் செய்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.
மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் பெண்களை (அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாமா) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோதித்து வந்தார்கள். இணை வைப்பவர்களின் மனைவிமார்களில் யாரெல்லாம் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களுக்காக, அவர்களுடைய கணவன்மார்கள் செலவிட்ட (மஹ்ர்) தொகைளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடும்படியும், நிராகரிக்கும் பெண்களுடன் திருமண பந்தம் வைத்திருக்கக் கூடாது என்றும் அல்லாஹ் (குர்ஆனில் சட்டம் அருளி ) முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்ட போது, உமர் (ரலி) அவர்கள், அபூ உமய்யாவின் மகள் கரீபாவையும், ஜர்வல் அல் குஸாயீயின் மகளையும் (அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால்) விவாகரத்துச் செய்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
எனவே இஸ்லாத்தை ஏற்காத மனைவியுடன் சேர்ந்து வாழ்வது மார்க்க அடிப்படையில் குற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம், ஒருவர் இஸ்லாத்தில் இணைவதற்கு இது நிபந்தனையில்லை. இஸ்லாத்தை ஏற்ற பிறகும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால், அதன் காரணமாக அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராக மாட்டார். இஸ்லாத்தில் இருந்து கொண்டே பாவம் செய்தவராவார்.