குழந்தை பெற்றவள் எத்தனை நாட்கள் தொழுகை நோன்புகளை விட வேண்டும்?
குழந்தை பிரசவித்த பின் பெண்கள் எத்தனை நாட்கள் தொழுகை நோன்பு ஆகிய வணக்கங்களை நிறுத்த வேண்டும்?
பதில்
பிரசவித்த பெண்கள் இத்தனை நாட்கள் தொழுகையை விட்டு விட வேண்டும் அல்லாஹ்வும் அவனது தூதரும் எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்கவில்லை.
இது அனைத்து பெண்களுக்கும் ஒரே கால அளவில் பிரசவத் தீட்டு அமையாது என்பதால் இதற்கு மார்க்கத்தில் காலக் கெடு குறிப்பிடப்படவில்லை.
இரத்தப் போக்கு உள்ள நிலையில் தொழக் கூடாது என்ற அடிப்படையில் சில பெண்களுக்கு ஓரிரு நாட்களில் இரத்தப் போக்கு நின்று விட்டால் அந்த நாட்கள் தான் அவர்களுக்கான பிரசவத் தீட்டு நாட்களாகும்.
சில பெண்களுக்கு அதிக பட்சம் நாற்பது நாட்கள் கூட இரத்தப் போக்கு நீடிக்கும். அவர்கள் அதற்கேற்றவாறு முடிவு செய்து கொள்ள வேண்டும்.
சில பெண்களுக்கு சில நாட்களில் இரத்தப் போக்கு நின்று விடும். சிறிய இடைவெளியில் மீண்டும் இரத்தப் போக்கு வரலாம். அப்படி உள்ளவர்கள். இரத்தப் போக்கு இல்லாத நாட்களில் தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும். மறுபடி இரத்தப் போக்கு வரும் போது தொழுகையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இரத்தம் வெளியேறிக் கொண்டுள்ள நிலையில் தொழ முடியாது என்ற பொதுவான சட்டமே இதற்கும் உரியதாகும்.