நற்செய்தியை மறுத்த பனூ தமீம், ஏற்றுக்கொண்ட யமன்வாசிகள் — ஓடிப்போன ஒட்டகம்
“நற்செய்தி சொன்னீர்கள்; அது இருக்கட்டும் — தர்மம் கொடுங்கள்” என்றார்கள்
إِنِّي عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ قَوْمٌ مِنْ بَنِي تَمِيمٍ، فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا بَنِي تَمِيمٍ»، قَالُوا: بَشَّرْتَنَا فَأَعْطِنَا، فَدَخَلَ نَاسٌ مِنْ أَهْلِ اليَمَنِ، فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا أَهْلَ اليَمَنِ، إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ»، قَالُوا: قَبِلْنَا، جِئْنَاكَ لِنَتَفَقَّهَ فِي الدِّينِ، وَلِنَسْأَلَكَ عَنْ أَوَّلِ هَذَا الأَمْرِ مَا كَانَ، قَالَ: «كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ قَبْلَهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى المَاءِ، ثُمَّ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ»، ثُمَّ أَتَانِي رَجُلٌ، فَقَالَ: يَا عِمْرَانُ أَدْرِكْ نَاقَتَكَ فَقَدْ ذَهَبَتْ، فَانْطَلَقْتُ أَطْلُبُهَا، فَإِذَا السَّرَابُ يَنْقَطِعُ دُونَهَا، وَايْمُ اللَّهِ لَوَدِدْتُ أَنَّهَا قَدْ ذَهَبَتْ وَلَمْ أَقُمْ
இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பனூதமீம் குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூதமீம் குலத்தாரே!’ என்றார்கள். அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்’ என்று கூறினார்கள்: அப்போது யமன் நாட்டு மக்கள் சிலர் (-அஷ்அரீ குலத்தார்) வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே!
நீங்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூதமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை’ என்றார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் (அதை) ஏற்றுக் கொண்டோம்; மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், இந்த உலகம் உண்டானதன் ஆரம்ப நிலை குறித்துத் தங்களிடம் கேட்பதற்காகவுமே நாங்கள் தங்களிடம் வந்தோம்’ என்று கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தன. அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது.
பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்’ என்றார்கள். (அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர் ஒருவர் என்னிடம் வந்து, ‘இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது’ என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்கு முன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.57
அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி)
நூல் – (புகாரி: 7418) ➚
ஒரே அவையில் இரு கூட்டம். ஒருவர் நபி (ஸல்) நீட்டிய நற்செய்தியைத் தள்ளிவிட்டுக் கையை நீட்டினர்; மற்றவர் அதை இரு கையாலும் ஏற்று, “மார்க்கம் கற்கவே வந்தோம்” என்றனர். ஒரே கொடை, இரு உள்ளங்கள் — பெறுவது உள்ளத்தின் நிலையைப் பொறுத்தது.
இம்ரான் (ரலி) அவர்களின் வருத்தம் இந்த ஹதீஸின் உயிர். ஒட்டகம் ஓடியது என்றதும் எழுந்து சென்றார்; திரும்பி வந்தபோது அவை முடிந்திருந்தன. “அது போனால் போகட்டும் என்று இருந்திருக்க வேண்டும்” என்று வாழ்நாள் முழுக்க வருந்தினார்.
ஒரு ஒட்டகத்திற்காக இழந்த ஒரு சபை — அது வருத்தமாக நின்றது. நம்மில் எத்தனை பேர், எத்தனை ஒட்டகங்களுக்காக, எத்தனை சபைகளை இழக்கிறோம்?