நல்ல கனவு நபித்துவத்தின் ஒரு பாகம் — மூன்று வகைக் கனவுகள்

ஹதீஸ் சம்பவங்கள்

“உங்களில் உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர்”

إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ، وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا، وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَالرُّؤْيَا ثَلَاثَةٌ: فَرُؤْيَا الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللهِ، وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ، وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ، فَإِنْ رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ، وَلَا يُحَدِّثْ بِهَا النَّاسَ ” قَالَ: «وَأُحِبُّ الْقَيْدَ وَأَكْرَهُ الْغُلَّ وَالْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ» فَلَا أَدْرِي هُوَ فِي الْحَدِيثِ أَمْ قَالَهُ ابْنُ سِيرِينَ

– وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ فِي الْحَدِيثِ: قَالَ أَبُو هُرَيْرَةَ: فَيُعْجِبُنِي الْقَيْدُ، وَأَكْرَهُ الْغُلَّ، وَالْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ. وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»

– حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَهِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِذَا اقْتَرَبَ الزَّمَانُ وَسَاقَ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ فِيهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

– وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَدْرَجَ فِي الْحَدِيثِ قَوْلَهُ: وَأَكْرَهُ الْغُلَّ، إِلَى تَمَامِ الْكَلَامِ، وَلَمْ يَذْكُرْ «الرُّؤْيَا جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலம் சுருங்கும்போது ஒரு முஸ்லிம் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். ஒரு முஸ்லிம் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தைந்து பாகங்களில் ஒன்றாகும். கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும்.

ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன். கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (கால் விலங்கு மற்றும் கழுத்து விலங்கு பற்றிய) இறுதிக் குறிப்பு ஹதீஸிலேயே உள்ளதா, அல்லது அறிவிப்பாளர் இப்ன சீரீன் (ரஹ்) அவர்களின் கூற்றா என்பது எனக்குத் தெரியவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: காலில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை என் மனம் விரும்புகிறது. கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன். கால் விலங்கு மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதைக் குறிக்கும். நபி (ஸல்) அவர்கள், “இறை நம்பிக்கையாளர் காணும் நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் “காலம் சுருங்கிவிட்டால்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை. – மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன்” என்பது, இறுதிவரையுள்ள தகவலை விளக்க இடைச்சேர்ப்பாக (“இத்ராஜ்”) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அதில் “நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்” எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று இடம் பெறவில்லை.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல் – (முஸ்லிம்: 4555)

கனவுகள் மூன்று வகை என்று பிரித்துக் காட்டப்படுகிறது — அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி, ஷைத்தானிடமிருந்து வரும் கவலை, மனத்தில் ஏற்கெனவே ஓடிக்கொண்டிருப்பதன் நிழல். எல்லாக் கனவுக்கும் ஒரே பொருள் தேடுவது தவறு.

“உண்மையான கனவு காண்பவர் உண்மை பேசுபவர்” — பகலில் நாவைக் காப்பவனுக்கே இரவில் தெளிவு. கனவின் தரம் விழித்திருக்கும் நேரத்தின் தரத்தைப் பொறுத்தது.

கவலையளிக்கும் கனவைக் கண்டால் பயப்படவோ பரப்பவோ வேண்டாம். ஒரு கனவால் ஒரு நாளை இழப்பவர்கள் பலர்; அதை எப்படிக் கையாள்வது என்பதையும் மார்க்கம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.