பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா?
கேள்வி: பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா?
பதில்: செய்யாலாம்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் என்பவை தொழுகைக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நற்பணிகளுக்கும் உரிய இடமாகத் திகழ்ந்துள்ளன.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்துதான் நபித்தோழர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். போர்ப்படைகளைத் தயார்செய்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் சமுதாயம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளைச் செய்வதற்குத் தலைமையகமாக இருந்தது பள்ளிவாசல்தான்.
பள்ளிவாசலில் தொழுகைக்காவோ, அல்லது வேறு நற்காரியங்களுக்காகவோ ஒன்று கூடுவோர் அங்கு உணவைத் தயார் செய்வதோ, பள்ளிவாசலில் வைத்து உண்பதோ, பருகுவதோ மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நாங்கள் பள்ளிவாசலில் வைத்து ரொட்டியையும், இறைச்சியையும் சாப்பிடுவோராக இருந்தோம். (இவற்றைச் சாப்பிடுவதால் உலூ முறியாது என்பதால் சாப்பிட்ட) பிறகு நாங்கள் உலூச் செய்யாமல் தொழுவோம்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி)
இப்னு ஹிப்பான் (1657)
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தோம். அப்போது எங்களுக்காக உணவு வைக்கப்பட்டது. நாங்கள் (அதைச்) சாப்பிட்டோம். பிறகு நாங்கள் உலூச் செய்யாமல் தொழுதோம்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி)
அஹ்மத் (17705)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து பள்ளிவாசலில் உணவு உண்பதும், பருகுவதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே பள்ளிவாசலில் ஸஹர் உணவு ஏற்பாடு செய்வதற்கு மார்க்க அடிப்படையில் எவ்விதத் தடையுமில்லை.
அதே நேரத்தில் பள்ளிவாசலின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், தொழுகையாளிகளுக்கு பாதிப்பு வராத வகையிலும் இவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஃதிகாஃப் இருந்தபோது (ஒருநாள்) மக்களுக்கு உரையாற்றினார்கள். ”உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் இறைவனுடன் உரையாடுகிறார். எனவே உங்களில் ஒருவர் தாம் இறைவனுடன் என்ன உரையாடுகிறோம் என்பதை அறிந்து கொள்ளட்டும். தொழுகையில் நீங்கள் ஒருவருக்கொருவர் சப்தத்தை உயர்த்தி ஓதாதீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
அஹ்மத் (4928)
நபித்தோழர்கள் பள்ளிவாசலில் தனித்தனியாகத் சுன்னத் தொழுத பொது சப்தமிட்டு ஓதித் தொழுதனர். அது பிறதொழுகையாளிகளுக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் நபியவர்கள் அவ்வாறு சப்தமிட்டு ஓதுவதைக் கூட தடை செய்துள்ளார்கள். எனவே உணவு பரிமாறுகிறோம் என்ற பெயரில் பள்ளியில் தொழும் தொழுகையாளிகளுக்கு நாம் இடையூறு ஏற்படுத்தி விடாத வகையில் நடந்து கொள்ளவேண்டும்.
பள்ளிவாசலின் தூய்மை கெடாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
“இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
முஸ்லிம் (480)
மேலும் மனிதர்களுக்குத் தொல்லை தருகின்ற பச்சை வெங்காயம், பச்சைப் பூண்டு போன்றவற்றை தொழுமிடங்களில் வைத்து சாப்பிடுவதும். அத்துர்வாடையுடன் தொழுகையில் கலந்து கொள்வதும் கூடாது.
நபி (ஸல்) அவர்கள், வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்து விடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டு விட்டோம். அப்போது அவர்கள்,”து ர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில் மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன * என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
முஸ்லிம் (974)