44) வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும்
வீட்டு வேலைகள் செய்வது மனைவிக்கு கடமை இல்லை என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். இவர்களின் தவறான புரிதலால் குடும்பவாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் தான் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள்.
1950 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா பின் சயீத் அவர்கள் கூறுகிறார்கள்.
நபிகள் நாயகத்தைக் கவனித்துக் கொள்ளுதல் என்பதில் வீட்டு வேலைகளும் அடங்கும். விட்ட நோன்பைக் கூட நோற்க முடியாத அளவுக்கு அவர்களின் வேலைப்பளு இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
3113 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் மனைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கின்றார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்து கொண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்). பின்னர், நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், அல்ஹம்து லில்லாஹ்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், சுப்ஹானல் லாஹ்- அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த தாகும் என்று சொன்னார்கள்.
திருகையில் மாவறைக்கும் வீட்டு வேலையை ஃபாத்திமா (ரலி) செய்துள்ளதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ ஏன் வீட்டு வேலைகள் செய்கிறாய் என்று கேட்கவில்லை. வீட்டு வேலைகளும் பெண்களின் கடமை என்பதை இதிலிருந்து அறியலாம்.
5224 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்ட கத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால் எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டிசுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து – நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. (ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங் கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந் தேன். (வழியில்) நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, (அவர்தம் தோழர்களான) அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக இஃக், இஃக் என்று சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும் நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து (வழியில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தமது ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன் என்று கூறினேன். அதற்கு என் கணவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதை விட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது என்று கூறினார்.
அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பிவைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகளும், ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரியுமான அஸ்மா (ரலி) அவர்கள் கணவர் வீட்டு வேலைகள் தோட்ட வேலைகள் அனைத்தையும் செய்துள்ளார்கள். நீ ஏன் இப்படி வேலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை. அதை அங்கீகரிக்கிறார்கள்.