30) திருமணத்திற்கு பெண்ணுடைய சம்மதம்
தனக்குப் பிடித்த கணவனை தன் விருப்பப்படி தேர்வு செய்வதற்கு பெண்ணிற்கு முழுமையாக இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “விதவையை, அவளது உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி” என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அவளது மௌனமே சம்மதம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போனேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரியா (ரலி)