ஹுனைன் பங்கீட்டில் நீதியில்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நபி (ஸல்)

ஹதீஸ் சம்பவங்கள்

“அல்லாஹ்வும் அவன் தூதரும் நீதியுடன் நடக்காவிட்டால், வேறு யார் நடப்பார்கள்?”

لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ آثَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا فِي الْقِسْمَةِ، فَأَعْطَى الْأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنَ الْإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى أُنَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ، وَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ، فَقَالَ رَجُلٌ: وَاللهِ، إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا عُدِلَ فِيهَا وَمَا أُرِيدَ فِيهَا وَجْهُ اللهِ، قَالَ فَقُلْتُ: وَاللهِ، لَأُخْبِرَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ، قَالَ: فَتَغَيَّرَ وَجْهُهُ حَتَّى كَانَ كَالصِّرْفِ، ثُمَّ قَالَ: «فَمَنْ يَعْدِلُ إِنْ لَمْ يَعْدِلِ اللهُ وَرَسُولُهُ»، قَالَ: ثُمَّ قَالَ: «يَرْحَمُ اللهُ مُوسَى، قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ» قَالَ قُلْتُ: «لَا جَرَمَ لَا أَرْفَعُ إِلَيْهِ بَعْدَهَا حَدِيثًا»

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்துப் போர்ச்செல்வங்களிலிருந்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன்-ரலி) அவர்களுக்கும் அதைப் போன்றே (நூறு ஒட்டகங்கள்) கொடுத்தார்கள். அரபுகளில் முக்கியமானவர்கள் சிலருக்கும் கொடுத்தார்கள்.

அன்றையதினம் அவர்களுக்கெல்லாம் பங்கீட்டில் முன்னுரிமை அளித்தார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பங்கீட்டில் நீதி வழங்கப்படவில்லை; அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை” என்று சொன்னார். உடனே நான், “இதை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்” என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் சென்று அவர் சொன்னதைத் தெரிவித்தேன். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் சிவப்புச்சாயம் போல் மாறிவிட்டது.

பிறகு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறுயார் தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கு கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், (அதைச்) சகித்துக் கொண்டார்கள்” என்று கூறினார்கள். நான் “உறுதியாக! இனிமேல் எந்தச் செய்தியையும் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லமாட்டேன்” என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 1918)

ஹுனைன் போரின் செல்வப் பங்கீட்டில் ஒரு மனிதர் முணுமுணுத்த குற்றச்சாட்டு இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக நபி (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டியது. அதைக் கேட்டதுமே அவர்களின் முகநிறம் மாறியது. ஆனாலும் தம்மை நியாயப்படுத்த அவர்கள் பட்டியல் வைத்துப் பேசவில்லை — மூஸா (அலை) இதைவிட அதிகம் புண்படுத்தப்பட்டும் பொறுமை காத்தார்கள் என்று நினைவுகூர்ந்தார்கள்.

ஒரு முடிவு நமக்குச் சாதகமாக இல்லாத மாத்திரத்தில், அதைப்பற்றிய முணுமுணுப்பை நாம் எளிதாக நம்பிவிடுகிறோம், இன்னும் எளிதாகப் பரப்பிவிடுகிறோம். இப்னு மஸ்ஊத் (ரலி) தாமே பிறகு எடுத்த முடிவு நமக்கு வழிகாட்டுகிறது — ‘இனி இப்படியொரு பேச்சை நான் கொண்டு போக மாட்டேன்’ என்று. முழுப் படத்தையும் பார்க்காமல் கேட்ட ஒரு குறையை அடுத்தவரிடம் கொண்டு சேர்க்கும் முன், ஒரு நிமிடம் நிறுத்திக் யோசிப்போம்.