வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் ஏன் சூடேறுவதில்லை?

அறிவியல் உண்மைகள்

வண்ணத்துப்பூச்சிகள் மிக அழகாக இருக்கும். அவற்றின் இறகுகளில் பல வண்ணங்கள் இருக்கும். இவை பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி வாழும். சில வண்ணத்துப்பூச்சிகள் செடிகளையும் சாப்பிடும்.

உலகம் முழுவதும் சுமார் 18,000 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. அந்துப்பூச்சிகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை சுமார் 1,80,000 ஆகும். இவற்றின் இறகுகள் சிறிய செதில்களால் மூடப்பட்டிருக்கும். சில வண்ணத்துப்பூச்சிகள் பறவைகளைப் போல நீண்ட தூரம் கூட்டமாகப் பறந்து செல்லும்.

வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளில் இரண்டு விதமான வண்ணங்கள் உள்ளன. ஒன்று, சாயங்கள் போல வேதிப்பொருட்களால் உருவாகும் நிறமிகள். மற்றொன்று, வானவில் போல ஒளியின் அமைப்பால் உருவாகும் நிறங்கள். அவற்றின் கண்கள் கூர்மையானவை; தடைகளைத் தவிர்த்துப் பறக்க உதவும்.

வண்ணத்துப்பூச்சிகள் வேகமாகப் பறக்கும்போது அவற்றின் இறகுகள் சூடேற வேண்டும் என்று இயற்பியல் விதிகள் சொல்கின்றன. ஆனால், பகலில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் சூரிய வெப்பத்தினால் கூட சூடேறுவதில்லை என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் குளிர்ந்திருப்பதற்கு அவற்றின் தனித்துவமான அமைப்பே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இறகுகளில் உள்ள உயிருள்ள பகுதிகள் வெப்பத்தை விரைவாக வெளியேற்றுகின்றன.

இறகுகளில் உள்ள பூச்சிக்குருதியைக் கடத்தும் நாளங்கள் மற்றும் ஆண் வண்ணத்துப்பூச்சிகள் வெளியிடும் மணமுள்ள பைகள் வெப்பத்தை வேகமாக வெளியேற்றுகின்றன. இதைச் சுற்றியுள்ள உயிரற்ற செதில்களை விட, இந்த உயிருள்ள பகுதிகளே வெப்பத்தை வெளியேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உடல் வெப்பநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், வண்ணத்துப்பூச்சியின் பறக்கும் திறன் பாதிக்கப்படும். மார்புப் பகுதியில் உள்ள தசைகள் ஓரளவுக்குச் சூடாக இருந்தால் மட்டுமே, வண்ணத்துப்பூச்சி இறகுகளை வேகமாக அசைத்துப் பறக்க முடியும்.

இறகுகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால், மார்புத் தசையை விட அதிக வெப்பம் இருந்தால், அவை தேவைக்கு அதிகமாகச் சூடாகிவிடும். இது பறப்பதற்குத் தடையாக இருக்கும்.

வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் செதில்களால் ஆனவை என்பதால், அவை மனிதர்களின் முடி அல்லது பறவைகளின் இறகுகள் போல உயிரற்றவை என்று பலர் நினைக்கலாம். ஆனால், அவை பறப்பதற்கும், வெப்பத்தை வெளியேற்றுவதற்கும் உயிருள்ள திசுக்களையும் கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் மிகவும் மெல்லியதாகவும், ஓரளவு ஒளி ஊடுருவும் தன்மையுடனும் இருப்பதால், அகச்சிவப்பு ஒளிப்படக் கருவிகளால் அவற்றிலிருந்து வெளியேறும் வெப்பத்தைச் சுற்றுப்புற வெப்பத்திலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

அதனால், ஆய்வாளர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அகச்சிவப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஐம்பது வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளின் வெப்பத்தை அளந்து ஆய்வு செய்துள்ளனர்.

இறகுகளில் உள்ள குழல் வடிவ மீநுண் அமைப்புகள், உயிருள்ள திசுக்களிலிருந்து அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றுகின்றன. இறகுகளில் உள்ள குருதிக் குழாய்கள் தடிமனான மென்பொருளால் மூடப்பட்டுள்ளன. வாசனைப் பைகளும் மீநுண் அமைப்பையும், கூடுதல் மென்பொருளையும் கொண்டுள்ளன.

தடிமனான, குழல் வடிவப் பொருட்கள், மெல்லிய, திடமான பொருட்களை விட அதிக வெப்பத்தை விரைவாக வெளியேற்றும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அமைப்புகள் வண்ணத்துப்பூச்சியின் இறகுகளை ஒரு குறிப்பிட்ட அளவு வரை வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன. அதிக வெப்பமுள்ள ஒளியின் வெப்பத்தைத் தாங்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றன.

இறகுகளில் உள்ள செதில்கள் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சி வெப்பத்தை உண்டாக்கியபோது, வண்ணத்துப்பூச்சிகள் அதை உணரவில்லை. ஆனால், அவற்றின் குருதிக் குழாய்கள் சூடாக்கப்பட்டபோது, அவை இறகுகளை அசைக்கின்றன அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றன என்று ஆய்வாளர் கூறுகிறார்.

வெயிலில் பறக்கும்போது ஏற்படும் அதிகப்படியான வெப்பம், இறகுகளில் உள்ள உயிருள்ள திசுக்களால் வெளியேற்றப்படுகிறது. சில வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளில் இதயம் துடிப்பது போன்ற அமைப்பு இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இதயம் போன்ற அமைப்பு, பூச்சிக்குருதியை ஆண் வண்ணத்துப்பூச்சியின் வாசனைப் பைகளுக்குள் செலுத்துகிறது. நிமிடத்திற்குச் சில முறை இறகுகளை அசைப்பதன் மூலம் வண்ணத்துப்பூச்சிகள் இதைச் செய்கின்றன.

தடையில்லாமல் பறப்பதற்கு இறகுகளின் எடை மிகக் குறைவாக இருக்க வேண்டும். அப்படி எடை குறைந்த இறகுகளின் நடுவில் இதயம் போன்ற அமைப்பு இருப்பது மிகவும் ஆச்சரியமானது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இதய அமைப்பு வாசனைப் பைகள் சிறப்பாகச் செயல்படவும் உதவுகிறது.

இறைவன் படைத்த இந்த உலகத்தில், வண்ணத்துப்பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களும் எவ்வளவு நுட்பமான அமைப்புகளுடன் வாழ்கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். அவற்றின் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு அமைப்பிலும் இறைவனின் ஞானமும் ஆற்றலும் வெளிப்படுகின்றன.

ஆதாரம்: தினமணி