மைமூனா (ரலி) வீட்டில் உடும்பைச் சாப்பிட்ட காலித் (ரலி) — நபி (ஸல்) கை எடுத்தது ஏன்?
“இல்லை; ஆயினும் அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே என் மனம் அதை விரும்பவில்லை”
أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَيْمُونَةَ، وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ، فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا، قَدْ قَدِمَتْ بِهِ أُخْتُهَا حُفَيْدَةُ بِنْتُ الحَارِثِ مِنْ نَجْدٍ، فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ قَلَّمَا يُقَدِّمُ يَدَهُ لِطَعَامٍ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ، فَأَهْوَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ إِلَى الضَّبِّ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسْوَةِ الحُضُورِ: أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدَّمْتُنَّ لَهُ، هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَنِ الضَّبِّ، فَقَالَ خَالِدُ بْنُ الوَلِيدِ: أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لاَ، وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي، فَأَجِدُنِي أَعَافُهُ» قَالَ خَالِدٌ: فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيَّ
அல்லாஹ்வின் வாள்’ என்றழைக்கப்படும் காலித் இப்னு வலீத்(ரலி) அறிவித்தார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ்(ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா(ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள்.
இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் ‘நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள்.
அப்போது நான் ‘உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை’ என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: காலித் இப்னு வலீத் (ரலி)
நூல் – (புகாரி: 5391) ➚
தனக்குப் பிடிக்காத ஒன்றை, தடை செய்யப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் சொல்லவில்லை. தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் மார்க்கத் தீர்ப்பையும் அவர்கள் தெளிவாகப் பிரித்துக் காட்டியது, இன்று நாமும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நுட்பமான பாடம்.
நபி (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே காலித் (ரலி) அவர்கள் தயக்கமின்றி உடும்பைச் சாப்பிட்டார்கள். ஒருவருடைய பழக்கமோ விருப்பமோ மற்றவருக்குக் கட்டாயமாக இருக்க வேண்டியதில்லை என்பதை, நபி (ஸல்) அவர்களின் அமைதியான பார்வையே நமக்குக் கற்றுத் தருகிறது.