முதுமை: உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன?
வயதாவது என்பது உடலின் செல்கள், உறுப்புகளின் செயல்திறன் காலப்போக்கில் குறைவதைக் குறிக்கிறது. இது ஓர் இயற்கையான உயிரியல் செயல்முறை. மனித உடல் தினமும் சுமார் 330 பில்லியன் செல்களைப் புதுப்பிக்கிறது. சராசரியாக ஒவ்வொரு 7 முதல் 10 வருடங்களுக்குள், ஒரு முழுமையான செல் புதுப்பித்தல் நடைபெறுகிறது.
உடலில் உள்ள செல்கள் தொடர்ந்து இறந்து, புதிய செல்களால் மாற்றப்படுகின்றன. இரைப்பை உட்சுவர் செல்கள் 5 முதல் 7 நாட்களிலும், தோல் செல்கள் 2 முதல் 4 வாரங்களிலும் புதுப்பிக்கப்படுகின்றன. மூளை செல்கள் மற்றும் கண் லென்ஸ் செல்கள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் நீடிக்கின்றன; அவை புதுப்பிக்கப்படுவதில்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இந்த செல்கள் ஆரோக்கியமாகப் புதுப்பிக்கப்பட உதவுகின்றன.
முதுமையின் வெளிப்படையான அடையாளங்களாக முகத்தில் சுருக்கங்கள், நரைமுடிகள், பார்வை மங்குதல் ஆகியவை உள்ளன. முடிக்கு நிறம் தரும் மெலனின் உற்பத்தி குறைவதால் முடி நரைக்கிறது. தோலின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான கொலாஜன், எலாஸ்டின், ஹயலுரோனிக் அமிலம் ஆகியவற்றின் அளவு குறைவதால் சுருக்கங்கள் தோன்றுகின்றன.
உள் காதில் உள்ள க்ளியா பகுதியில் உள்ள நுண்ணிய முடி உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவதால் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. கண் லென்ஸ் தடிமனாகி நெகிழ்வுத்தன்மையை இழப்பதால் அருகிலுள்ள பொருட்களைப் பார்க்கும் திறன் குறைகிறது. இது முதுமைப் பார்வைக் குறைபாடு எனப்படும்.
இறைவன் மனித உடலை நுட்பமாகப் படைத்து, ஒவ்வொரு செல்லிலும் புதுப்பித்தலையும், மாற்றங்களையும் நிகழச் செய்கிறான். இந்த அற்புதமான படைப்பின் ஒழுங்கையும், அதன் செயல்பாடுகளையும் உணர்ந்து, ஆரோக்கியமான வாழ்வு வாழ நாம் முயற்சிப்போம்.
ஆதாரம்: தினமணி