மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா?
பூமியில் வானம் நீல நிறமாகத் தெரிவதற்குக் காரணம் ‘ரேலே ஒளிச்சிதறல்’ (Rayleigh scattering) என்ற ஒரு நிகழ்வுதான்.
சூரியனில் இருந்து வரும் ஒளி பல வண்ணங்களின் கலவையாகும். இந்த ஒளி பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும்போது சிதறடிக்கப்படுகிறது.
காற்றில் உள்ள மிகச் சிறிய துகள்கள், அதாவது வாயு மூலக்கூறுகள், ஒளியைச் சிதறடிக்கும்போது இந்த ரேலே ஒளிச்சிதறல் ஏற்படுகிறது.
பூமியின் காற்று மண்டலம் நீல நிற ஒளியை மற்ற நிறங்களைவிட அதிகமாக எல்லாப் பக்கமும் சிதறடிக்கிறது.
இப்படிச் சிதறிச் செல்லும் நீல ஒளிக்கதிர்கள் காற்றில் உள்ள தூசுகளில் பட்டு மீண்டும் பூமியை நோக்கித் திரும்புகின்றன.
இதனால்தான் நாம் வானத்தைப் பார்க்கும்போது எல்லாத் திசைகளிலும் நீல நிறமாகத் தெரிகிறது.
வெள்ளி அல்லது செவ்வாய் போன்ற வேறு கோள்களில் வானம் என்ன நிறத்தில் தெரியும் என்பதைப் புரிந்துகொள்ள, பூமியில் ஏன் நீல நிறம் அதிகம் சிதறடிக்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கோளின் காற்று மண்டலத்தில் எந்த வகையான வாயுக்கள் உள்ளன என்பதைப் பொறுத்து, குறிப்பிட்ட நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்படும்.
பூமியின் காற்று மண்டலத்தில் சுமார் எழுபத்தெட்டு விழுக்காடு நைட்ரஜன் வாயுவும், இருபத்தொரு விழுக்காடு ஆக்சிஜன் வாயுவும் உள்ளன.
இந்த இரண்டு வாயுக்களும் சேர்ந்து மொத்தக் காற்றில் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு ஆகும்.
ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிக்கின்றன. அதனால்தான் பூமியில் வானம் நீலமாக இருக்கிறது.
சுமார் இருநூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் வானம் நீலமாக இருந்திருக்காது; அது ஆரஞ்சு நிறத்தில் இருந்திருக்கும்.
அந்தக் காலத்தில் பூமியின் காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கணிசமான அளவில் இல்லை.
நைட்ரஜன் தவிர, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நீராவி போன்ற வாயு மூலக்கூறுகளே அதிகமாக இருந்தன.
இந்த வாயுக்கள் ஒளியைச் சிதறடிக்கும் விதத்தில் தனித்தன்மை கொண்டவை.
சயனோபாக்டீரியா (Cyanobacteria) என்ற நுண்ணுயிரிகள் பூமியில் தோன்றிய பின்னரே காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடியது.
இந்த பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு, சூரிய ஒளியின் உதவியால் ஆக்சிஜனை வெளியிடும் திறன் கொண்டவை.
நீராவி மழையாகப் பொழிந்து கடல்கள் உருவாயின. மீத்தேன் போன்ற வாயுக்கள் சிதைந்து போயின.
இப்படியாகப் பூமியின் வானம் மெதுவாக நீல நிறமாக மாறியது.
பூமிக்கு வெளியே நிலவுக்குச் சென்றால், வானம் கருப்பாகவே இருக்கும். நிலவில் காற்று மண்டலமே இல்லாததால், ஒளிச்சிதறல் எதுவும் நடக்காது.
நிலவின் தரை சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால், பகல் நேரத்தில் கண்ணைக் கூசும் அளவுக்கு வெளிச்சம் இருக்கும்.
சூரியன் இருக்கும் பகுதி வெளிச்சமாகவும், சூரியனை மறைத்துப் பார்த்தால் மீதமுள்ள வானம் கருமையாகவும் தெரியும்.
நிலவைப் போலவே புதன் கோளுக்கும் காற்று மண்டலம் இல்லை. அங்கும் வானம் கருமையாகவே இருக்கும்.
செவ்வாய் கோளில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோபோக்கள், அங்குள்ள வானத்தின் படங்களை அனுப்பியுள்ளன.
செவ்வாயில் சூரியன் உதிக்கும் அல்லது மறையும் நேரத்தில் வானம் நீலமாகத் தெரியும்.
செவ்வாயின் காற்று மண்டலத்தில் தொண்ணூற்று ஐந்து விழுக்காடு கார்பன் டை ஆக்சைடு வாயுவும், குறைந்த அளவு நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயுக்களும் உள்ளன.
இந்தக் காற்று மண்டலம் நீல நிற ஒளியை மிகக் குறைவாகவே சிதறடிக்கும்.
எனவே, சூரிய உதயம் மற்றும் மறைவு நேரத்தில் சிதறாமல் நேரடியாக நம் கண்களை வந்து சேரும் ஒளியில் நீல நிறம் அதிகமாக இருக்கும்.
பகல் நேரத்தில் காற்றில் வீசும் தூசியின் அளவைப் பொறுத்து, செவ்வாயில் வானம் மஞ்சள்-பழுப்பு நிறமாகவோ, இளஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது தேன் நிறமாகவோ காட்சி தரும்.
அடர்த்தியான காற்று மண்டலம் கொண்ட வெள்ளிக் கோளில், சுமார் தொண்ணூற்று ஆறு புள்ளி ஐந்து விழுக்காடு கார்பன் டை ஆக்சைடு உள்ளது.
சுமார் மூன்று புள்ளி ஐந்து விழுக்காடு நைட்ரஜன் வாயுவும் அங்கு உள்ளது.
வெள்ளியின் காற்று மண்டலம் பூமியின் காற்று மண்டலத்தைவிட சுமார் தொண்ணூற்று மூன்று மடங்கு அதிக அடர்த்தி கொண்டது.
இவ்வளவு அடர்த்தியான காற்றைக் கடந்து சூரிய ஒளி ஓரளவுக்கே உள்ளே நுழையும்.
எனவே, பூமியைவிடச் சூரியனுக்கு அருகில் இருந்தாலும், வெள்ளியில் நண்பகல் சூரிய வெளிச்சம், பூமியில் சூரியன் மறைந்த பின் இருக்கும் அந்தி சாயும் வெளிச்சத்தின் அளவுக்கே இருக்கும்.
ஆகவே, வெள்ளிக் கோளின் தரையிலிருந்து வானத்தைப் பார்த்தால், அது தங்க-மஞ்சள் அல்லது ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் காட்சி தரும்.
சூரியனைச் சுற்றி கோள்கள் இருப்பது போலவே, வேறு நட்சத்திரங்களைச் சுற்றியும் கோள்கள் உள்ளன. இவை ‘புறக்கோள்கள்’ (Exoplanets) என்று அழைக்கப்படுகின்றன.
அந்தப் புறக்கோள்களின் காற்று மண்டலத்தில் உள்ள பொருள்கள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இயற்பியல் விதிகளைக் கொண்டு, அங்கு வானம் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நாம் முன்கூட்டியே அறிய முடியும்.
எண்ணற்ற புறக்கோள்களின் வானம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெவ்வேறு வண்ணக் கலவைகளில் ஜொலிக்கும்.
ஆகவே, எல்லா கோள்களின் வானமும் நீல நிறமாக இருக்காது.
இறைவன் இந்த அண்டத்தை எவ்வளவு நுட்பமாகப் படைத்து, ஒவ்வொரு கோளுக்கும் தனித்தன்மை வாய்ந்த வானத்தை அமைத்துள்ளான் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அவனுடைய படைப்பின் அழகும், ஒழுங்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
ஆதாரம்: இந்து தமிழ் திசை