பூமியின் வடிவம் கோளம் என்று எப்படித் தெரிந்துகொண்டார்கள்?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி தட்டையாக இருக்கும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், இப்போது விண்வெளிக் கலங்கள் எடுத்த படங்களை வைத்து பூமி ஒரு பந்து போல இருக்கிறது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.
ஆரியபடர் என்ற இந்திய அறிஞர் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார். அவர், பூமி தட்டையானது என்ற பழைய கருத்தை மறுத்து, பூமி கோள வடிவம் கொண்டது என்று கூறினார். பூமியின் மேலே இருந்துகொண்டே அவர் இதை எப்படித் தெரிந்துகொண்டார்?
நம் கண்களுக்குத் தெரியும் நிலப்பரப்பு மேடும் பள்ளமுமாக இருந்தாலும், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் நீர்மட்டம் தட்டையாக இருக்கும். அதனால், பூமி தட்டையானது என்றும், அதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால்தான் மலைகளும் பள்ளங்களும் உருவாகின்றன என்றும் மக்கள் நினைத்தார்கள்.
கிரேக்கம் போன்ற நாடுகளில், தட்டையான பூமியின் கிழக்குப் பக்கத்தில் சூரியன் உதித்து, தலைக்கு மேலே வந்து மேற்கே மறைகிறது என்று நம்பினார்கள். ஒரு தட்டையான வட்டத் தட்டின் மேல் ஒரு சட்டி கவிழ்த்தது போல வானம் இருக்கிறது என்றும் நினைத்தார்கள்.
இந்தியப் புராணங்களின்படி, வட்டமான தட்டையான பூமிக்கு நடுவில் பெரிய மேரு மலை உள்ளது. சூரியன் இந்த மலையைச் சுற்றி வருகிறது. மலையின் ஒரு பக்கத்தில் சூரியன் இருந்தால் பகலாகவும், மறுபக்கத்தில் நிழல் விழுவதால் இரவாகவும் இருக்கும் என்று கருதினார்கள்.
இரவு வானில் வடதுருவ விண்மீன் (Polaris) என்ற ஒரு நட்சத்திரம் உள்ளது. இந்தியாவில் தெற்கே கன்னியாகுமரியில் இருந்து வடக்கே காஷ்மீர் வரை சென்றாலும், இந்த நட்சத்திரம் வடக்குத் திசையில்தான் தெரியும். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் கிழக்கில் தோன்றி, சூரியனைப் போல வானில் உயர்ந்து, பின்னர் மேற்கில் மறையும். ஆனால், இந்த நட்சத்திரம் மட்டும் ஒரு வண்டிச் சக்கரத்தின் அச்சு போல, வானில் ஒரே இடத்தில் நிலையாகக் காணப்படும்.
இந்த நட்சத்திரத்தை உற்று நோக்கியபோது சில உண்மைகள் தெரியவந்தன. தெற்கே உள்ள கன்னியாகுமரியில் இருந்து இந்த நட்சத்திரத்தைப் பார்த்தால், வடக்குத் திசையில் அடிவானத்திலிருந்து சுமார் எட்டு டிகிரி உயரத்தில் தெரியும். இதே நட்சத்திரத்தைக் கன்னியாகுமரிக்கு வடக்கே உள்ள உஜ்ஜைனியில் இருந்து பார்த்தால், வடக்குத் திசையில் சுமார் இருபத்து மூன்று டிகிரி உயரத்தில் தெரியும்.
ஆச்சரியம் என்னவென்றால், கன்னியாகுமரிக்கு நேர் கிழக்கே உள்ள இலங்கையின் அனுராதபுரம் சென்று பார்த்தாலும் எந்த மாற்றமும் இல்லை; அதே எட்டு டிகிரி உயரத்திலேயே வடதுருவ விண்மீன் தென்படுகிறது. கன்னியாகுமரிக்கு நேர் மேற்கே லட்சத்தீவுகளின் மினிகாய் தீவுக்குச் சென்றாலும் மாற்றமில்லை; அதே எட்டு டிகிரி உயரத்தில்தான் தெரியும்.
ஆனால், கன்னியாகுமரிக்கு நேர் தெற்கே கடலுக்குள் சென்றால் வடதுருவ விண்மீனின் கோண உயரம் குறைகிறது. இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், ஒரு இடத்திலிருந்து நேர் கிழக்கு அல்லது மேற்கு நோக்கிச் சென்றால், வடதுருவ விண்மீனின் உயரத்தில் மாற்றம் இல்லை. வடக்கு நோக்கிச் சென்றால் அதன் கோண உயரம் கூடுகிறது; தெற்கு நோக்கிச் சென்றால் கோண உயரம் குறைகிறது.
பூமி தட்டையானது என்றால், இது நடக்காது. பூமி ஒரு பந்து போல இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை வைத்துதான் ஆரியபடர், பூமியின் வடிவம் கோளம் என்ற முடிவுக்கு வந்தார். அவர், சுமார் நூற்று ஐம்பது கிலோமீட்டர் நேர் வடக்கே சென்றால், வடதுருவ விண்மீனின் கோண உயரம் ஒரு டிகிரி உயர்கிறது என்றும் அளவீடு செய்து கண்டறிந்தார்.
மைல், கிலோமீட்டர் போல, பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட நீள அளவே ‘யோசனை’ ஆகும். ஒரு யோசனை என்பது ஒரு சராசரி மனிதனின் உயரத்தைப் போல எட்டாயிரம் மடங்கு என்று ஆரியபடர் குறிப்பிட்டுள்ளார். கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் என்ற அறிஞர், வேறு ஒரு வழியில் பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தார்.
துறைமுகத்தை விட்டு வெகுதூரம் செல்லும் கப்பல்களைப் பார்த்தால், அவை தூரம் செல்லச் செல்ல சிறியதாகத் தெரிவதுடன், அதன் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதிவரை மெதுவாகக் கண்ணில் இருந்து மறைந்தது. தொடுவானத்தை அடைந்த பின்னர் முழு கப்பலும் மறைந்துவிட்டது.
பூமி தட்டையானது என்றால், கடலில் தூரமாகச் செல்லும் கப்பலின் உருவம் சிறியதாகத் தெரியும். ஆனால், கப்பலின் அடி முதல் மேல் வரை தெரியும். பூமி கோள வடிவத்தில் இருந்தால்தான், கப்பல் தூரம் செல்லச் செல்ல, முதலில் அதன் அடிப்பகுதி கண்ணில் இருந்து மறையும். பின்னர் மெதுவாக நடுப்பகுதியும் மறையும். இறுதியில் அதன் உச்சிப் பகுதியும் மறைந்து, முழு கப்பலும் கண்ணுக்குத் தெரியாமல் போகும். இந்த நிகழ்வைக் கொண்டே பூமியின் வடிவம் கோளம் என்று அரிஸ்டாட்டில் முடிவுசெய்தார்.
இறைவன் எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் கொண்டவன் என்பதை இந்த உண்மைகள் நமக்குக் காட்டுகின்றன. அவன் படைத்த இந்த உலகமும், அதன் இயக்கங்களும் எவ்வளவு துல்லியமாக உள்ளன என்பதை எண்ணிப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை