பள்ளிவாசலில் கொட்டப்பட்ட பஹ்ரைன் செல்வம் — ஒரு வெள்ளிக் காசு கூட மீதமில்லை

ஹதீஸ் சம்பவங்கள்

“அள்ளிக் கொள்வீராக!” — தூக்க முடியாத அளவு அள்ளிய அப்பாஸ் (ரலி)

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَقَالَ: «انْثُرُوهُ فِي المَسْجِدِ» وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلَّا أَعْطَاهُ، إِذْ جَاءَهُ العَبَّاسُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: أَعْطِنِي، فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلًا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْ» فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ إِلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ» فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ» فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ، فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ، ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا – عَجَبًا مِنْ حِرْصِهِ – فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ

அனஸ்(ரலி) அறிவித்தார். பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருள்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. ‘அவற்றைப் பள்ளிவாசலிலேயே கொட்டுங்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொருட்களிலேயே அதுதான் மிக அதிக அளவாக இருந்தது. அதற்கு எந்த மதிப்புமளிக்காமல் நபி(ஸல்) அவர்கள் தொழச் சென்றார்கள். தொழுது முடிந்ததும் அப்பொருட்களின் அருகில் அமர்ந்து கொண்டு காண்பவர்களுக்கெல்லாம் வழங்கி கொண்டிருந்தார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்(ரலி) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! (பத்ருப் போரில் முஸ்லிம்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட) நானும் (என் சகோதரர் அபூ தாலிபுடைய மகன்) அகீலும் விடுதலை பெறுவதற்காக (நான் பெறும் தொகையை)ப் பணயமாக வழங்கியுள்ளேன். எனவே எனக்கு (தாராளமாக) வழங்குங்கள்!’ என்று கேட்டார்கள். ‘(உமக்குத் தேவையான அளவுக்கு) அள்ளிக் கொள்வீராக!’ என்று நபி(ஸல்) கூறியதும் அப்பாஸ்(ரலி) தங்களின் துணியில் அது கொள்ளுமளவுக்கு அள்ளினார்கள்.

பின்னர் அதைத் தூக்க அவர் முயன்றபோது அவரால் இயலவில்லை. ‘இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது இதைத் தூக்கி விடச் சொல்லுங்களேன்’ என்று அவர் கேட்டதற்கு ‘முடியாது’ என்று நபி(ஸல்) கூறினார்கள். ‘அப்படியானால் நீங்களாவது என் மீது இதைத் தூக்கி வையுங்கள்!’ என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘முடியாது’ என்றனர். அதில் சிறிதளவை அள்ளி வெளியே போட்டுவிட்டு அவர் தூக்க முயன்றார். அப்போதும் அவரால் இயலவில்லை. ‘இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது தூக்கி வைக்கச் செய்யுங்கள்!’

என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘முடியாது’ என்றனர். ‘நீங்களாவது தூக்கி விடுங்களேன்’ என்று அவர் கேட்க, அதற்கு ‘முடியாது’ என்றனர். மேலும் சிறிதளவை அள்ளி வெளியில் போட்டுவிட்டு அதைத் தம் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அப்பாஸ்(ரலி) நடக்கலானார். அவர் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள், ‘அவரின் பேராசையை எண்ணி வியந்தவர்களாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்திலிருந்து எழும்போது ஒரு வெள்ளிக் காசு கூட மீதமாக இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

நூல் – (புகாரி: 421)

இதுவரை வந்த மிகப் பெரிய செல்வம். அதைப் பார்க்கக்கூட நிற்காமல் தொழச் சென்றார்கள். செல்வத்தின் மதிப்பை ஒரு நடையிலேயே சொல்லிவிட்டார்கள்.

“தூக்கி விடுங்கள்” என்று கேட்டபோது “முடியாது” என்றார்கள். ஆசைப்பட்டு அள்ளியதைத் தானே சுமக்க வேண்டும் — யாரும் சுமந்து தர மாட்டார்கள்.