நபியின் மறைமுக வார்த்தையில் அழுத அபூபக்ர் (ரலி) — மூடப்பட்ட வாசல்கள்

ஹதீஸ் சம்பவங்கள்

“பள்ளியில் அபூபக்ரின் வாசல் தவிர மற்ற வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்”

خَطَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ»، فَبَكَى أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقُلْتُ فِي نَفْسِي مَا يُبْكِي هَذَا الشَّيْخَ؟ إِنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ العَبْدَ، وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا، قَالَ: «يَا أَبَا بَكْرٍ لاَ تَبْكِ، إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا مِنْ أُمَّتِي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلاَمِ وَمَوَدَّتُهُ، لاَ يَبْقَيَنَّ فِي المَسْجِدِ بَابٌ إِلَّا سُدَّ، إِلَّا بَابُ أَبِي بَكْرٍ»

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் ‘அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்ததெடுக்க ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்தார்’ என்றார்கள். (இதைக் கேட்ட) அபூ பக்ரு(ரலி) அழலானார்கள். ‘இந்த பெரியவர் ஏன் அழுகிறார்? தன்னிடம் உள்ளது வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா என்று ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தபோது அந்த அடியார் இறைவனிடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக அழ வேண்டுமா என்ன?’

என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி(ஸல்) அவர்கள் தாம். (தங்களின் மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்) அபூ பக்ரு(ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அபூ பக்ரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூ பக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்றிருப்பேன்.

என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூ பக்ரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்.’

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி)

நூல் – (புகாரி: 466)

தன்னிடம் உள்ளதையா, இவ்வுலகையா தேர்ந்தெடுப்பது என்று நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாகச் சொன்னதைக் கேட்டதுமே அபூபக்ர் (ரலி) அழத் தொடங்கினார்கள்; அது தம் இறப்பையே குறிப்பிடுவதாக அவர்கள் மட்டும் புரிந்துகொண்டார்கள். நெருங்கிய நேசிப்பு என்பது, சொல்லப்படாததைக் கூட உணரும் அளவிற்கு ஆழமானது என்பதை இந்தக் காட்சி நமக்குக் காட்டுகிறது.

நட்பாலும் செல்வத்தாலும் தமக்கு மிகுந்த உதவியாக இருந்தவர் அபூபக்ர் (ரலி) என்று நபி (ஸல்) அவர்கள் பகிரங்கமாகவே பாராட்டினார்கள். வாழ்நாள் முழுக்க அருகிலிருந்து துணை நின்றவரை, கடைசி காலத்திலும் மறக்காமல் கெளரவிப்பதே உண்மையான நட்பு என்பதை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.