நபியிடம் மேலங்கியைக் கேட்ட மனிதர் — அது ஏன் அவருடைய கஃபனானது?

ஹதீஸ் சம்பவங்கள்

“நான் மரணிக்கும் நாளில் அது எனக்குக் கஃபனாக ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்”

جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ، قَالَ: أَتَدْرُونَ مَا البُرْدَةُ؟ فَقِيلَ لَهُ: نَعَمْ، هِيَ الشَّمْلَةُ مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا، فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ، فَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: يَا رَسُولَ اللَّهِ، اكْسُنِيهَا. فَقَالَ: «نَعَمْ». فَجَلَسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَجْلِسِ، ثُمَّ رَجَعَ، فَطَوَاهَا ثُمَّ أَرْسَلَ بِهَا إِلَيْهِ، فَقَالَ لَهُ القَوْمُ: مَا أَحْسَنْتَ، سَأَلْتَهَا إِيَّاهُ، لَقَدْ عَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلًا، فَقَالَ الرَّجُلُ: وَاللَّهِ مَا سَأَلْتُهُ إِلَّا لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ، قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ

அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) ‘ஒரு பெண்மணி (நபி(ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!’ எனக் கூறிவிட்டு, ‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்! அது ஓரப்பகுதி நெய்யப்பட்ட ஒரு சால்வை!’ என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். அப்பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றார்கள்.

(அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதை வேட்டியாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருமனிதர். ‘இறைத்தூதர் அவர்களே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘சரி தருகிறேன்!’ என்று சொல்லிவிட்டு, சபையில் அமர்ந்திருந்தார்கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து அதைச் சுருட்டி, (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அதை அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், ‘நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங்கையாக திருப்பியனுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே!’

எனக் கூறினார். அதற்கு அம் மனிதர், ‘நான் மரணிக்கும் நாளில் அது எனக்குக் கஃபனாக ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்!’ என்றார். அது அவ்வாறே, அவரின் கஃபனாக ஆனது!

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

நூல் – (புகாரி: 2093)

தமக்குத் தேவைப்பட்டு அணிந்திருந்த ஆடையைக் கூடக் கேட்டவுடன் மறுக்காமல் தந்துவிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள். கேட்பவரை வெறுங்கையாக அனுப்பாத அந்தப் பெருந்தன்மையே அவர்களின் அடையாளம்.

மற்றவர்கள் அவரைப் பேராசைக்காரர் என நினைத்தபோது, அந்த மனிதர் நினைத்திருந்தது தன் மரணத்தைத்தான். நாளையப் பற்றி நினைப்பதுபோல, நம் மரணத்தைப் பற்றியும் இதே அளவு தயார் நிலையுடன் இருக்கிறோமா என்பதை இந்தச் சம்பவம் நம்மிடம் கேட்கிறது.