நபிக்காக வேதம் எழுதியவரை மதம் மாறி இறந்தபின் பூமியே மறுத்தது

ஹதீஸ் சம்பவங்கள்

காலை நேரந்தோறும் பூமி அவரைத் தூக்கி வெளியே எறிந்தது

كَانَ مِنَّا رَجُلٌ مِنْ بَنِي النَّجَّارِ قَدْ قَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ وَكَانَ يَكْتُبُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقَ هَارِبًا حَتَّى لَحِقَ بِأَهْلِ الْكِتَابِ، قَالَ: فَرَفَعُوهُ، قَالُوا: هَذَا قَدْ كَانَ يَكْتُبُ لِمُحَمَّدٍ فَأُعْجِبُوا بِهِ، فَمَا لَبِثَ أَنْ قَصَمَ اللهُ عُنُقَهُ فِيهِمْ، فَحَفَرُوا لَهُ فَوَارَوْهُ، فَأَصْبَحَتِ الْأَرْضُ قَدْ نَبَذَتْهُ عَلَى وَجْهِهَا، ثُمَّ عَادُوا فَحَفَرُوا لَهُ، فَوَارَوْهُ فَأَصْبَحَتِ الْأَرْضُ قَدْ نَبَذَتْهُ عَلَى وَجْهِهَا، ثُمَّ عَادُوا فَحَفَرُوا لَهُ، فَوَارَوْهُ فَأَصْبَحَتِ الْأَرْضُ قَدْ نَبَذَتْهُ عَلَى وَجْهِهَا، فَتَرَكُوهُ مَنْبُوذًا

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் பனுந் நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) “அல்பகரா”, “ஆலு இம்ரான்” ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (வேதஅறிவிப்பை) எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய்,வேதக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர். “இவர் முஹம்மதுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார்” என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

இதே நிலையில், (ஒரு நாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். (அவர் இறந்து விட்டார்.) ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்துவிட்டனர். காலை நேரமானபோது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர்.

மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 5366)

அல்லாஹ்வின் தூதருக்காகவே வேத அறிவிப்பை எழுதிக்கொண்டிருந்த ஒரு மனிதன் கூட, தன் உள்ளம் மாறியபோது அந்த நெருக்கம் அவனைக் காப்பாற்றவில்லை. அறிவும் பதவியும் பாதுகாப்பல்ல; இறுதிவரை உள்ளத்தில் நிலைத்திருக்கும் நம்பிக்கைதான் உண்மையான பாதுகாப்பு என்பதை இந்தச் சம்பவம் அச்சமூட்டும் விதத்தில் காட்டுகிறது.

இன்று நமக்கு இருக்கும் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் நாம் நிரந்தரமானதாக எடுத்துக்கொள்ள முடியாது. உள்ளம் எந்நேரமும் சரிந்துவிடக்கூடியது என்பதை நினைவில் வைத்து, அதை இறுதிவரை நிலைநிறுத்தித் தர வேண்டுமெனக் காலந்தோறும் இறைவனிடம் கெஞ்சிக் கேட்பதே இதற்கான பாதுகாப்பு.