நட்சத்திரங்கள் ஏன் வெடிக்கின்றன?

அறிவியல் உண்மைகள்

சூரியன் போன்ற நட்சத்திரங்கள் வெடிப்பதை ‘நோவா’ என்று சொல்வார்கள். இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்.

ஒரு பொருளை நாம் தூக்கும்போது, அதன் எடை நம்மை கீழ்நோக்கி அழுத்துகிறது. அதே நேரத்தில், நம் உடல் அந்த எடையைத் தாங்கி மேல்நோக்கித் தள்ளுகிறது. இப்படி இரண்டு எதிர் விசைகள் செயல்படுகின்றன.

சூரியனுக்குள்ளும் இப்படி இரண்டு எதிர் விசைகள் செயல்படுகின்றன. சூரியனின் ஈர்ப்பு விசை, அதன் உள்ளே உள்ள எல்லாப் பொருட்களையும் மையத்தை நோக்கி இழுக்கிறது.

சூரியனின் மையத்தில் உருவாகும் வெப்ப ஆற்றல், அந்தப் பொருட்களை வெளிப்புறமாகத் தள்ளுகிறது. இந்த இரண்டு விசைகளும் சமநிலையில் இருக்கும் வரை சூரியன் நிலையாக இருக்கும்.

சுமார் ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் உருவானபோது, அது இப்போது இருப்பதை விடப் பெரியதாக இருந்தது. ஈர்ப்பு விசையால் சுருங்கி, இப்போதுள்ள அளவுக்கு வந்தது.

இப்போது சூரியனின் உள்ளே இழுக்கும் விசையும், வெளியே தள்ளும் விசையும் கிட்டத்தட்ட சமமாக இருக்கின்றன.

ஆனால், ஸ்கூட்டரில் பெட்ரோல் தீர்ந்து போவது போல, இன்னும் சுமார் ஐநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனின் உள்ளே உள்ள எரிபொருள் குறைந்துவிடும். இதனால் உருவாகும் ஆற்றலும் குறையும்.

அப்போது, இழுக்கும் விசையும் தள்ளும் விசையும் சமநிலையை இழக்கும். ஈர்ப்பு விசை அதிகமாகி, சூரியனின் உட்புறப் பொருட்கள் மேலும் சுருங்கும்.

ஒரு ஸ்பாஞ்சைப் பிழிந்தால் நீர் வெளியேறுவது போல, சூரியனின் உட்புறம் சுருங்கும்போது, அதனுள் இருந்த ஆற்றல் வெளியேறும். இதனால் சூரியனின் வெளிப்புற அடுக்கு ஒரு பலூன் போல விரிவடையும்.

சூரியன் இப்போது இருப்பதை விட சுமார் இருநூறு மடங்கு பெரியதாக மாறும். இந்த நிலையை ‘சிவப்பு ராட்சச’ நிலை என்று சொல்வார்கள்.

இந்த சிவப்பு ராட்சச நிலையில், சூரியன் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களை விழுங்கிவிடும். பூமிக்கு மிக அருகில் வந்துவிடும். அப்போது பூமியின் கடல்கள் எல்லாம் ஆவியாகிவிடும்.

சிவப்பு ராட்சச நிலையிலும் ஒருநாள் எரிபொருள் தீர்ந்துபோகும். அப்போது மீண்டும் ஈர்ப்பு விசை அதிகமாகும். சூரியனின் பொருட்கள் மையத்தை நோக்கி நசுக்கப்பட்டு, சூரியன் பூமியின் அளவு போலச் சிறியதாக மாறிவிடும்.

ஒவ்வொரு அணுவிலும் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் உள்ளன. இவை ஒன்றையொன்று விலக்கும். இதனால் குறிப்பிட்ட அடர்த்திக்கு மேல் பொருட்களை நெருக்கமாக அழுத்த முடியாது.

இந்த நிலையில், எலக்ட்ரான்களுக்கும் புரோட்டான்களுக்கும் இடையே ஏற்படும் விலக்கு விசை பொருட்களை வெளிநோக்கித் தள்ளும். ஈர்ப்பு விசை உள்நோக்கி இழுக்கும். இந்த இழுபறியில் சூரியன் மீண்டும் நிலைத்தன்மை அடையும்.

சூரியன் பூமி அளவுக்குச் சுருங்கும்போது, பெரும் ஆற்றல் வெளியேறும். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போல, இந்த நட்சத்திரம் மிக மிக ஒளிரும்.

இப்படி வெளியேறும் ஆற்றல், சூரியனின் மேல் அடுக்குகளை வேகமாக வெளியே தள்ளிவிடும். மேல் அடுக்கு வேகமாக விரிவடையும். இதுதான் நட்சத்திரம் வெடிப்பது போலத் தோன்றும்.

மேல் அடுக்கு விரியும்போது, உள்ளே மையம் சுருங்கிச் சிறியதாகிக்கொண்டிருக்கும். இந்த நிகழ்வைத்தான் ‘நட்சத்திர வெடிப்பு’ அல்லது ‘நோவா’ என்று சொல்கிறோம்.

இறுதியில் சூரியன் ‘வெள்ளைக் குள்ளன்’ என்ற நிலையை அடையும். சூடான பாத்திரம் மெதுவாகக் குளிர்ந்து போவது போல, பல கோடி ஆண்டுகளுக்கு வெள்ளைக் குள்ளன் நிலையில் சூரியன் மங்கலாக ஒளிரும். இதுதான் சூரியனின் இறுதி நிலை.

ஒவ்வொரு ஆண்டும் நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் நாற்பது முதல் ஐம்பது நட்சத்திரங்கள் இப்படி வெடித்துச் சிதறுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான நிகழ்வுகளைப் படைத்து, ஒழுங்குபடுத்திய இறைவனின் ஆற்றலையும் ஞானத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பேரண்டத்தின் ஒவ்வொரு அசைவும் அவனது கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

ஆதாரம்: இந்து தமிழ் திசை