துல்ஹுலைஃபாவில் கவிழ்க்கப்பட்ட சமையல் பாத்திரங்கள் — பசியிலும் ஒழுங்கு
பங்கிடும் முன்பே அறுத்துச் சமைத்தார்கள்; நபி (ஸல்) அவற்றைக் கவிழ்க்கச் சொன்னார்கள்
كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي الحُلَيْفَةِ، فَأَصَابَ النَّاسَ جُوعٌ، فَأَصَبْنَا إِبِلًا وَغَنَمًا، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُخْرَيَاتِ النَّاسِ، فَعَجِلُوا فَنَصَبُوا القُدُورَ، فَدُفِعَ إِلَيْهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِالقُدُورِ فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَمَ فَعَدَلَ عَشَرَةً مِنَ الغَنَمِ بِبَعِيرٍ، فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، وَكَانَ فِي القَوْمِ خَيْلٌ يَسِيرَةٌ، فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ، فَأَهْوَى إِلَيْهِ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِهَذِهِ البَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الوَحْشِ، فَمَا نَدَّ عَلَيْكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا» قَالَ: وَقَالَ جَدِّي: إِنَّا لَنَرْجُو، أَوْ نَخَافُ، أَنْ نَلْقَى العَدُوَّ غَدًا، وَلَيْسَ مَعَنَا مُدًى، أَفَنَذْبَحُ بِالقَصَبِ؟ فَقَالَ: ” مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلْ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُخْبِرُكُمْ عَنْهُ: أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الحَبَشَةِ
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. (இந்நிலையில்) எங்களுக்குச் சில ஒட்டகமும் ஆடுகளும் (போர்ச் செல்வத்திலிருந்து) கிடைத்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின் வரிசையில் இருந்தார்கள். எனவே, மக்கள் அவரசப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்துப்) பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதை அறிந்த) நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்துசேர்ந்து, பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்(டு அவற்றிலிருந்த இறைச்சிகள் வெளியே கொட்டப்பட்)டன.
பிறகு நபி(ஸல்) அவர்கள் அவற்றைப் பங்கிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கினார்கள். அப்போது அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. மக்கள் (ஓடிப்போன) அந்த ஒட்டகத்தைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களுக்க அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. (நபித் தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எய்தார்.
அல்லாஹ் அதை (ஓடவிடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்’ என்று கூறினார்கள். நான் ‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால் அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரியை நாங்கள் சந்திக்க நேரிடுமோ என்று ‘அஞ்சுகிறோம்’ அல்லது ‘உத்தேசிக்கிறோம்’ எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?’
என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரத்ததைச் சிந்தச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில், அதை நீங்கள் உண்ணலாம். பல்லையும் நகத்தையும் (கொண்டு அறுப்பதைத்) தவிர. இதைப் பற்றி (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனிய (எத்தியோப்பிய)ர்களின் கத்திகளாகும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி)
நூல் – (புகாரி: 5498) ➚
மக்களுக்குப் பசி; கையில் உணவு. இருந்தும் பங்கீடு முடியும் முன் அதைத் தொடக் கூடாது. நபி (ஸல்) பாத்திரங்களைக் கவிழ்க்கச் சொன்னது கடுமையல்ல — உரிமை என்பது பசியைவிடப் பெரியது என்ற பாடம்.
பிறகு அவர்களே அதைப் பங்கிட்டார்கள்; பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கினார்கள். தடுத்தவர்தான் நீதியாக வழங்கியவரும். தடை என்பது மறுப்பல்ல, முறைப்படுத்தல்.
மிரண்டு ஓடிய ஒட்டகம் பிடிபடாதபோது நபி (ஸல்) சொன்ன வழி நடைமுறையானது. மார்க்கம் மனிதனை இயலாத இடத்தில் நிறுத்துவதில்லை — வழி காட்டுகிறது.