தாவரங்களின் முட்களில் உள்ள அறிவியல் என்ன?
சப்பாத்திக்கள்ளி போன்ற தாவரங்களின் முட்கள் பல திசைகளில் இருப்பதால், அவற்றின் பழங்களைப் பறிக்கும்போது கைகளில் முள் குத்திவிடும்.
தாவரங்களுக்கு இருக்கும் முட்கள், அவற்றின் வடிவங்களாலும் அளவுகளாலும் அழகாகத் தோன்றுகின்றன.
தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையாகவே பெற்றுள்ள ஒரு சிறந்த வழிதான் முட்கள்.
முட்களைப் பற்றிப் படிக்கும்போது இயற்பியல் விதிகள் பலவற்றை நாம் புரிந்துகொள்ளலாம்.
தாவரங்களை உண்ண வரும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே தாவரங்களுக்கு முட்கள் உள்ளன.
முட்களின் கூர்மையான முனை, விலங்குகளின் தோலை மிக எளிதாகக் கிழித்து உள்ளே சென்றுவிடும்.
ஒரு விலங்கு முள்ளின் மீது குறைந்த அளவு விசையைச் செலுத்தினாலும்கூட, முள் அதே அளவு எதிர்விசையை விலங்கின் மீது செலுத்தும்.
ஆனால், முள்ளின் கூர்மையால், அந்தச் சிறிய விசை மிகக் குறைந்த பரப்பளவில் செயல்பட்டு, அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது.
இந்த அதிக அழுத்தம் தோலை எளிதில் கிழித்துவிடுகிறது.
இதன் காரணமாக, விலங்குகள் முட்கள் நிறைந்த தாவரங்களை உண்பதைத் தவிர்க்கின்றன.
முட்கள், குறைந்த அளவு பொருளைக் கொண்டு எதிரிகளைச் சமாளிக்கும் ஒரு கருவியாகும்.
பாலைவனங்கள் போன்ற அதிக வெப்பம் உள்ள இடங்களில், தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள முட்கள் சிறிய நிழல்களை உருவாக்கி, வெயிலில் இருந்து தாவரங்களைப் பாதுகாக்கின்றன.
மேலும், கூர்மையான முனைகள் சூரிய ஒளியைச் சிதறடித்து, தாவரங்கள் வெப்பத்தை உறிஞ்சுவதைக் குறைக்கின்றன.
முட்கள் மேலிருந்து கீழ்வரை ஒரே தடிமனில் இருப்பதில்லை; முனை கூர்மையாகவும், அடிப்பகுதி நோக்கி வரும்போது தடிமனாகவும் கூம்பு வடிவிலும் இருக்கும்.
விலங்குகள் தோலை மாட்டி இழுக்கும்போது, இந்தக் கூம்பு வடிவம் முட்கள் எளிதில் உடைந்துவிடாமல் தடுக்கிறது.
சில தாவரங்களின் முட்கள் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கும்; இந்த மீளும் தன்மையும் அவை எளிதில் உடைவதைத் தடுக்கிறது.
தண்டுகள் மற்றும் கிளைகளில் உள்ள முட்களை ‘தோர்ன்ஸ்’ என்றும், இலைகளில் அடர்த்தியாக இருக்கும் முட்களை ‘ஸ்பைன்ஸ்’ என்றும் அழைக்கிறார்கள்.
சப்பாத்திக்கள்ளியில் இருப்பது ‘ஸ்பைன்ஸ்’ வகையைச் சேர்ந்த முட்கள்தான்.
இந்த முட்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதுடன், சப்பாத்திக்கள்ளியின் மேற்பரப்பில் வேகமாக வீசும் காற்றின் வேகத்தையும் குறைக்கின்றன.
முட்கள் இல்லையென்றால், இலைகளின் அருகில் உள்ள ஈரப்பதமான காற்றை, வீசும் காற்று எளிதாக அகற்றிவிடும்.
இதனால் வறண்ட காற்று இலைகளின் அருகில் வந்து, இலைகளில் இருந்து நீர் ஆவியாவதை அதிகரிக்கும்.
ஆனால், அடர்த்தியான முட்கள் இருப்பதால், காற்றின் வேகம் குறைக்கப்படுகிறது.
இது, இலைகளின் மேற்பரப்பில் உள்ள ஈரப்பதம் கொண்ட காற்றை காற்று அகற்றுவதைக் குறைக்கிறது.
எனவே, ஈரப்பதம் உள்ள காற்று முட்களின் அருகில் அசைவில்லாமல் இருப்பது போல இருக்கும்.
இந்த ஈரப்பதம் கொண்ட அசைவில்லாத காற்று, இலைகளில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கிறது.
பெரும்பாலான தாவரங்களின் முட்கள் நேராக இல்லாமல், சற்றுச் சாய்வாக (சுமார் 30 முதல் 60 டிகிரி வரை) இருக்கும்.
விலங்குகள் முட்களின் மீது பக்கவாட்டில் தேய்க்கும்போது, இந்தப் பக்கவாட்டு விசை முள்ளின் மீது ஒரு திருப்பு விசையை (சுழற்றும் விசை) ஏற்படுத்துகிறது.
திருப்பு விசை அதிகமாக இருந்தால் முட்கள் எளிதில் உடைந்துவிடும்.
திருப்பு விசை, செங்குத்துத் தூரம் அதிகமாக இருக்கும்போது அதிகமாக இருக்கும்.
முட்கள் சாய்வாக இருப்பதால், செங்குத்துத் தூரம் குறைவாக இருக்கும்.
இதனால், விலங்குகள் கொடுக்கும் பக்கவாட்டு விசையால் ஏற்படும் திருப்பு விசை குறைந்து, முட்கள் எளிதில் உடைவது தடுக்கப்படுகிறது.
இறைவன் தனது படைப்புகளில் எவ்வளவு நுட்பமான அறிவையும் ஒழுங்கையும் வைத்துள்ளான் என்பதை இந்த முட்கள் நமக்குக் காட்டுகின்றன.
ஒவ்வொரு படைப்பிலும் உள்ள இந்தச் சிறப்பம்சங்கள், படைத்தவனின் ஞானத்தையும் ஆற்றலையும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆதாரம்: இந்து தமிழ் திசை