சொர்க்கத்தின் தாழ்ந்த தரமுடையவர் யார் என மூஸா (அலை) கேட்டது — கிடைத்த பதில் என்ன?

ஹதீஸ் சம்பவங்கள்

“திருப்தியடைந்தேன், இறைவா!” — ஐந்து முறை கேட்டும் இறைவன் மேலும் மேலும் அளித்தது

سَأَلَ مُوسَى رَبَّهُ، مَا أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً، قَالَ: هُوَ رَجُلٌ يَجِيءُ بَعْدَ مَا أُدْخِلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، فَيُقَالُ لَهُ: ادْخُلِ الْجَنَّةَ، فَيَقُولُ: أَيْ رَبِّ، كَيْفَ وَقَدْ نَزَلَ النَّاسُ مَنَازِلَهُمْ، وَأَخَذُوا أَخَذَاتِهِمْ، فَيُقَالُ لَهُ: أَتَرْضَى أَنْ يَكُونَ لَكَ مِثْلُ مُلْكِ مَلِكٍ مِنْ مُلُوكِ الدُّنْيَا؟ فَيَقُولُ: رَضِيتُ رَبِّ، فَيَقُولُ: لَكَ ذَلِكَ، وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ، فَقَالَ فِي الْخَامِسَةِ: رَضِيتُ رَبِّ، فَيَقُولُ: هَذَا لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ، وَلَكَ مَا اشْتَهَتْ نَفْسُكَ، وَلَذَّتْ عَيْنُكَ، فَيَقُولُ: رَضِيتُ رَبِّ، قَالَ: رَبِّ، فَأَعْلَاهُمْ مَنْزِلَةً؟ قَالَ: أُولَئِكَ الَّذِينَ أَرَدْتُ غَرَسْتُ كَرَامَتَهُمْ بِيَدِي، وَخَتَمْتُ عَلَيْهَا، فَلَمْ تَرَ عَيْنٌ، وَلَمْ تَسْمَعْ أُذُنٌ، وَلَمْ يَخْطُرْ عَلَى قَلْبِ بَشَرٍ “، قَالَ: وَمِصْدَاقُهُ فِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ: ” {فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ} [السجدة: 17] الْآيَةَ

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக(பின்வருமாறு) மக்களுக்கு அறிவித்தார்கள்: மூசா (அலை) அவர்கள் இறைவனிடம், “சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரம் உடையவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன் கூறினான்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்குள் நுழைந்த பிறகு ஒரு மனிதர் வருவார். அவரிடம் “நீ (சென்று) சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்!”

என்று கூறப்படும். அதற்கு அவர், “இறைவா! எப்படி (நான் நுழைவேன்)? மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களைப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைத்ததை எடுத்துக்கொண்டுவிட்டார்களே?” என்று கூறுவார். அவரிடம், “உலக அரசர்களில் ஒருவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியைப் போன்று உனக்குக் கிடைத்தால் திருப்திதானே?” என்று கேட்கப்படும். அதற்கு அவர் “திருப்தியடைவேன், இறைவா!” என்பார். அப்போது இறைவன், “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று (நான்கு மடங்கைக்) குறிப்பிடுவான்.

ஐந்தாம் மடங்கு பற்றிக் கூறும்போது, அவர், “திருப்தியடைந்துவிட்டேன், இறைவா!” என்பார். உடனே இறைவன், “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும். உன் மனம் விரும்புகின்ற, உன் பார்வை ரசிக்கின்ற அனைத்தும் உனக்குக் கிடைக்கும்” என்பான். அப்போது அவர், “திருப்தியடைந்தேன், இறைவா!” என்று கூறுவார். பின்னர் மூசா (அலை) அவர்கள், “இறைவா! சொர்க்கத்தில் மிக உயர்ந்த தரமுடையவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், “அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன்.

அவர்களுக்குரிய தரங்களையும் நானே நேரடியாகத் தீர்மானித்தேன். அவற்றின் மீது நான் முத்திரையும் வைத்துவிட்டேன். எனவே, (அவர்களின் தரத்தை) எந்தக் கண்ணும் பார்த்திராது; எந்தக் காதும் கேட்டிராது. எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியிராது” என்றான். இதை மெய்ப்பிக்கும் வகையில் அல்லாஹ்வின் வேதத்தில், “அவர்கள் செய்த (நற்)செயல்களுக்குரிய பிரதிபலனாக அவர்களுக்கென மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது” (32:17) என்று இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஷஅபீ (ரஹ்)

நூல் – (முஸ்லிம்: 312)

சொர்க்கத்தில் மிகக் குறைந்த தரமுடையவருக்குக் கிடைக்கும் அளவே ஒரு உலக அரசனின் ஆட்சிக்கு நிகரானது என்றால், அதைவிட உயர்ந்த தரங்களைப் பற்றி நாம் என்ன நினைக்க முடியும்? நம் நிலை, நம் அந்தஸ்து குறைவாக இருக்கிறதே என்று கவலைப்படுவோர், சொர்க்கத்தின் மிகச் சிறிய பங்குகூட எவ்வளவு பெரியது என்பதை இந்தச் சம்பவத்திலிருந்து உணர வேண்டும்.

ஒவ்வொரு முறையும் தான் திருப்தியடைந்துவிட்டதாக அந்த மனிதர் சொன்னபோதும் இறைவன் மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருந்தான். நாம் கேட்பதைவிட இறைவனின் கொடை எப்போதும் பெரியது என்பதால், நம் மனதில் எல்லை வைத்துக்கொண்டு அல்லாஹ்விடம் கேட்காமல், அவனிடம் தாராளமாகக் கேட்டுப் பழக வேண்டும்.