செங்கல் இரண்டிரண்டாய்ச் சுமந்த அம்மார் (ரலி) — நபி (ஸல்) சொன்ன எதிர்காலம்

ஹதீஸ் சம்பவங்கள்

“பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்; இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார்”

انْطَلِقَا إِلَى أَبِي سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ، فَانْطَلَقْنَا فَإِذَا هُوَ فِي حَائِطٍ يُصْلِحُهُ، فَأَخَذَ رِدَاءَهُ فَاحْتَبَى، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا حَتَّى أَتَى ذِكْرُ بِنَاءِ المَسْجِدِ، فَقَالَ: كُنَّا نَحْمِلُ لَبِنَةً لَبِنَةً وَعَمَّارٌ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْفُضُ التُّرَابَ عَنْهُ، وَيَقُولُ: «وَيْحَ عَمَّارٍ، تَقْتُلُهُ الفِئَةُ البَاغِيَةُ، يَدْعُوهُمْ إِلَى الجَنَّةِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ» قَالَ: يَقُولُ عَمَّارٌ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الفِتَنِ “

இக்ரிமா அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் ‘நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!’ எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது ‘நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம்.

(ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு ‘பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்.’ என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) ‘அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்கள்’ என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல் – (புகாரி: 447)

எல்லோரும் ஒரு செங்கல் சுமந்தபோது அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கல் சுமந்தார்கள்; யாரும் கட்டாயப்படுத்தாத அந்த அதிக முயற்சியை நபி (ஸல்) அவர்களே கவனித்தார்கள்.

தன் கடுமையான எதிர்காலத்தைக் கேட்டபோதும் அம்மார் (ரலி) அவர்கள் பயப்படவோ பெருமைப்படவோ இல்லை, உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள் — கடினமான செய்தி வரும்போது முதலில் திரும்ப வேண்டியது அல்லாஹ்வையே என்பதை இது கற்பிக்கிறது.