சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள் எதனால் ஆனவை?

அறிவியல் உண்மைகள்

சனிக்கோளைச் சுற்றி வளையங்கள் இருப்பது நமக்குத் தெரியும். பயனியர் 11, வாயேஜர் 1, வாயேஜர் 2, காசினி போன்ற விண்கலங்கள் சனிக்கோளுக்கு அருகில் சென்று இந்த வளையங்களை ஆய்வு செய்துள்ளன.

இந்த வளையங்கள் திடமான அமைப்பு அல்ல. கோடிக்கணக்கான சிறு பொருள்கள் சனியைச் சுற்றி வருவதால், தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரு வளையம் போலத் தோன்றும். இவை கல், மண், பனி ஆகியவற்றால் ஆன கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் முதல் பேருந்து அளவுள்ள பாறைகள் வரை பல அளவுகளில் உள்ளன.

சனியின் வளையங்கள் சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் வரை விரிந்திருந்தாலும், அதன் தடிமன் சுமார் 100 மீட்டர் மட்டுமே. A, B, C, D, F, G மற்றும் மெல்லிய E என மொத்தம் ஏழு முக்கிய வளையத் தொகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு தொகுப்பிற்குள்ளும் நூற்றுக்கணக்கான தனி வளையங்கள் உள்ளன.

சனியைச் சுற்றிவரும் சில நிலவுகள், தமது ஈர்ப்பு விசையால் இந்தத் துகள்களைத் தள்ளி நெருக்கி வைத்துக்கொள்கின்றன. உதாரணமாக, F வளையத்தின் உள்ளே ப்ரோமிதியஸ் என்ற நிலவும், வெளியே பண்டோரா என்ற நிலவும் சுற்றி வருகின்றன. இவற்றின் ஈர்ப்பு விசையால் துகள்கள் இந்த நிலவுகளின் பாதைகளுக்கு இடையே அடைபட்டு, அடர்த்தியாகி வளையம் போலத் தோன்றுகின்றன.

சனியின் வளையங்கள் எப்படி உருவாயின என்பது பற்றி இரண்டு முக்கியக் கருத்துகள் உள்ளன. ஒன்று, சூரியக் குடும்பம் உருவானபோதே, சனியின் ஈர்ப்பு விசையால் விண்பாறைகள் கவரப்பட்டு படிப்படியாக வளையங்கள் உருவாயின என்பது. மற்றொன்று, சனியின் ஒரு துணைக்கோள் உடைந்து நொறுங்கி வளையங்கள் உருவாயின என்பது.

ஒரு பெரிய கோளுக்கு அருகில் ஒரு நிலவு வரும்போது, கோளின் ஈர்ப்பு விசை அந்த நிலவின் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு அளவில் இழுக்கும். இதனால் அந்த நிலவு பல திசைகளில் இழுக்கப்பட்டு, சிதைந்து நொறுங்கிவிடும். இப்படித்தான் சனியின் ஒரு துணைக்கோள் உடைந்து வளையங்கள் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த வளையங்கள் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருப்பதால், இவை சமீபத்தில், அதாவது 10 முதல் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாகியிருக்கக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது உண்மையாக இருந்தால், பூமியில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் சனிக்கோளுக்கு இந்த வளையங்கள் உருவாகியிருக்க வேண்டும்.

இறைவன் இந்த அண்டத்தைப் படைத்து, ஒவ்வொரு கோளுக்கும் அதன் தனித்துவமான அமைப்பையும் இயக்கத்தையும் கொடுத்திருப்பது வியப்பளிக்கிறது. சனிக்கோளின் இந்த அழகிய வளையங்களும் இறைவனின் படைப்பின் பேராற்றலையும் ஞானத்தையும் நமக்கு உணர்த்துகின்றன.

ஆதாரம்: இந்து தமிழ் திசை