கடைசியாகச் சொர்க்கம் புகும் மனிதர் — “இன்னும் பல செய்தேனே!” என வியந்தது ஏன்?
“ஒவ்வொரு தீமைக்கும் பதிலாக ஒரு நன்மை உனக்குண்டு” எனக் கூறப்பட்டது
إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ، وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا، رَجُلٌ يُؤْتَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ، فَيُقَالُ: اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ، وَارْفَعُوا عَنْهُ كِبَارَهَا، فَتُعْرَضُ عَلَيْهِ صِغَارُ ذُنُوبِهِ، فَيُقَالُ: عَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا، وَعَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا، فَيَقُولُ: نَعَمْ، لَا يَسْتَطِيعُ أَنْ يُنْكِرَ وَهُوَ مُشْفِقٌ مِنْ كِبَارِ ذُنُوبِهِ أَنْ تُعْرَضَ عَلَيْهِ، فَيُقَالُ لَهُ: فَإِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً، فَيَقُولُ: رَبِّ، قَدْ عَمِلْتُ أَشْيَاءَ لَا أَرَاهَا هَا هُنَا ” فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அப்போது, “இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்” என்று கூறப்படும்.
அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, “நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்” என்று கூறப்படும். அவரும் “ஆம்” என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார். இந்நிலையில் அவரிடம், “நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு” என்று கூறப்படும்.
அப்போது அவர், “இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!” என்று கேட்பார். (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 314) ➚
தான் செய்த பெரும் பாவங்கள் தனக்கு எதிராகக் காட்டப்பட்டுவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த அந்த மனிதருக்கு, இறைவன் அவரை நாணப்படுத்தாமல் ஒவ்வொரு தவறுக்கும் பதிலாக ஒரு நன்மையையே கொடுத்தான். எவ்வளவு தவறு செய்திருந்தாலும் இறைவனின் கருணையை நம்பி அவனிடமே திரும்புவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதையே இந்தச் சம்பவம் நமக்குக் காட்டுகிறது.
இதைச் சொல்லும்போது நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் சிரித்தார்கள் என்பதே இந்த சம்பவத்தின் அழகு. மறுமை என்பது அச்சத்தை மட்டும் தரும் ஒன்றல்ல; நம் குறைகளை உணர்ந்து திருந்துவதோடு, இறைவனின் பெருங்கருணையின் மீது நம்பிக்கை வைத்திருப்பதும் ஒரு விசுவாசியின் இதயத்தில் இணைந்தே இருக்க வேண்டும்.