“உஹுத் மலையளவு தங்கம் இருந்தாலும்…” — அபூதர் (ரலி) கேட்ட அந்தக் குரல்

ஹதீஸ் சம்பவங்கள்

செல்வம் மிக்கவர்களே மறுமையில் மிகவும் ஏழைகள்

كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَبْصَرَ – يَعْنِي أُحُدًا – قَالَ: «مَا أُحِبُّ أَنَّهُ تَحَوَّلَ لِي ذَهَبًا، يَمْكُثُ عِنْدِي مِنْهُ دِينَارٌ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا دِينَارًا أُرْصِدُهُ لِدَيْنٍ» ثُمَّ قَالَ: «إِنَّ الأَكْثَرِينَ هُمُ الأَقَلُّونَ، إِلَّا مَنْ قَالَ بِالْمَالِ هَكَذَا وَهَكَذَا، – وَأَشَارَ أَبُو شِهَابٍ بَيْنَ يَدَيْهِ وَعَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ – وَقَلِيلٌ مَا هُمْ»، وَقَالَ: «مَكَانَكَ»، وَتَقَدَّمَ غَيْرَ بَعِيدٍ فَسَمِعْتُ صَوْتًا، فَأَرَدْتُ أَنْ آتِيَهُ، ثُمَّ ذَكَرْتُ قَوْلَهُ: «مَكَانَكَ حَتَّى آتِيَكَ»، فَلَمَّا جَاءَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الَّذِي سَمِعْتُ – أَوْ قَالَ: الصَّوْتُ الَّذِي سَمِعْتُ؟ – قَالَ: «وَهَلْ سَمِعْتَ؟»، قُلْتُ: نَعَمْ، قَالَ: ” أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ، فَقَالَ: مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ “، قُلْتُ: وَإِنْ فَعَلَ كَذَا وَكَذَا، قَالَ: «نَعَمْ»

அபூ தர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுது மலையைப் பார்த்தபோது, ‘இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும் கூட என்னிடம் மூன்று நாள்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர’ என்று கூறினார்கள். பிறகு, ‘(உலகில் செல்வம்) அதிகமானவர்கள் தாம் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; ‘(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர ..

(இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஷிஹாப்(ரஹ்), ‘இப்படியெல்லாம்’ என்பதற்கு விளக்கமாக முன் பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள்… ஆனால், ‘அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘நீ இங்கேயே இரு’ என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் நபி(ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘நான் திரும்பி வரும் வரை நீ இங்கேயே இரு’ என்று கூறியதும் என் நினைவுக்கு வந்தது.

நபி(ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் கேட்ட குரல் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, ‘உன் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்து விடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று கூறினார்கள். நான், ‘இப்படி இப்படியெல்லாம் செய்த வருமா (விபச்சாரக் குற்றமும், திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?’ என்று கேட்டேன். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘ஆம், (அவரும் சொர்க்கம் புகுவார்)’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் அல்கிஃபாரீ (ரலி)

நூல் – (புகாரி: 2388)

சேர்த்து வைப்பது அல்ல, செலவழிப்பதுதான் மறுமையில் மிஞ்சும் என்பதை நபி (ஸல்) தெளிவாகச் சொன்னார்கள் — வலப்பக்கமும் இடப்பக்கமும் முன்பக்கமும் வாரி வழங்குபவர்களைத் தவிர.

இணைவைக்காமல் மரணித்தவர் சொர்க்கம் புகுவார் என்ற ஜிப்ரீல் (அலை) அவர்களின் செய்தி, பாவம் செய்தவர்களுக்கும் நம்பிக்கையைத் தருகிறது. அல்லாஹ்வின் அருள் நம் கணக்குகளைவிட எப்போதும் விசாலமானது.