“பொடிப் பையன் எங்கே?” — ஹஸன் (ரலி)யை அணைத்து நபி (ஸல்) செய்த பிரார்த்தனை
“இறைவா! நான் இவரை நேசிக்கிறேன்; இவரை நேசிப்பவரையும் நேசிப்பாயாக”
كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُوقٍ مِنْ أَسْوَاقِ المَدِينَةِ، فَانْصَرَفَ فَانْصَرَفْتُ، فَقَالَ: «أَيْنَ لُكَعُ – ثَلاَثًا – ادْعُ الحَسَنَ بْنَ عَلِيٍّ».
فَقَامَ الحَسَنُ بْنُ عَلِيٍّ يَمْشِي وَفِي عُنُقِهِ السِّخَابُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ هَكَذَا، فَقَالَ الحَسَنُ بِيَدِهِ هَكَذَا، فَالْتَزَمَهُ
فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ، وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ»
وَقَالَ أَبُو هُرَيْرَةَ: فَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنَ الحَسَنِ بْنِ عَلِيٍّ، بَعْدَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்: நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘பொடிப் பையன் எங்கே?’ என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களின் புதல்வர் ஹஸன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி நடந்து வந்தார்கள்.
அவர்களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தம் கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹஸன் (ரலி) அவர்களும் இவ்வாறு தம் கையை விரித்த படி (நபி (ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, ‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும், இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்த பிறகு அலீயின் புதல்வர் ஹஸன் (ரலி) அவர்களை விட வேறெவரும் எனக்கு அதிகப் பிரியமானவராக இருக்கவில்லை.94
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல் – (புகாரி: 5884) ➚
மும்முறை “பொடிப் பையன் எங்கே?” எனக் கேட்டு ஹஸன் (ரலி)யைத் தேடிய நபி (ஸல்) அவர்கள், அவர் வந்தவுடன் கைகளை விரித்து ஓடிச்சென்று அணைத்துக்கொண்டார்கள். பேரப்பிள்ளைகள் மீதான பாசத்தை வெளிப்படையாகக் காட்டுவது பலவீனமல்ல, நபிவழி என்பதை இந்தக் காட்சி நமக்குக் காட்டுகிறது.
தம் குடும்பத்தாரை நேசிப்பவரையும் இறைவன் நேசிக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் இட்ட அந்தப் பிரார்த்தனையில் நாமும் இடம்பெற விரும்பினால், நபியின் குடும்பத்தாரை நேசிக்க வேண்டும், அவர்கள் காட்டிய அன்பையும் நம் குடும்பத்தில் பின்பற்ற வேண்டும். சிறு குழந்தைகளிடம் காட்டும் பாசமே பெரிய பண்பாக மாறும் என்பதை அபூ ஹுரைரா (ரலி) இந்த ஒரு நினைவால் நமக்குக் காட்டுகிறார்கள்.