“நீங்கள் பார்க்கும்படி மட்டும்தான் நான் அவரிடம் பேச வேண்டுமா?” — உஸாமா (ரலி) அளித்த பதில்
நன்மையை ஏவிவிட்டு அதைச் செய்யாதவர் நரகில் அடையும் நிலை
قِيلَ لَهُ: أَلَا تَدْخُلُ عَلَى عُثْمَانَ فَتُكَلِّمَهُ؟ فَقَالَ: أَتَرَوْنَ أَنِّي لَا أُكَلِّمُهُ إِلَّا أُسْمِعُكُمْ؟ وَاللهِ لَقَدْ كَلَّمْتُهُ فِيمَا بَيْنِي وَبَيْنَهُ، مَا دُونَ أَنْ أَفْتَتِحَ أَمْرًا لَا أُحِبُّ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ فَتَحَهُ، وَلَا أَقُولُ لِأَحَدٍ، يَكُونُ عَلَيَّ أَمِيرًا: إِنَّهُ خَيْرُ النَّاسِ بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يُؤْتَى بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ، فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُ بَطْنِهِ، فَيَدُورُ بِهَا كَمَا يَدُورُ الْحِمَارُ بِالرَّحَى، فَيَجْتَمِعُ إِلَيْهِ أَهْلُ النَّارِ، فَيَقُولُونَ: يَا فُلَانُ مَا لَكَ؟ أَلَمْ تَكُنْ تَأْمُرُ بِالْمَعْرُوفِ، وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ؟ فَيَقُولُ: بَلَى، قَدْ كُنْتُ آمُرُ بِالْمَعْرُوفِ وَلَا آتِيهِ، وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ
– حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: كُنَّا عِنْدَ أُسَامَةَ بْنِ زَيْدٍ، فَقَالَ رَجُلٌ: مَا يَمْنَعُكَ أَنْ تَدْخُلَ عَلَى عُثْمَانَ فَتُكَلِّمَهُ فِيمَا يَصْنَعُ؟ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ
அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், “நீங்கள் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று (இந்த அரசியல் குழப்பங்கள் தொடர்பாகப்) பேசக் கூடாதா? (அவர் உங்களுக்கு நெருக்கமானவர் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு உஸாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்கள் முன்னிலையில்தான் அவர்களிடம் நான் பேச வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களிடம் அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்கு வித்திடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே அவர்களிடம் பேசுகிறேன்.
ஏனெனில், கலகத்திற்கு வித்திட்ட முதல் ஆளாக நானிருக்க விரும்பவில்லை. மேலும், எனக்கு ஆட்சித்தலைவராக இருக்கும் எவரையும், “மக்களில் நீங்கள்தான் சிறந்தவர்” என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அவ்வாறு நான் சொல்லமாட்டேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். அப்போது அவரது வயிற்றிலுள்ள குடல்கள் முழுவதும் வெளியே வந்துவிடும்.
அவர் குடலை இழுத்துக்கொண்டு கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றி வருவதைப் போன்று சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, “இன்ன மனிதரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியுமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டு, தீமை புரியவேண்டாம் என (அவர்களை)த் தடுத்துக் கொண்டிருக்(கும் நற்பணி செய்திகொண்டிருக்)க வில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அந்த மனிதர், “ஆம்; நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை.
தீமை புரியவேண்டாம் என (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. மேற்கண்ட ஹதீஸ் அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “நாங்கள் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தோம். அப்போது ஒரு மனிதர், “நீங்கள் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று, அவர் செய்துகொண்டிருப்பதைப் பற்றி பேசாமலிருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: அபூவாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்)
நூல் – (முஸ்லிம்: 5713) ➚
அறிவுரையை மக்கள் முன்னிலையில் சொல்வது திருத்துவதற்கல்ல, பெரும்பாலும் காட்டிக்கொள்வதற்கே. உஸாமா (ரலி) தனியாகச் சொல்லியிருந்தார்கள்; அதைப் பறைசாற்றவில்லை.
மற்றவர்களுக்கு நல்லதைச் சொல்லிவிட்டு தாம் அதைச் செய்யாதவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் விவரித்த காட்சி, சொல்வதற்கு முன் நம்மைத் திரும்பிப் பார்க்கச் சொல்கிறது.