பூமியின் காந்த துருவங்கள் ஏன் நகர்கின்றன?

அறிவியல் உண்மைகள்

பூமியின் காந்தத் துருவங்கள் என்பவை, பூமியின் காந்தப்புலக் கோடுகள் செங்குத்தாக இருக்கும் புள்ளிகள் ஆகும். பூமியின் மையத்தில் உள்ள இரும்பு மற்றும் நிக்கல் திரவமாக இயங்குவதால், இந்த காந்தத் துருவங்கள் தொடர்ந்து மாறுகின்றன.

வட காந்தத் துருவம் (North Magnetic Pole) தற்போது கனடாவிலிருந்து சைபீரியாவை நோக்கி வேகமாக நகர்கிறது. அதே நேரத்தில், தென் காந்தத் துருவம் (South Magnetic Pole) அண்டார்டிகாவிலிருந்து விலகி மெதுவாக நகர்கிறது. இதனால், திசைகாட்டிகள் (compasses) இந்தப் பகுதிகளுக்கு அருகில் சரியாக வேலை செய்யாமல் போகலாம்.

காந்தத் துருவங்கள் நிலையானவை அல்ல. அவை புவியியல் காலங்களில் அலைந்து திரிந்து, துருவ முனைப்பை மாற்றியமைக்கின்றன. பூமியின் காந்தப்புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்த மாற்றங்களின் மிக முக்கியமான வெளிப்பாடுதான் காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும். புவியியல் துருவங்கள் (geographic poles) என்பவை பூமியின் சுழற்சி அச்சில் நிலையாக இருப்பவை. ஆனால் காந்தத் துருவங்கள் காலப்போக்கில் மெதுவாகவும், சில சமயங்களில் வேகமாகவும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்த நகர்வு, வழிகாட்டல் (navigation), புவியியல் ஆய்வுகள் (geophysical surveys) மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் எனப் பல துறைகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. 1831 ஆம் ஆண்டு, பிரித்தானிய ஆய்வாளர் ஜேம்ஸ் கிளார்க் ராஸ் (James Clark Ross) முதன்முதலில் வடகாந்தத் துருவத்தைப் பதிவு செய்தார். அப்போது அது கனடாவின் நுனாவுட் பகுதியிலுள்ள பூத்தியா தீபகற்பத்தில் இருந்தது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில், வடகாந்தத் துருவம் ஆண்டுக்கு சுமார் 10 கிலோமீட்டர் என்ற மிதமான வேகத்தில் நகர்ந்தது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அதன் வேகம் ஆண்டுக்கு 15 கி.மீ. ஆக அதிகரித்தது. 21 ஆம் நூற்றாண்டில், வேகம் திடீரென உயர்ந்து, ஆண்டுக்கு 50–60 கி.மீ. என்ற அளவில் இருந்தது. வடகாந்தத் துருவம் ஆர்க்டிக் பெருங்கடலைக் கடந்து சைபீரியாவை நோக்கி நகர்கிறது.

இந்த நகர்வின் அடிப்படைக் காரணம் பூமியின் ஆழத்தில் மறைந்திருக்கிறது. பூமியின் வெளிப்புற மையப்பகுதி, உருகிய இரும்பும் நிக்கலும் கொண்டது. அங்கு நடைபெறும் சுழற்சி (convection) இயக்கங்கள் மற்றும் ஜியோ-டைனமோ (geo-dynamo) விளைவு என்பவையே பூமியின் காந்தப் புலத்தை உருவாக்குகின்றன. இந்த உருகிய உலோகங்களின் ஓட்டத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களே காந்தப் புலத்தின் வலிமை, திசை மற்றும் துருவங்களின் இட மாற்றங்களுக்கான காரணிகள் ஆகும்.

இந்த மாற்றங்களைப் பின்தொடர்வதற்காக, உலக காந்த மாதிரி (World Magnetic Model) போன்ற காந்த மாதிரிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகின்றன. செயற்கைக்கோள்கள், நில நிலையங்கள் மற்றும் வரலாற்றுத் தரவுகள் மூலம் துருவத்தின் நகர்வு கண்காணிக்கப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் (ESA) ஸ்வார்ம் (Swarm) திட்டம், பூமியின் காந்தப் புலத்தை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கிறது.

இறைவன் தனது படைப்பில் எத்தனையோ ஆச்சரியங்களை வைத்துள்ளான். பூமியின் காந்தப்புலம் மாறிக்கொண்டே இருப்பதும், அதன் துருவங்கள் நகர்வதும் அவனது அளவற்ற ஆற்றலையும், ஞானத்தையும் காட்டுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் நடப்பதும், பூமியின் வாழ்வுக்கு அவை துணை நிற்பதும் அவனது படைப்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன.

ஆதாரம்: தினமணி