Tamil Bayan Points

வலீமார்களிடம் உதவி தேடலாமா?-2

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

வலீமார்களிடம் உதவி தேடலாமா?

வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் பரேலவிகள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் பார்த்து வருகிறோம்.

வாதம் – 3

ان اراد عونا فليقل يا عبادالله اعينوني يا عبادالله اعينوني يا عبادالله اعينوني

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகர்ந்துள்ளார்கள்.

எவருக்காவது உதவி தேவைப்படுமானால் ‘அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்’ என்று மூன்று முறை கூறவும்.

(ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹஸீன்)

பதில் – 3

தப்ரானியில் (பாகம் 12, பக்கம் 44) சில வாசக மாற்றத்துடன் இவர்கள் கூறும் செய்தி இடம்பெறுகிறது.

இதுவும் பல காரணங்களால் மிகவும் பலவீனமான செய்தியாகும்.

இதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பார் ஹதீஸ் துறையில் மிகவும் மோசமானவர் ஆவார்.

இவ்வாறு இமாம் அபூஹாதம் விமர்சித்துள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம் 17, பக்கம் 170

இதில் இடம் பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ் மீதும் நினைவாற்றல் ரீதியாக விமர்சனம் உள்ளது.

அது தவிர இச்செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகக் கருதப்படும். ஏனெனில் இதில் ஜைது பின் அலீ என்பவர் உத்பா பின் கஸ்வான் (ரலி) யிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது. இதில் ஜைது பின் அலீ ஹிஜ்ரி 122ல் மரணமடைகிறார்.

தாரீகுல் கபீர், பாகம் 2, பக்கம் 403

அப்படி எனில் சுமார் ஹிஜ்ரி 20 ல் பிறந்திருப்பார் என்று பார்த்தாலும் கூட உத்பா (ரலி) யிடமிருந்து ஜைது அறிவிக்க இயலாது. ஏனெனில் உத்பா (ரலி) ஹிஜ்ரி 20க்குள் மரணித்து விட்டதாக வரலாறு சொல்கிறது.

எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகவும் இருப்பதால் இது முழுக்க பலவீனமானகும்.

தப்ரானியின் மற்றொரு அறிவிப்பில் (பாகம்9, பக்கம் 67) மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பார் இடம்பெறுகிறார்.

இவரது நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் அதுவும் பலவீனம் ஆகும்.

(அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 8, பக்கம் 323)

இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.

إن لله ملائكة في الأرض سوى الحفظة يكتبون ما سقط من ورق الشجر فإذا أصاب أحدكم عرجة بأرض فلاة فليناد : أعينوا عباد الله.

பூமியில் அல்லாஹ்வுக்கென்று நன்மை தீமை பதிவு செய்யும் வானவர்கள் அல்லாத மற்றும் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் மரத்திலிருந்து உதிரும் இலைகளைப் பதிவு செய்வார்கள். உங்களுக்கு பாலைவன பூமியில் (மேலேறிச் செல்லும்) சிரமம் ஏற்பட்டால் ‘அல்லாஹ்வின் அடியார்களே உதவி செய்யுங்கள்’ என்று அழையுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்னது பஸ்ஸார், பாகம் 2, பக்கம்  178

இச்செய்தியில் இடம்பெறுகிற உஸாமா பின் ஸைது அல்லைஸீ என்பவர் பலவீனமானவர் ஆவார்.

யஹ்யா அல்கத்தான் இவரைப் பலவீனமாக்கியுள்ளார்.

இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார் என்று அபூஹாதம் விமர்சித்துள்ளார். இவரது செய்தியில் மறுக்கப்பட வேண்டிய அம்சம் உள்ளது என அஹ்மத் கூறியுள்ளார். இன்னும் பல அறிஞர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.

பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப்

பாகம் 1, பக்கம் 183

இந்தக் கருத்திலமைந்த அனைத்து செய்திகளும் அறிவிப்பு ரீதியாகவே பலவீனமாக உள்ளன. மேலும் இந்த ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுக்கும் எதிராகவே உள்ளது. (இதுபற்றி கீழே விளக்கப்பட்டுள்ளது.)

வாதம் – 4

 பற்பல ஹதீஸ்களின் மூலம் நல்லடியார்களான வலிமார்களிடத்தில் உதவி தேடுங்கள் என்பதை நபிகளார் நமக்குக் கட்டளையிடுகிறார்கள்.

பதில் – 4

நபிகள் நாயகம் மீது இதை விட அபாண்டத்தை அநியாயமாக பரப்பிச் செல்ல முடியாது.

அல்லாஹ் அல்லாதவர்கள் ஒரு காலத்திலும் மனிதர்களின் துஆக்களை அறியமாட்டார்கள் என்றும் அதற்குப் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாகக் குர்ஆன் வழியே நபிகள்  நாயகம் நமக்கு போதித்து விட்டார்கள்.

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:7:197,198.)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன்:7:194.)

அல்லாஹ் அல்லாதவரை அழைத்துப் பிரார்த்திப்பவன் வழிகெட்டவன் என்று குர்ஆன் வர்ணிக்கின்றது.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன்:46:5.)

அல்லாஹ் அல்லாதவரை அழைத்துப் பிரார்த்திப்பவன் அநீதி இழைத்தவன் என்று குர்ஆன் சாடுகிறது.

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன்:10:106.)

அல்லாஹ் அல்லாத யாரும் மனிதர்களின் பிரார்த்தனையைச் செவியுற மாட்டார்கள். செவியுற்றாலும் பதிலளிக்க சக்தி பெறமாட்டார்கள்.

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்:35:13,14.)

தரையானாலும் கடலானாலும் எங்கும் அல்லாஹ்வே காப்பாற்றுகிறான் என்று இறைவன் கூறுகிறான்

“தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?’’ என்று கேட்பீராக! “இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்’’ என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன்:6:63, 64.)

இத்தகைய எண்ணற்ற இறைவசனங்களுக்கு மாற்றமாக, தான் கொண்டு வந்த சத்திய வேதத்திற்கு முரணாக, பாலைவனத்திலோ எங்குமோ ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு நபிகள் நாயகம் ஒரு போதும் கூற மாட்டார்கள்.

எந்த செயலைப் பயனற்றது, வீணானது, வழிகேடு, இணைவைப்பு என்றெல்லாம் அல்லாஹ்வின் தூதர் போதித்துச் சென்றார்களோ அச்செயலை அந்த அல்லாஹ்வின் தூதரே செய்யுமாறு சொன்னார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமும் நம்ப மாட்டான்.

அப்படி நம்புபவன், அவ்வாறு சொல்பவன் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான். அவன் வேண்டும் என்றே நபிகள் நாயகம் மீது பொய்யுரைத்து நரகை முன்பதிவு செய்கிறான்.

இதில் மிகக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?

அவ்லியாக்களான இறைநேசர்களிடம் (?) நேரடியாக உதவி கோரலாம் என்று குர்ஆனே வழிகாட்டுகிறதாம். அதற்கு அவர்கள் குறிப்பிடும் ஆதாரத்தைப் பாருங்களேன்.

தொடர்-3 பாருங்கள்