Tamil Bayan Points

8) கதிர்வீச்சைத் தடுக்கும் ஓசோன்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்-2

Last Updated on December 20, 2022 by Trichy Farook

கதிர்வீச்சைத் தடுக்கும் ஓசோன்

பூகோளத்தைச் சூழ்ந்துள்ள ஆகாயப் பகுதி பூமிக்கு ஒரு கூரையாக ஆக்கப்பட்டுள்ளது எனக் கூறும் திருக்குர்ஆனின் அறிவியலை நிரூபித்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியாக விண் கற்கள் சரமாரியாக அசுர வேகத்தில் பூமியின் மீது பாய்வதையும் அவைகளின் பேராபத்திலிருந்து காற்று மண்டலம் பூமியைக் காப்பாற்றிக்கொண்டிருப்பதையும் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். இந்த அத்தியாயத்திலும் முன் கூறப்பட்ட அதே திருக்குர்ஆன் வசனத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் மற்றொரு வலுவான ஆதாரத்தைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

இங்கு விவாதிக்கப்போகும் விபரங்கள் சூரியனுடன் தொடர்பு கொண்டவையாகும். இருபத்து ஒன்றாம் நூற்றாண் டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூரியன் என்பது பேரண்டத்தில் காணப்படும் பல்லாயிரம் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றாகும் எனவும், அது இயற்கை விதிகளால் ஆளப்படுகின்ற ஏனைய நட்சத்திரங்களைப் போன்று ஒரு பிரமாண்டமான அணு உலையே அன்றி வேறில்லை என்றும் அறிந்தவர்களாக இருக்கின்றோம். இருப்பினும் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் கூட சூரியனைக் கடவுளாக நம்பிக்கை கொண்டு வழிபடும் மனிதர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றனர்.

கம்ப்யூட்டர் யுகம் எனச் சிறப்பிக்கப்படும் இந்த யுகத்தில் கூட சூரியனின் மீதான பக்தி மக்களிடம் இந்த அளவுக்கு வேரூன்றிப் போயிருப்பின் சூரியனுடைய இயற்பியல் குணங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் `அது கடவுளே என நம்பிக்கை கொண்டிருந்த தொன்மை காலத்தில் சூரியனின் மீதுள்ள பக்தி எவ்வளவு வலுவானதாக இருந்திருக்கக்கூடும் என்பது யூகிக்கக் கூடியதே!

சூரியனின் அழிவுக்கதிர்

சூரியனுடைய உட்பகுதியில் தோன்றும் ஏராளமான அழுத்தமும் வெப்பமும் அணுக்களை அதன் சாதாரண நிலை யில் இருக்கவிடுவதில்லை. அணுக்களிலிருந்து அவற்றின் எலக்ட்ரான்கள் உரித்தெடுக்கப்பட்டு அவைகளின் அணுக் கருக்கள் பெரும் மோதல்களுக்கு இலக்காகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கில் இருந்து பெறப்படும் ஆற்றல் விண் வெளியில் இடைவிடாமல் பிரவாகித்துக்கொண்டிருக்கிறது. இதைப் பற்றி அறிவியலாளர்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றனர்.

“சூரியனின் மேற்பரப்பிலிருந்து கதிர்வீச்சு இடை விடாமல் வெளியேறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கதிர் வீச்சை நிலைநிறுத்துவதற்காக ஏறக்குறைய 40 இலட்சம் டன் சூரியப் பொருட்கள் ஒவ்வொரு வினாடியிலும் ஆற்ற லாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இம்மாபெரும் ஆற்றல் கிட்டத்தட்ட முழுவதுமே விண்வெளியில் வீணாக்கப்படும் போது அதில் 10 கோடியில் ஒரு பங்கு மட்டுமே கோள்களால் இடைமறிக்கப்படுகிறது.

(பார்க்க : அட்ரானமி ஃபார் எவரி மென், பக்கம் 23)

அறிவியலாளர்களின் மேற்குறிப்பிடப்பட்ட மேற்கோளி லிருந்து சூரியன் வெளியிடும் ஆற்றலிலிருந்து குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவு மிகக் குறைந்த ஆற்றலையே சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள் பங்கிட்டுக் கொள்கின்றன என்றும், அதிலும் ஒரு சிறு பகுதியையே பூமி பெறுகிறது என்றும் புலனாகிறது. இருப்பினும், பூமி பெறுகின்ற இந்த மிக மிகக் குறைந்த சூரியக் கதிர்வீச்சில் கூட உயிரினங்களை ஒட்டு மொத்தமாக அழிக்கக்கூடிய அளவிற்கு ஆபத்தான கதிர்வீச்சும் ஒன்றாகும்.

புறஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) என்பது இதன் பெயராகும். இதன் அலை நீளம் மிகக் குறுகிய தாக இருப்பதால் இது கட்புலனாகா ஒளிக்கதிர்களாகும். (கட்புலனாகும் ஒளியின் அலை நீளம் கிட்டத்தட்ட ஒரு சென்டி மீட்டரில் 4கோடியிலிருந்து 7 கோடியில் ஒரு பங்காக இருக்க வேண்டும்.) இந்த ஒளிக்கதிர்கள் மனிதர்களை மட்டுமன்றி புற்பூண்டுகளைக்கூட கூண்டோடு அழிக்கும் ஆற்றல் பெற்றவை ஆகும். இந்த மிகக் கொடிய ஆபத்தான கதிர்வீச்சிலிருந்து பூ உலகைக் காத்து, அதன் மீது உயிரினங் களை வாழவைத்துக் கொண்டிருப்பதும் பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலமாகும்.

ஓசோனும் ஒரு கூரையே!

காற்று மண்டலமும் அடுக்குகளாகவே அமைந்துள்ளது. அவற்றின் கீழ் மூன்று அடுக்குகளில் `ஓசோன் என்றழைக்கப் படும் கோளவடிவப்படலங்கள் காணப்படுகிறது. சூரியக் கதிர்கள் பூமிக்கு வரும் வழியில் காற்று மண்டலத்தை ஊடுருவும்போது அதிலுள்ள புறஊதாக் கதிர்கள் இந்த ஓசோன் படலங்களால் உட்கவரப்படுகிறது. இவை “ஓசோன் அடுக்குகள் (Ozone Layers) என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும் புவிவாழ் உயிரினங்களுக்கு உயிர் கவசம் போன்று செயல்படும் இந்த படலங்களின் பருமன் வியப் பூட்டும் அளவிற்கு மிக மெல்லியவையாகும். இவற்றின் பருமன் 0.5 சென்டி மீட்டருக்கும் குறைவானதாகும்.

(பார்க்க : அமைதிக்கதிரவன், பக்கம் 273 முதல்பதிப்பு 1973,

மிர் வெளியீட்டாளர், மாகோ)

இப்போது பூகோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத் தில் இந்த ஓசோன் மட்டும் இல்லாதிருப்பின் பூமியை நோக்கிவரும் புறஊதாக் கதிர்கள் தங்குதடையின்றி நேராக பூமியை அடைந்து உயிரினங்கள்யாவையும் சிறுகச்சிறுக உருக்குலையச் செய்து காலப்போக்கில் முற்றாகவே அழித் திருக்கும் என்பது தெளிவு.

காற்று மண்டலம் விண் கற்களைத் தடுக்காவிட்டாலும் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனக் கூறி பூமிக்கு ஒரு கூரை உண்டு எனப் பிரகடனம் செய்த திருக் குர்ஆனையும், அதன் தோற்றுவாயாம் இறைவனையும் மறுத்தவர்கள், ஓசோனையோ அல்லது புறஊதாக்கதிர்களின் அழிவாற்றலையோ மறுப்பதற்கு என்ன விளக்கத்தைக் கூறப் போகிறார்கள்? ஆயினும் அறிவியலை மதிக்கும் யாரும் இந்த பூமிக்கு ஓசோன் ஒரு கூரையே என்பதையும், எனவே பூமிக்கு கூரை உண்டு எனக் கூறிய திருக்குர்ஆனின் வார்த்தைகள் உண்மையே என்பதையும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

வானிலுள்ள கோள்களில் ஒன்று மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கோளாக மாறவேண்டுமாயின் என்னென்ன சிறப்பம்சங்களை அது பெற்றிருக்க வேண்டும் என்றும்,அதனுடைய ஆகாயம் அதற்கொரு கூரையாக அமைய வேண்டுமானால் அதன் செயற்பாடு என்னென்ன விதத்தில் அமையவேண்டுமென்றும் ஒரு சில அத்தியாயங்களில் நாம் விரிவாகப் பார்த்தோம்.

இந்தப் பின்னணியில் “அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு ஒரு வசிப்பிடமாகவும், வானத்தை ஒரு கூரையாகவும் அமைத்தான் (40:64) எனத் திருக்குர்ஆன் கூறவேண்டுமானால் அதன் அறிவியல் ஆழம் எவ்வளவு அற்புதமானது என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மானிடனின் அறிவிலிருந்து இப்படிப்பட்ட அபாரமான அறிவியல் பிரகடனங்கள் ஒருபோதும் தோன்ற முடியாது என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை யோசிக்க வேண்டிய தேவையில்லை.

சூரியன் நடத்தும் விண்ணோட்டம்

முதல் பாகத்தில் மிகவும் விளக்கமாக நாம் பார்த்த சில அத்தியாயங்களில் திருக்குர்ஆன் புவி மையக் கோட்பாட்டை மறுப்பதாகவும் சூரிய மையக் கோட்பாட்டையே ஆதரிப்ப தாகவும் கூறினோம். ஆயினும் சூரிய மையக் கோட்பாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒரு பிழையான நம்பிக்கை நிலவி வந்துள்ளது. அந்த பிழையான நம்பிக்கை, சூரியன் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது என்பதாகும். பூமி தம்மைத் தாமே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது எனக் கூறிய கோபர் நிக்க, கெப்ளர், கலீலியோ போன்ற அறிவியலாளர்கள் கூட சூரியன் நகரவில்லை என்றும் அது ஒரே இடத்தில் நிற்கிறது என்றுமே கூறி வந்தனர்.

நவீன அறிவியல் உலகின் அதிவாரத்தை அமைத்த இந்த அறிவியலாளர்காளாலும் கூட சூரியனின் நகர்வைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கான காரங்களில் ஒன்று, பூமியில் நிகழும் இராப்பகல் மாற்றங்களுக்கு சூரியனின் நகர்வு எவ்வகையிலும் காரணமில்லை என்ப தாகும். இருப்பினும் திருக்குர்ஆன், “இரவையும், பகலை யும், சூரியனையும்,சந்திரனையும் அவனே படைத்தான்; ஒவ்வொன்றும் (அதனதன் பாதையில்) நீந்துகிறது (21:33) எனக் கூறியதை நாம் முன்னர் கண்டோம். இந்த வசனத்தில் சூரியனும் ஓய்ந்திருக்கவில்லை. அது ஓயாமல் விண்ணில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப் படையாக எடுத்துக் கூறுவதை நாம் கண்டோம்.

தொலைநோக்கியை கண்டுபிடித்த கலீலியோ அதன் உதவியால் சூரியனை ஆராய்ந்த பிறகும் கூட சூரியனின் அச்சில் சுழற்சியை மட்டுமே கண்டுபிடித்தாரே அன்றி சூரியனின் நகர்வை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த திறமை மிக்க விஞ்ஞானியும் கூட, “சூரியன் நகரவில்லை; அது ஒரே இடத்தில் நிற்கிறது என்ற நம்பிக்கையில் இறந்து போனார். ஆயினும் அவருக்கும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இறங்கிய திருக்குர்ஆன், “சூரியன் நகர்கிறது எனும் பிழையற்ற அறிவியலைக் கூறியுள்ளது எனில் திருக் குர்ஆனின் அறிவியல் ஞானம் காலத்தை வென்றது என்பதை ஏற்பதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

சூரியனுக்கு ஒரு வசிப்பிடம்

சூரியன் நகர்கிறது என்று கூறிய திருக்குர்ஆன் சூரியன் எங்கு நகர்கிறது என்ற அற்புதமான அரிய அறிவியலையும் கூறியுள்ளது. அந்த திருமறை வசனம் வருமாறு :

36:38 وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِؕ

சூரியன் அதன் வசிப்பிடத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

(திருக்குர்ஆன்:36:38)

மேற்கண்ட திருமறை வசனம் இரண்டு முக்கியமான அறிவியல் உண்மைகளை எடுத்துக் கூறுகிறது. முதலாவது அறிவியல் உண்மை, சூரியனுக்கும் ஒரு வசிப்பிடம் இருக்கிறது என்பதாகும். இரண்டாவது அறிவியல் உண்மை, சூரியன் நகர்கிறது என்பதும் அதன் நகர்வு அதன் வசிப்பிடத்திலாகும் என்பதுமாகும். திருக்குர்ஆன் கூறும் இந்த இரண்டு அறிவியல் உண்மைகளும் பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கு மிகவும் வியப்பிற் குரிய செய்தியாகும் என்பது திண்ணம்.

பண்டைகால மக்களைப் பொருத்தவரை நாம் வாழும் பூமிக்கு ஒரு வசிப்பிடம் இருப்பதையே அவர்களால் விளங்கிக்கொள்ள இயலாதவர்களாகவே இருந்தனர். ஏனெனில் பூமி என்பது அசையாமல் ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் ஒரு நிலமாகவே அவர்கள் நம்பி வந்தனர். எனவே நடமாட்டமே இல்லாத ஒரு பொருள் அது எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதால் அப்படிப்பட்ட ஒன்றுக்கு ஒரு வசிப்பிடத்தின் தேவையை யாரும் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் பூமி ஒரே இடத்தில் நிலைத்திருக்கவில்லை.

அது ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்த வுடன் அது எந்த இலக்கை நோக்கி ஓடுகிறது என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடந்து பூமி உட்பட சூரியக் குடும்பத்தி லுள்ள அனைத்துக் கோள்களும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக் கின்ற போதிலும், அவை சூரியனைச் சுற்றிச் சுற்றி வருகின்றனவே ஒழிய சூரிய குடும்பத்திற்கு அப்பால் அவை செல்வதில்லை என நிரூபிக்கப்பட்டது. எனவே கோடிக் கணக்கான வருடங்களாக பூகோளமும் இதர கோள்களும் சூரியக் குடும்பத்திற்குள்ளேயே ஓடிக்கொண்டிருப்பதால் பூமிக்கென்று ஒரு வசிப்பிடம் உண்டென்றும் அது சூரியக் குடும்பமே என்றும் இப்போது நாம் விளங்கிக் கொள்கிறோம்.

பூகோளமும் இதரகோள்களும் மட்டுமன்றி துணைக் கோள்கள் பலவும் ஆயிரக்கணக்கான குறுங்கோள்களும், வால் நட்சத்திரங்களும், கோடானுகோடிக் கணக்கான விண் கற்களும் சூரியக்குடும்பத்தை வசிப்பிடமாகக் கொண்ட அங்கத்தினர்களாகும். இக்குடும்பத்தில் இவை கோடிக் கணக்கான வருடங்களாக அமைதியாக வாழ்ந்து கொண் டிருக்கின்றன. ஏனெனில் இவை மனிதனைப் போலன்றி பற்பல சட்டங்களுக்குக் கீழ்படியாமல் அவையாவும் இறைவ னின் சட்டமாகிய ஈர்ப்பு விதிக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ்கின்றன என்பதனால் ஆகும்.

பால்வழி மண்டலம்

இப்போது பூமி சூரியக் குடும்பத்தில் ஓயாமல் ஓடிக் கொண்டிருப்பதைப் போன்று சூரியனும் விண்ணில் ஓடிக் கொண்டிருக்கிறது என திருக்குர்ஆன் கூறியதிலிருந்து “சூரியனுக்கும் ஒரு வசிப்பிடம் உண்டா? அல்லது ஒரு வரைமுறை இன்றி இது தான்தோன்றித் தனமாக(Random) ஓடிக் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுவது இயல்பானதே! இதைத்தான்“சூரியன் இலக்கில்லாமல் ஓடவில்லை என்றும் சூரியன் அதன் வசிப்பிடத்தில் (தாம்) செல்கிறது என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

திருக்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னர் கூறிய இந்த அதிப்பிரதானமான அறிவியல் உண்மையை பன்னிரண்டு நூற்றாண்டுகள் (பதினெட்டாம் நூற்றாண்டு வரை) அறிவியல் உலகம் மறுத்துவிட்டு அதன் பிறகே இந்த அறிவியல் உண்மையை அறிவியல் உலகம் ஒப்புக் கொண்டது.

இன்று சூரியன் என்பது ஏனைய நட்சத்திரங்களைப் போன்று ஒரு நட்சத்திரம் என்றும்,நட்சத்திரங்கள் யாவும் விண்ணில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்றும், அவை விண்ணில் ஓடிக்கொண்டிருந்தபோதிலும் அவைகளுக் கென்று வசிப்பிடங்கள் இருக்கின்றன என்றும் அந்த வசிப்பிடங்கள் கேலக்சிகள் (Galaxies-நட்சத்திர மண்டலங் கள்) என அழைக்கப்படுகின்றன என்பதும் நமக்குத் தெரியும். நமது சூரியன் வசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திர மண்டலத்தின் பெயர் “பால்வழி மண்டலம் (Milky Way Galaxy) என்பதாகும்.

ஒரு கேலக்சியில் (நட்சத்திர மண்டலத்தில்) நட்சத்தி ரங்களைத் தவிர வெவ்வேறு வகையான பற்பல விண்ணகப் பொருட்கள் இருக்கின்றன என்பதை முன்னர் கூறியுள்ளோம். இப்பொருட்கள் யாவும் கேலக்சியின் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வருகின்றன. இப்பொருட்களை அவைகளின் வசிப்பிட மாகிய கேலக்சியிலிருந்து விலகிப் போகாமல் கேலக்சியின் ஈர்ப்பு விசை தடுத்துக்கொண்டிருக்கிறது. நமது சூரியனும் பால்வழி மண்டலத்திலுள்ள கோடிக்கணக்கான ஏனைய நட்சத்திரங்களும் ஏனைய விண்ணகப் பொருட்களும் திரும்பத் திரும்ப கேலக்சியின் மையத்தைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் 18 கோடி வருடங்களுக்கு ஒருமுறை கேலக்சியின் மையத்தை சுற்றி வருகிறது.

மானிடனின் பார்வைத் திறன்

பதினெட்டாம் நூற்றாண்டுவரை உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் கூட சூரியன் நகரவில்லை எனத் திருக் குர்ஆனுக்கு மாற்றமாகக் கூறிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தின் அறிவியல் வளர்ச்சியின் அளவைக் கருத்தில் கொண்டால் அவர்களின் அறிவியல் கணிப்பில் ஏற்பட்ட பிழை இயல்பானதே ஆகும். (ஆனால் இயல்பை மீறிய மாபெரும் அற்புதம் சூரியனைப் பற்றித் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே நிகழ்த்திய அறிவியல் பிரகடனமாகும் என்பதைக் கருத்தில் கொள்க!) மேலும் சூரியனின் நகர்வைக் கண்டுபிடித்தல் என்பது மிகவும் சிரமப்பட்டு செயல்படுத்த வேண்டிய ஒரு முயற்சியாகும்.

சூரியன் என்பது ஒரு நட்சத்திரமாகும் என்று நமக்குத் தெரியும். ஆதிகாலம் தொட்டு உலக மக்கள் நட்சத்திரங்களை நிலையானவை என்றும் அவை நகரவில்லை என்றும் கருதி வந்தனர். எனவே நகரா நட்சத்திரங்கள் எனும் ஒரு சொல் வழக்கு அவர்களிடம் இருந்து வந்தது. நட்சத்திரங்களின் நகர்வைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதனாலேயே அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.

நட்சத்திரங்கள் எனபவை சிறு புள்ளிகளாக வானில் தென்பட்ட போதிலும் அவை பூமியைக் காட்டிலும் பல்லா யிரம் மடங்கு பெரியவையாகும் என்பதை நாம் அறிவோம். ஆயினும் அவை பூமியிலிருந்து கற்பனைக் கெட்டாத தொலைவில் இருப்பதாலேயே இந்த அளவிற்கு சின்னஞ் சிறிய புள்ளிகளாகத் தென்படுகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கோணத்தில் பார்த்தால் இப்போது புள்ளிகளாகத் தெரியும் நட்சத்திரங்களைக் காட்டிலும் மிகமிக தொலைவிலுள்ள நட்சத்திரங்களை நாம் முற்றிலும் பார்க்க முடியாது என்பதே அதன் பொருளாகும். பேரண்டத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் இருக்கையில் வெறும் 9000 நட்சத்திரங்களை மட்டுமே நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும். ஆயினும் அவற்றில் 6000 மட்டுமே சிரமமின்றி எளிதாகப் பாக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு நிலவற்ற வானை ஆராய்ந்தால் அந்த இடத்தில் நின்று கொண்டு 2500-3000 நட்சத்திரங்களை மட்டுமே நம்மால் பார்க்க முடியும்.

மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் மேற்கண்ட புள்ளி விபரங்கள் அவைகளின் அளவிடற்கரிய தூரத்தை நமக்குப் புலப்படுத்துகிறது. நமது சூரியனுக்கு மிக அருகில்

இருக்கும் நட்சத்திரம் ப்ராக்சிமா சென்டரி (Proxima Centauri)யாகும். இது நமது சூரியனி லிருந்து வெறும் நான்கு ஒளியாண்டு தொலைவிலேயே இருக்கின்றபோதிலும் இந்த நட்சத்திரம் நமக்கு வெறும் ஒரு புள்ளியாகவே தெரிகிறது. இந்த உதாரணங்கள் யாவும் தெரிவிப்பது என்னவெனில் மனிதனுடைய பார்வைத் திறனை தூரம் எவ்வாறு பாதிக்கிறது என்பதாகும். இந்த தூரங்களோடு ஒப்பிடுகையில் நட்சத்திரங்களின் நகரும் தூரம் மிகமிகக் குறைவானதாகும். இவ்வளவு குறைந்த தூரத்தை இவ்வளவு தொலைவிலிருந்து மனிதன் வெறும் கண்களால் பார்த்துப் புரிந்து கொள்வது மிகக் கடினமான காரியமாகும் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஆங்கிலேய வானியல் கழகத்தின் செய்திப் பத்திரிகை ஆசிரியர் அறிவியலாளர் பி. டூயிக்(P. Doig) அவர்கள் நட்சத்தி ரங்களின் நகர்வை பூமியிலிருந்து கொண்டு பார்த்து அறிவதில் உள்ள சிரமத்தை ஓர் உதாரணத்துடன் விளக்கி யுள்ளார். ஒரு நட்சத்திரம் நமது நிலவின் அகலம் எவ்வளவோ அவ்வளவு தூரம் நகர்ந்ததாக பூமியிலிருந்து பார்க்க வேண்டுமானால் அதற்காக 190 வருடங்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறுகிறார். சுருங்கக்கூறின் பூமியிலிருந்து பார்க்கும்போது நட்சத்திரங்கள் யாவும் நகராமல் ஒரே இடத்திலேயே இருப்பதாகத் தோன்றும் என்பதே இதன் பொருளாகும்.

நட்சத்திரங்கள் நகராதது போன்று தோன்றினாலும் நகராத நட்சத்திரம் இப்பேரண்டத்தில் எதுவுமே இல்லை (“ஒவ்வொன்றும் விண்ணில் நீந்துகின்றது) என்பதை இன்று நாம் அறிவோம். நட்சத்திரங்கள் நகர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் ஹெர்ஷல் எனும் அமெச்சூர் (Amateur) விஞ்ஞானியே ஆவார். நட்சத்திரங்களின் நகர்வைப் பற்றிய இக்கண்டுபிடிப்பே சூரியனும் நகர்கிறது என்ற புரட்சிகரமான கண்டுபிடிப்புக்கு அவரை இட்டுச் சென்றது.

வருந்தத்தகு செய்தி

வில்லியம் ஹெர்ஷலைப் பற்றி நாம் முன்னர் கூறி யுள்ளோம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் தமது வீட்டின் மாடியில் தொலைநோக்கியை வைத்துக்கொண்டு நடத்திய ஆராய்ச்சியின் விளைவாகவே 1783ல் சூரியன் நகர்கிறது என்ற அபூர்வமான வியக்கத்தகு புரட்சிகரமான உண்மையை அவர் கண்டுபிடித்தார். ஆனால் வருத்தத் திற்குரிய செய்தி யாதெனில் கற்றவர்களின் இடையில்கூட கணிசமானவர்களிடம் சூரியன் நகர்கிறது என்ற செய்தி இன்றும்கூட சென்றடையவில்லை என்பதாகும்.

தமிழகத்தின் கல்லூரிகளில் ஒன்றில் `குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரையாற்றும்படி நாம் அழைக்கப்பட்டிருந்தோம். நம்முடைய உரையின்போது சூரியன் நகர்கிறது எனக் கூறும் திருக்குர்ஆன் வசனத்தை (36:38) யும் விளக்கியிருந்தோம். ஆயினும் ஹெர்ஷலின் ஆய்வைப் பற்றி கூறத் தேவையிருக்காது எனக் கருதினோம். அது கல்லூரி அரங்கமாக இருப்பதால் மாணவர்களுக்கு தெரிந்த செய்திகளையே திரும்பக் கூறி அலுப்புத் தட்டும்படி செய்ய வேண்டாம் எனக் கருதியதே அதற்குக் காரணமாகும்.

ஆயினும் உரை முடிந்து கேள்வி பதில் நேரம் ஆரம்பித்த போது அரங்கிலிருந்து ஒருவர் இவ்வாறு கேட்டார் : “சூரியன் நகரவில்லை என்றே நாங்கள் கற்பிக்கப்பட்டோம். ஆனால் திருக்குர்ஆன் சூரியன் நகர்வதாகக் கூறுகிறது என உங்களுடைய உரையில் கூறினீர்கள். விளக்கம் தேவை! ஒரு கல்லூரி அரங்கிலிருந்து இப்படி ஒரு கேள்வியை உண்மையிலேயே நாம் எதிர்பார்க்கவில்லை. விசாரித்த போது அந்த சகோதரர் மாணவர் இல்லை என்றும் அக்கல்லூரியின் ஒரு கடைநிலை ஊழியர் என்றும் தெரிய வந்தது. இந்த அனுபவம் தந்த படிப்பினை காரணமாக வில்லியம் ஹெர்ஷல் சூரியன் நகர்கிறது என எவ்வாறு நிறுவினார் என்பதை சுருக்கமாகத் தருகிறோம்.

ஹெர்ஷலின் அபாரத் திறமை!

ஹெர்ஷல் அவர்களின் மேற்கூறிய ஆராய்ச்சியைப் பற்றி அறிவியலாளர் டூயிக் மிக அழகாகவும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய உதாரணத்துடனும் விளக்கிக் கூறியுள்ளார். அது வருமாறு :

“ஏனைய நட்சத்திரங்களைப்போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத்தொகுதி ஒன்றில் பிரகாச மான வேகா (Vega) எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்த போது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையி லுள்ள தூரம் கூடிக்கொண்டே வருவதைக் கவனித்தார்.

அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார். இந்த நிகழ்ச்சி வெறும் கண்களுக்குப் புலனாகும் நட்சத்திரங்களில் வெளிப்படை யாக கவனத்தில் படுவதற்கு அந்த நட்சத்திரங்களின் நிலைகளை (Positions) ஏராளமான வருடங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கும்.

ஆயினும் 1783ல் இந்த நிகழ்ச்சியின் சரியான விளக்கத்தைத்தர வில்லியம் ஹெர்ஷ லுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்குக் காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார். இது இவ்வாறு இருக்க வேண்டு மாயின் பூமியில் இருந்து கொண்டு நட்சத்திரங்களைப் பார்வையிடுதல் (Observe) என்பது ஒருவர் காட்டுக்குள் நடக்கும்போது அவருக்கு அடிக்கடி ஏற்படும் காட்சியைப் போன்றதாகவே இருக்கும்.

ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாகக் கற்பனை செய்யவும். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும்போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர்எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக் கொன்று நெருங்கி வருவதாகவும் பார்ப்பீர்கள். இந்தத் தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது.

சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்த திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சத்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிவதும் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமாகும். ஹெர்ஷல் ஆய்வு (Observe) செய்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் அவைகளின் சுய நகர்வைப் பெற்றிருந்தன.

எனினும் நட்சத்திரங்கள் பற்பல திசை களுக்கும் நகர்கின்ற காரணத்தால் சராசரியாகப் பார்க்கும் போது ஒன்றின் நகர்வு மற்றொன்றின் நகர்வால் ஈடுகட்டப்பட்டது. ஆகவே இது சூரியன் மற்றும் அதன் கோள்களின் தங்களுக்கிடையிலான நகர்வு இவ்வளவு நாளும் எவ்வாறு கருதப்பட்டு வந்ததோ அதைப் போன்று நட்சத்திரங்களும் சராசரியாகப் பார்த்தல் நகராதவைகளாகவே கருதப்பட வேண்டும்.

அடுத்தமுறை நீங்கள் அழகான வேகா நட்சத்திரத்தை பார்க்கும்போது சூரியனும் அதனுடைய கோள்கள், துணைக் கோள்கள், குறுங்கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் ஆகிய அதன் ஏவலர்கள் (Attendants) அனைத்தையும் இழுத்துக்கொண்டு வினாடிக்கு 12மைலை விட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என நினைத்துக் கொள்ளவும்.

(பார்க்க : அட்ரானமி ஃபார் எவரி மேன், பக்கம் 297-98)