Tamil Bayan Points

06) தூதருக்குக் கட்டுப்படுதல்

நூல்கள்: குர்ஆன் மட்டும் போதுமா?

Last Updated on February 24, 2022 by

6) தூதருக்குக் கட்டுப்படுதல்

திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கடமை என்பதை விளக்கும் மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் அதிகமாக வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்பதும் ஒன்றாகும். ஒரிரு இடங்களில் அல்ல. ஏராளமான இடங்களில் இந்தக் கட்டளை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!

 (திருக்குர்ஆன்:3:32.)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

 (திருக்குர்ஆன்:3:132.)

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(திருக்குர்ஆன்:4:13.)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

(திருக்குர்ஆன்:4:69.)

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

 (திருக்குர்ஆன்:4:80.)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன்:5:92.)

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!

(திருக்குர்ஆன்:8:1.)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

(திருக்குர்ஆன்:8:20.)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:8:46.)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(திருக்குர்ஆன்:9:71.)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(திருக்குர்ஆன்:24:52.)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

(திருக்குர்ஆன்:24:54.)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

(திருக்குர்ஆன்:24:56.)

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

(திருக்குர்ஆன்:33:33.)

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?எனக் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன்:33:66.)

அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

(திருக்குர்ஆன்:33:71.)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

(திருக்குர்ஆன்:47:33.)

(போருக்குச் செல்லாமல் இருப்பது) குருடர் மீது குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.

(திருக்குர்ஆன்:48:17.)

நம்பிக்கை கொண்டோம் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன்:49:14.)

உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(திருக்குர்ஆன்:58:13.)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வது தான் நமது தூதர் மீது உள்ளது.

(திருக்குர்ஆன்:64:12.)

அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என்று இத்தனை இடங்களில் அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகின்றான்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாதவர்கள் காஃபிர்கள்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமே இறையருள் கிட்டும்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் பாழாகி விடும்.

என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் முஸ்லிமா அல்லவா என்பதை அளந்து பார்க்கக் கூடிய அளவு கோலாக இந்தக் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.

தொழுகை, நோன்பு போன்ற கட்டளைகளை மீறினால் அது பெருங்குற்றமாகக் கூறப்பட்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய குற்றமாகக் குர்ஆனில் கூறப்படவில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தால் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் குற்றமாகக் கூறப்படுகின்றது.

எனவே பல இடங்களில் மிகுந்த முக்கியத்துவத்துடன் இக்கட்டளை கூறப்பட்டுள்ளதால் இதைச் சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றே ஈமானைப் பாதுகாக்கும். குர்ஆனைக் கொண்டு வந்து மக்களிடம் தருவது மட்டுமே தூதரின் பணி, வேறு பணி ஏதும் அவருக்கு இல்லை என்றிருந்தால் இவ்வாறு இறைவன் நிச்சயமாகக் கூற மாட்டான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறுவது மட்டுமே இந்தக் கருத்தைத் தெளிவாகக் கூறி விடும் போது தேவையில்லாமலும் வேறு கருத்தைக் கொடுக்கும் வகையிலும் இத்தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான். தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்று பல வசனங்களில் கூறப்பட்டிருந்தாலும் ஹதீஸ்களை மறுப்பவர்கள் இவ்வசனங்களுக்குப் பொருத்தமற்ற விளக்கத்தைக் கூறி நழுவப் பார்க்கின்றனர்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் என்பதும், தூதருக்குக் கட்டுப்படுதல் என்பதும் ஒன்று தான். குர்ஆனில் கூறப்பட்டதை மட்டும் பின்பற்றினால் அது தான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல். அது தான் தூதருக்குக் கட்டுப்படுதல் என்பது இவர்கள் கூறும் பொருந்தாத விளக்கமாகும்.

வீணான – தேவையில்லாத – குழப்பமான வார்த்தைகளை அல்லாஹ் கூறி விட்டான் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். இவர்களின் விளக்கம் முற்றிலும் தவறாகும்.

இதாஅத் என்ற மூலச் சொல் மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரது கட்டளையை ஏற்று அப்படியே செயல்படுவது என்பது இதன் பொருளாகும். இதன் பொருளைச் சரியாக விளங்கிட அல்குர்ஆனின் 4:59 வசனத்தை உதாரணமாகக் எடுத்துக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

 (திருக்குர்ஆன்:4:59.)

? அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்.

? தூதருக்குக் கட்டுப்படுங்கள்.

? அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.

என மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் உள்ளன. முதலிரண்டு கட்டளைகளை விட்டு விடுவோம். மூன்றாவது கட்டளைக்கு என்ன பொருள்?

அதிகாரத்தில் இருப்பவர்கள் போடுகின்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்என்பது தான் இதன் பொருள் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள். அதிகாரமுடையவர்களுக்கு இவர்கள் வழங்குகின்ற மரியாதை கூட அல்லாஹ்வின் தூதருக்கு வழங்குவதில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.

அதிகாரமுடையவர்கள் கூறுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படலாம் என்று பொருள் செய்த இவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுபடுங்கள் என்பது எந்தப் பொருளும் அற்றது என்று வாதிடுவதை விட அறியாமை வேறு இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் இவ்வசனத்தில் அதீவூ (கட்டுப்படுங்கள்) என்ற சொல் இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்பது ஓர் இடம். அல்லாஹ்வின் தூதருக்கும் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்பது இரண்டாவது இடம்.

அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுவதைக் குறிக்கும் போது அதனுடன் சேர்த்து தூதருக்குக் கட்டுப்படுவதையும் இறைவன் கூறுகின்றான். இதிலிருந்து அதிகாரமுடையவர்கள் சுயமாகக் கூறும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது போன்று தூதரின் கட்டளைக்கும் கட்டுப்பட வேண்டும் என்பது உறுதியாகின்றது. தூதருக்குக் கட்டுப்படுவது என்பதன் பொருள், குர்ஆனுக்குக் கட்டுப்படுவது தான்என்ற வாதம் இதனால் அடிபட்டுப் போகின்றது.

தூதருக்குக் கட்டுப்பட மறுத்து இஸ்லாமிய வேடம் போடுவோர் தோன்றுவார்கள் என்பதை அறிந்த இறைவன் 8:20, 24:54 வசனங்களில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை விட தூதருக்குக் கட்டுபடுவதை முக்கியத்துவம் கொடுத்துக் கூறுகிறான்

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று 8: 20 வசனத்தில் கூறப்படுகின்றது. அவ்விருவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று கூறாமல் அவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறி தூதருக்குக் கட்டுப்படுவதன் அவசியத்தை விளக்குகிறான்.

அல்லாஹ்வைப் புறக்கணிக்க மாட்டார்கள். தூதரைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள் என்பதற்காகத் தேர்வு செய்து பயன்படுத்தப்பட்டது போல் இவ்வாசகம் அமைந்துள்ளது. 24:54 வசனத்தில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று துவங்கி விட்டு, நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமை அவருக்கு, உங்கள் மீதுள்ள கடமை உங்களுக்கு என்றும் அவரைப் பின்பற்றினால் நேர்வழி அடைவீர்கள் என்றும் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை அல்லாஹ் எவ்வாறு நம் மீது கடமையாக்கியுள்ளானோ அது போலவே அவனது தூதருக்குக் கட்டுப்படுவதையும் கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தாம் திருக்குர்ஆனின் இவ்வசனங்களை ஏற்பவர்களாக ஆவார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம், அவனது தூதருக்குக் கட்டுப்பட மாட்டோம் என்போர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படாதவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை.

தூதரை நோக்கி வருதல்

அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

(திருக்குர்ஆன்:4 : 61.)

இவ்வசனத்தில் இறைவன் பயன்படுத்திய இரண்டு சொற்றொடர்களைக் கவனியுங்கள்.

  1. அல்லாஹ் அருளியதை நோக்கியும்
  2. இத்தூதரை நோக்கியும்

என இரண்டு சொற்றொடர்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

ஹதீஸ்களை மறுப்போரின் கருத்துப்படி அல்லாஹ் அருளியதை நோக்கி வாருங்கள் என்று கூறியவுடனேயே கூற வேண்டிய செய்தி முற்றுப் பெற்று விடுகின்றது. இத்தூதரை நோக்கி என்ற சொற்றொடரை அல்லாஹ் அர்த்தமில்லாமல் பயன்படுத்தி விட்டான் என்று அவர்கள் கூறுவார்களா?

அல்லாஹ் தேவையற்ற ஒரு சொல்லையும் பயன்படுத்தவே மாட்டான் என்று நம்பிக்கை கொண்டு குர்ஆனை மதிப்பவர்கள், இத்தூதரை நோக்கி என்று அல்லாஹ் கூறியதை உரிய முக்கியத்துவத்துடன் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். இதே வசனத்தில் இறைவன் பயன்படுத்தியுள்ள மற்றொரு சொற்றொடரும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் அழைக்கப்பட்டால் இரண்டையும் புறக்கணிப்பார்கள் என்று இவ்வசனத்தில் கூறாமல் உம்மைப் புறக்கணிப்பார்கள்என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு புறக்கணிப்பவர்கள் முனாஃபிக்குகள் என்றும் பிரகடனம் செய்கின்றான்.

அல்லாஹ் அருளியதை நோக்கி வருவதை ஏற்றுக் கொண்டு, தூதரை நோக்கி வர வேண்டும் என்ற அழைப்பை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தம்மை அஹ்லுல் குர்ஆன் என்று கூறிக் கொண்டாலும் இவர்களுக்கு அல்லாஹ் சூட்டும் பெயர் முனாஃபிக்குகள்.

அல்லாஹ் அருளியதை நோக்கி மட்டும் வருவோம். தூதரை நோக்கி வர மாட்டோம் எனக் கூறும் இவர்களுக்காகவே இவ்வசனம் அருளப்பட்டது போல் அற்புதமாக அமைந்திருப்பதை அவர்கள் கவனித்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் புறக்கணிக்கிறார்கள் என்று கூறாமல், அல்லாஹ் இறக்கியருளியதைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் கூறாமல் உம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்று இறைவன் கூறியது ஏன் என்பதை இவர்கள் சிந்திப்பார்களானால் நிச்சயமாக உண்மையை உணர்வார்கள். இதே போல் 5:104 வசனத்திலும் இரண்டு விஷயங்களின் பால் அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான்.

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

(திருக்குர்ஆன்:5:104.)

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் மக்கள் வரவேண்டும் என்பதும் இரண்டுமே இறைவனின் வஹீயை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் சந்தேகமற நிரூபிக்கப்படுகின்றது. திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில், அல்லாஹ்வை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் அழைக்கப்பட்டால்என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குர்ஆன் மட்டும் போதும் என்றிருந்தால், குர்ஆனைக் கொண்டு வந்து தருவது தவிர தூதருக்கு ஒரு வேலையும் இல்லை என்றிருந்தால் இத்தகைய சொற்களை இறைவன் பயன்படுத்தியிருக்க முடியாது.

தீர்ப்பளிக்கும் தூதர்

அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.

(திருக்குர்ஆன்:24:48.)

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(திருக்குர்ஆன்:24:51.)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(திருக்குர்ஆன்:33:36.)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும் போது அவருக்கும் பதிலளியுங்கள்! ஒரு மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லாஹ் இருக்கிறான் என்பதையும், அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன்:8:24.)

அல்லாஹ்விடம் அழைக்கப்படுவது என்றால் திருக்குர்ஆனை நோக்கி அழைக்கப்படுவது என்பது பொருள். தூதரிடம் அழைக்கப்படுவது என்றால் என்ன பொருள்? அதற்கும் திருக்குர்ஆனை நோக்கி அழைக்கப்படுதல் எனப் பொருள் கொள்ள முடியுமா? திருக்குர்ஆனை நோக்கி அழைக்கப்படுவது பற்றி ஏற்கனவே கூறப்பட்டு விட்ட பின் அவ்வாறு பொருள் கொள்வது பொருத்தமாகாது.

நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளபடி குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீயை நோக்கி அழைக்கப்படுவதையே இவ்வாறு இறைவன் குறிப்பிடுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் எனக் கூறும் வசனங்கள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.

வேதத்துடன் வேறொன்று

வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் அவர்கள் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.

(திருக்குர்ஆன்:40:70.)

தூதர்களுக்கு வேதம் மட்டும் தான் அருளப்பட்டது, வேறு எதுவும் இறைவனால் அருளப்படவில்லை என்றால் இவ்வசனத்தில் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

! வேதத்தையும்

! எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதனையும்

என்று இறைவன் கூறுகின்றான்.

எனவே வேதத்துடன் அதற்கு விளக்கவுரையான செய்திகளையும் கொடுத்தே இறைவன் தூதர்களை அனுப்புகின்றான். இரண்டுமே இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்திகளேயாகும்.

நாங்கள் வேதத்தை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம். முஹம்மது (ஸல்) அவர்கள் எதனுடன் அனுப்பப்பட்டார்களோ அதை ஏற்க மாட்டோம் என்று யாரேனும் கூறினால் அதன் விளைவை அவர்கள் மறுமையில் அறிந்து கொள்வார்கள்.

பின்னர் அறிந்து கொள்வார்கள் என்ற சொற்றொடரை அவர்கள் நரகத்தையே அடைவார்கள் என்ற கருத்தில் திருக்குர்ஆன் பயன்படுத்துகின்றது. எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மறுப்போர் நரகவாசிகள் என்பதில் சந்தேகமே இல்லை.

வேதமும் தராசும்

இது போல் அமைந்த மற்றொரு வசனத்தையும் காணுங்கள்!

அல்லாஹ்வே உண்மையை உள்ளடக்கிய வேதத்தையும், தராசையும் அருளினான். அந்த நேரம் அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

(திருக்குர்ஆன்:42:17.)

வேதத்துடன் தராசையும் இறக்கியதாக அல்லாஹ் இங்கே கூறுகின்றான். மீஸான் என்பதற்கு நேரடிப் பொருள் எடை போடும் கருவி என்பதாகும். தராசை மீஸான் என்று கூறுவது இந்த அடிப்படையில் தான். நன்மை தீமைகளை மறுமையில் மதிப்பிடுவதையும் இறைவன் மீஸான் என்று கூறுகின்றான்.

மீஸானை இறக்குவதாகக் கூறும் போது தராசை இறக்குவதாகப் பொருள் கொள்ள முடியாது. உலகில் நன்மை தீமைகளை எடை போட்டுக் காட்டும் அறிவுரை என்றே பொருள் கொள்ள வேண்டும். வேதத்தை இறக்கியது போலவே மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் கூறும் போது இரண்டில் ஒன்றை மறுப்பவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்? நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்ட கிதாப் என்பது குர்ஆன் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட மீஸான் என்பது என்ன?

இந்த இடத்திலும் தராசு என்றே பொருள் கொள்வார்களானால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன்பே தராசு இருந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. எனவே தராசையும், வேதத்தையும் இறக்கினோம் என்பதற்கு குர்ஆனையும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் எடை போடக் கூடிய போதனைகளையும் என்பதே பொருளாக இருக்க முடியும்.