Tamil Bayan Points

06) உளறல்கள்

நூல்கள்: இது தான் பைபிள்

Last Updated on February 24, 2022 by

உளறல்கள்

யதார்த்தமான நிலமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடு இருக்கலாகாது என்பதைப் பைபிளும் கூட ஒப்புக் கொள்கிறது.

ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும், நிறைவேறாமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை. அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினாலே சொன்னான். அவனுக்கு நீ பயப்பட வேண்டாம்.

உபாகமம் 18:22

பைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா? இதை நாம் ஆராய்வோம்.

அ) ஆடைக்கு குஷ்டரோகம்

தொழு நோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால், குடியிருக்கும் வீட்டுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவரும் நம்ப மாட்டார்கள். அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால், ஆடைகளுக்கும் வீடுகளுக்கும் கூடத் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் பைபிள் கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

ஆடையில் குஷ்டரோகம் தோன்றினால் அது கம்பளி ஆடையானாலும் பஞ்சு ஆடையானாலும், பின்னிய துணியானாலும், பஞ்சுத் துணியானாலும், கம்பளித் துணியானாலும், தோலானாலும், தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அதில் காணும் ரோகம் பச்சை நிறமாயாவது சிவப்பு நிறமாயாவது காணப்பட்டால் அது ஆடையானாலும் தோலானாலும் நெய்த துணியாலானாலும் தோலினால் பின்னிய துணியானாலும் தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அது குஷ்டரோகமே.

அதை ஆசாரியனுக்குக் காண்பிக்க வேண்டும். ஆசாரியன் அதைப் பார்த்து ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். ஏழாம் நாளில் ரோகம் உள்ளதைப் பாரக்கும் பொழுது ஆடையிலோ நெய்த துணியிலோ பின்னிய துணியலோ தோலிலோ தோலினால் செய்த எந்தப் பொருளிலோ ரோகம் அதிகப்பட்டிருக்கக் கண்டால் அது அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாகும்! அந்த ரோகமிருக்கிற ஆடையையும் நெய்த துணியையும் பின்னிய துணியையும் சுட்டெரிக்க வேண்டும். அது கம்பளியானாலும் சரி; துணியானாலும் சரி; தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் சரி; அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும்.

ஆசாரியன் பார்க்கும் போது ஆடையிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது அந்த ரோகம் அதிகப்படவில்லை என்று கண்டால் ரோகமுள்ளதைத் துவைக்கச் சொல்லி அதை மறுபடியும் ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். அது துவைத்து வைக்கப்பட்ட பின் ஆசாரியன் அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் போது அந்த ரோகம் பரவாதிருந்தும் அதன் நிறம் மாறாதிருந்தால் அது அசுத்தமே. நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும். அது துணியின் உட்புறத்திலிருந்தாலும் வெளிப்புறத்திலிருந்தாலும் அது அரிக்கிற ரோகமே.

துவைக்கப்பட்ட பின் நிறம் மங்கிப் போயிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில் அது ஆடையிலாவது தோலிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது இராதபடி கிழித்துப் போட வேண்டும். அது இன்னும் ஆடையிலாவது நெய்த துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது காணப்பட்டால் அது வெளிப்பட்டுத் தோன்றுகின்ற ரோகமே. அந்த ரோகம் உள்ளதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.

ஆடையாவது நெய்த துணியாவது பின்னிய துணியாவது தோலினால் செய்த எந்தப் பொருளாவது துவைக்கப்பட்ட பின் அந்த ரோகம் அதை விட்டுப்போயிற்றேயானால் அதை இரண்டாம் தரமும் துவைக்க வேண்டும். அப்பொழுது சுத்தமாகும். கம்பளி ஆடை, பஞ்சு ஆடை, நெய்த துணி, தோலினால் செய்த எவ்வகைப் பொருள் ஆகிய இவற்றுக்குரிய குஷ்டரோகப் பரிகாரம் இதுவே.

லேவியராகமம் 13ஆம் அதிகாரம் 47 முதல் 59 வரையிலான வசனங்கள்.

இவை அப்படியே பைபிளில் இடம்பெற்ற வாசகங்கள்!

குஷ்டரோகமும், அதற்குப் பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக் கூட நீங்கள் சோதிக்க முடியாது, ஆசாரியன் தான் சோதிக்க வேண்டும். பாவம் பெண்கள்…!

இது கர்த்தர் சொன்னதா? அல்லது கள்ளத் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டதா? கர்த்தர் சொல்லியிருந்தால் அந்தக் கர்த்தரின் ஞானம் எவ்வளவு விசாலமானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஆ) வீட்டுக்கும் குஷ்டரோகம்

இனி வீட்டுக் குஷ்டத்தையும் விபரமாக அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் காணியாட்சியான தேசத்திலே ஒரு வீட்டிலே குஷ்டரோகத்தை நான் வரப் பண்ணினால் அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டில் ரோகம் போன்றதொன்று வந்திருக்கிறதாகத் தோன்றுகின்றது என்று ஆசாரியனுக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் அசுத்தமாய்ப் போகாதபடி அந்த ரோகத்தைப் பார்க்கப் போகும் முன்னே வீட்டை ஒழித்து வைக்கும்படிச் சொல்ல வேண்டும்.

பின்பு ஆசாரியன் போய் அந்த வீட்டைப் பார்க்க வேண்டும். அந்த ரோகம் இருக்கிற இடத்தைப் பார்க்கும் போது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான கறைகள் உண்டாயிருக்கவும் அவைகள் சுற்றிலுமிருக்க சுவருக்கு பள்ளமாயிருக்கவும் கண்டால் ஆசாரியன் வீட்டை விட்டு வெளியே வாசற்படியில் வந்து வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும்.

ஏழாம் நாளில் அவன் திரும்பப் பார்க்கும் போது ரோகம் வீட்டுச் சுவர்களில் பரவினதென்று கண்டால் ரோகம் இருக்கும் கற்களைப் பெயர்த்து ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடச் சொல்ல வேண்டும். வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச் சொல்லி செதுக்கிப் போட்ட மண்ணை ஊருக்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்தில் கொட்டவும், வேறு கற்களை எடுத்து வந்து பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வைத்துக் கட்டி வேறு சாந்தைக் கொண்டு வீட்டைப் பூசவும் கட்டளையிட வேண்டும். கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கிப் புதிதாய் பூசின பின்பும் ரோகம் மறுபடியும் வீட்டில் வெளிப்படத் தோன்றுமானால் ஆசாரியன் போய்ப் பார்க்க வேண்டும்.

பார்க்கும் போது ரோகம் வீட்டில் பரவியிருக்கிறதென்று கண்டால் அது வீட்டில் உண்டாகும் அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாம். ஆகவே வீட்டை இடித்து அதன் கற்களையும் மரங்களையும் அதன் சாந்து எல்லாவற்றையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொண்டு போய்ப் போடவேண்டும்.

வீடு அடைபட்டிருக்கும் நாட்களில் அதற்குள் செல்லுகிறவன் சாயங்கால மட்டும் தீட்டப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் துவைக்க வேண்டும். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் துவைக்க வேண்டும்.

ஆசாரியன் திரும்ப வந்து பார்க்கும் போது வீடு பூசப்பட்ட பின் வீட்டிலே ரோகம் பரவவில்லை என்று கண்டானேயாகில் ரோகம் நிவர்த்தியாகி விட்டபடியால் ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்க வேண்டும். அப்பொழுது ஆசாரியன் வீட்டுக்குத் தோஷங்களைக் கழிக்க இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகயையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரின் மேல் கொன்று, கேதுருக் கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் உயிருள்ள குருவியையும் எடுத்துக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் இவைகளைத் தோய்த்து வீட்டின் மேல் ஏழுதரம் தெளிக்க வேண்டும்.

லேவியராகமம் 14ஆம் அதிகாரம் 34 முதல் 52 வரையிலான வசனங்கள் இவை.

இவை போல் அனேக தமாஷ்கள் லேவியராகமம் முழுவதிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை எழுதிப் பக்கங்களை வீணடிப்பதை விடக் கிறித்தவர்களே லேவியராகமத்தைக் கருத்தூன்றி படிக்கும்படி விட்டு விடுகிறோம்.

இதை இறை வேதம் என்று நம்புவது கிடக்கட்டும்! புத்தி சுவாதீனமுள்ள மனிதனின் கற்பனை என்றாவது உங்களால் நம்ப முடிகின்றதா? இதை எப்படி இறை வேதம் என்று நம்புகின்றீர்கள்? உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.

இதே அளவுகோலில் இன்னும் சிலவற்றை அளந்து பார்ப்போம்.

இ) பலிக்காத சாபம்

கடவுள் ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாளையும் படைத்தான். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனிகளை மட்டும் உண்ணக் கூடாது என்று அவர்களுக்குக் கடவுள் தடை விதித்திருந்தான். அவர்களிருவரும் கடவுளின் இந்தக் கட்டளையை மீறி அந்தக் கனியை உண்டார்கள்.

இந்தச் சம்பவத்தை ஒட்டி, பைபிள் கூறும் சில விஷயங்களை மேற்கண்ட அளவுகோலால் அளந்து பார்க்கும் பொழுது பைபிள் இறை வேதத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றது என்பதை எவரும் உணரலாம். பைபிள் கூறுகிறது:

ஸ்திரீயிடமோ நீ கற்பவதியாய் இருக்கும் போது உன் வாதையை மிகவும் பெருகப் பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்றார்.

ஆதியாகமம் 3:16

கர்த்தரின் கட்டளையை மீறியதற்காகக் கடவுள் இட்ட சாபம் இது! இது எத்தனை வகைகளில் பொருந்தாமல் போகின்றது என்பதை உங்கள் அறிவில் உரசிப் பாருங்கள் நண்பர்களே!

பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்படுகின்றது என்பது உண்மை தான். கடவுள் சொல்லா விட்டாலும் கூட இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் சரியா? பொருத்தமானது தானா? என்பதே ஆராய வேண்டிய விஷயம்.

1: கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியை உண்டதற்காகத் தான் இந்தச் சாபம் என்றால் கட்டளையை மீறியது ஏவாள் மட்டுமல்லவே? ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே! பாவத்தில் சம பங்கு கொண்ட அவருக்கும் மற்ற ஆண்களுக்கும் ஏன் பிரசவமோ, பிரசவ வலியோ ஏற்படுவதில்லை?

2: ஏவாள் கடவுளின் கட்டளையை மீறிக் கனியை உண்டதனால் அவருக்கு மட்டும் தானே பிரசவ வலி ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தில் சம்பந்தப்படாத மற்ற பெண்களுக்கும் ஏன் பிரசவ வலி ஏற்பட வேண்டும்?

3: பெற்றோரின் குற்றம் பிள்ளைகளைச் சேரும் என்று கிறித்தவ உலகம் சமாளிக்குமானால் ஏவாள் பெற்றெடுத்த ஆண்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கிருக்க வேண்டுமே? ஏவாளின் சந்ததிகளான ஆண்களுக்கு அந்த வலி ஏற்படுவதில்லையே அது ஏன்?

4: தாயின் தவறில் அவரது பெண் சந்ததிகளுக்கும் தந்தையின் தவறில் அவரது ஆண் சந்ததிகளுக்கும் தான் பங்கு உண்டு என்று கிறித்தவ உலகம் தங்களின் கோட்பாட்டிற்கு விளக்கமளிப்பார்களானால் ஏவாள் பெற்றெடுத்த எல்லாப் பெண்களுக்கும் இந்த வலி ஏற்பட வேண்டுமே? மலடிகளுக்கும், மலட்டு ஆண்களை மணந்து கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே? அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது? கிறித்தவக் கோட்பாடு தான் என்னாவது? பிரசவிக்காத பெண்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கு இல்லையா? அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா? அவர்கள் தாய் வயிற்றில் பிறக்காமல் தாமாகத் தோன்றியவர்களா?

கிறித்தவக் கன்னியாஸ்திரீகளின் நிலை என்ன? பைபிளின் கொள்கை என்னாவது?

5: பாவத்தின் நிமித்தம் கடவுள் இட்ட சாபம் தான் பிரசவ வலி என்றால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் அந்த வலி இருக்க வேண்டும் ஆடு, மாடு உள்ளிட்ட பிரசவிக்கும் அனைத்து உயிரினங்களும் பிரசவ வலியால் துடிக்கின்றனவே! அது ஏன்? எல்லா ஜீவராசிகளின் தாய்களும் கர்த்தரின் கட்டளைகளை மீறி விலக்கப்பட்ட கனியை உண்டுவிட்டனவா?

இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகளை இந்த வசனம் எழுப்பத் தூண்டுகிறது. கர்த்தர் சொன்ன பிரகாரம் எல்லாப் பெண்களுக்கும் (மலடிகள் உட்பட) பிரசவ வலி ஏற்படாததால் இது கள்ளத் தீர்க்கதரிசி தன் துணிகரத்தினாலே உண்டு பண்ணிச் சொன்னது என்பது தெளிவாகின்றது.

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்! அவர்களால் இந்தக் கேள்விகளுக்கு நியாயமான விடை அளிக்கவே முடியாது. கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவைகளும் பைபிளில் உள்ளன என்ற உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ஈ) கால்களை இழந்த பாம்புகள்

இதே சம்பவத்தின் தொடரில் பைபிளில் இடம் பெற்றுள்ள மற்றொரு அபத்தத்தையும் பாருங்கள்! விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு ஏவாளைத் தூண்டியது பாம்பு என்று பைபிள் கூறுகின்றது. அதனால் கடவுள் பாம்புக்குச் சாபம் கொடுத்ததாகவும் கூறுகின்றது.

கடவுளாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜந்துகளிலும் சர்ப்பமே தந்திரம் உள்ளதாயிருந்தது.

ஆதியாகமம் 3:1

நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களுக்கும், சகல காட்டு மிருகங்களுக்கும் விலக்கப்பட்டுச் சாபத்துக்குள்ளாவாய். கடவுளாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து உன் வயிற்றினாலேயே நீ நகர்ந்து உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்றார்.

ஆதியாகமம் 3:14

1: மனிதனைத் தவறான வழியில் செலுத்தும் அளவுக்குப் பாம்புக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் இன்று எந்தப் பாம்பும் எந்த மனிதனையும் தவறான வழியில் செல்லத் தூண்டுவதில்லையே! அது ஏன்?

2: கடவுள் படைத்த காட்டு ஜீவராசிகளில் பாம்பு அளவுக்குத் தந்திரம் படைத்தது எதுவுமில்லை என்றால் தந்திரம் உள்ள எந்தப் பாம்பையும் நாம் காணவில்லையே? பாம்பு அளவுக்கு முட்டாள் தனம் நிறைந்த ஜீவராசியையும் அதிகமாக அடிபட்டுச் சாகும் ஜீவராசிகளையும் நாம் காணமுடியவில்லையே ஏன்?

3: நரிகள், பச்சோந்திகள், மீன் கொத்திப் பறவைகள், கொக்குகள், காகங்கள் போன்றவை பாம்பை விடப் பல மடங்கு தந்திரம் கொண்டதாக உள்ளனவே. ஒரு வேளை கர்த்தர் படைத்தவைகளில் அவை அடங்கவில்லையா?

4: ஏவாளைக் கெடுத்ததனால் பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன என்றால் ஏவாளைக் கெடுப்பதற்கு முன்னால் கால்களால் அவை நடந்து சென்றனவா?

5: ஏவாளைக் கெடுத்ததற்காகத் தான் பாம்புகள் தரையில் ஊர்ந்து செல்கின்றன என்றால் அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத பல நூறு புழுவினங்கள் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றனவே! அது ஏன்?

6: தரையில் ஊர்ந்து செல்லாமல் தண்ணீரில் செல்லும் பாம்புகள் வயிற்றால் நகர்ந்து செல்லவில்லையே! அவை விஷயத்தில் கர்த்தரின் சாபம் பலிக்கவில்லையே! அது ஏன்?

7 நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்று கடவுள் இட்ட சாபம் பலிக்கவில்லையே! அது ஏன்? கிறித்தவ நண்பர்களே! மண் தின்னும் பாம்புகள் எங்காவது உண்டா?

பதிலளிக்க முடியாத இத்தனை கேள்விகளை எழுப்பக் கூடிய வசனங்கள் கர்த்தர் சொன்னவையா? கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவையா? நியாய உணர்வுடன் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

உ) அதிசயப் பிரசவம்

நடந்திருக்க முடியாத, நம்ப முடியாத விஷயங்களின் வரிசையில் மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

ஒரு பெண் தன் மாமனாருடன் தகாத முறையில் உறவு கொண்டு கர்ப்பமாகி விடுகிறாள். (இந்தச் சம்பவம் பின்னர் விவரமாகக் கூறப்படும்) அவளது கர்ப்பத்தில் இரண்டு குழந்தைகள் உருவாயின. அது பற்றி பைபிள் கூறுவதைக் கவனியுங்கள்:

அவளுக்குப் பிரசவ காலம் வந்த போது அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பிரசவிக்கும் போது ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து அதில் சிவப்பு நூலைக் கட்டி இது முதலில் வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது அதன் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்  நீ மீறியது என்ன? என்று சொன்னாள்.

ஆதியாகமம் 38:27-30

இவ்வாறு நடந்திருக்க முடியாது என்பது தெளிவானது. இதிலிருந்து எழும் கேள்விகளுக்குக் கிறித்தவ உலகம் பதிலளிக்கட்டும்!

1: பிரசவத்தின் போது தலை தான் முதலில் வெளிப்பட வேண்டும். அது தான் சுகப் பிரசவமாக இருக்க முடியும். இல்லையென்றால் அன்றைய காலத்தில் தாயின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். முதலில் கை வெளிப்பட்டதும் மருத்துவச்சி திடுக்கிட்டிருக்க வேண்டும். இந்த ஆபத்தான கட்டத்தில் மருத்துவச்சி சிவப்பு நூலைக் கட்டியிருப்பாளா?

2: கையை நீட்டிய குழந்தை கையை உள்ளே இழுத்துக் கொள்ளும் என்பதும் கர்ப்பத்தில் இன்னொரு குழந்தை இருந்ததும் மருத்துவச்சிக்கு எப்படித் தெரிந்தது?

3: இதையெல்லாம் எதிர்பார்த்துச் சிவப்பு நூலை அவள் எடுத்துச் சென்றாளா?

4: கர்ப்ப அறையின் வாசலை ஒரு குழந்தை அடைத்துக் கொண்டிருக்கும் போது அதன் சகோதரன் எப்படி வெளிப்பட முடியும்?

இப்படி ஏராளமான கேள்விகள்! இந்தக் கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும். விபச்சாரத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் பிரசவித்த முறையை விலாவாரியாகக் கடவுள் விளக்க வேண்டுமா? இதனால் பயன் என்ன?

ஊ) உறைந்த இரத்தம் பீறிட்ட அதிசயம்

இதே போன்ற இன்னொரு கதையைக் கேளுங்கள்! ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது உடலில் இருந்த இரத்தம் உறைந்து விடும் என்பது நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. இறந்தவனைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அவனிடமிருந்து இரத்தம் எதுவும் பீறிட்டு வராது என்பதிலும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. இந்த உண்மையை பைபிள் விளக்குவதைக் கேளுங்கள்!

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து அவர் மரித்திருக்கறதைக் கண்டு அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச் சேவகர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

யோவான் 19:33,34

கிறித்தவ நம்பிக்கையின் படி -பைபிளின் கூற்றுப்படி – இயேசு சாதாரணமாக மரிக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கிறார். இவ்வாறு சிலுவையில் அறையப்பட்டதனால் அவரது உடலிலிருந்த இரத்தம் முழுமையாக வெளியேறி இருக்கும். அதன் பின்னர் அவர் மரித்து விட்டதால் ஏதேனும் இரத்தம் அவர் உடலில் மீதமிருந்தால் அதுவும் உறைந்து போயிருக்கும். அவரது விலாவில் ஈட்டியால் குத்தினால் இரத்தம் எப்படி புறப்பட்டிருக்கும்? இதைச் சிந்தித்தாலும் இது கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது என்பதை விளங்கலாம்.

இவை போல் நம்ப முடியாதவைகளும், நடைமுறைச் சாத்தியமற்றவைகளும் பைபிளில் ஏராளம் மலிந்து காணப்படுகின்றன. மாதிரிக்குச் சில விஷயங்களை மட்டுமே கூறியிருக்கின்றோம். கடவுள் சொன்னதாக இருந்தால், அது எந்தத் தகுதியில் இருக்க வேண்டும் என்று பைபிளே ஒப்புக் கொள்கின்றதோ அந்தத் தகுதி நிச்சயமாக பைபிளுக்கு இல்லை. இந்தக் காரணத்தாலும் பைபிள் இறை வேதமல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

 9) ஆபாசம்

இறை வேதம் என்பது அனைவரும் படித்து அதன் படி ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும். தந்தையும் மகளும், தாயும் மகனும், அண்ணனும் தங்கையும், ஒன்றாக அமர்ந்து படிக்க வெட்கப்படும் அளவுக்கு ஆபாசம் மலிந்துள்ள நூல் நிச்சயம் கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது. இதைச் சாதாரண அறிவு படைத்தவரும் நாகரீக உணர்வு உள்ளவரும் அறியலாம்

(கத்தோலிக்க பைபிளிலும் புரோட்டஸ்டண்டு பைபிளிலும் பின்வரும் கதை இடம் பெற்றுள்ளது என்றாலும் எளிமையான தமிழ் நடையைக் கருதி இதை மட்டும் கத்தோலிக்க பைபிளில் இருந்து தருகிறோம்)

விபச்சார சகோதரிகள்…!

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது  மனிதா! ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் வாலிப வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னி கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர். அவர்களுள் தமக்கையின் பெயர் ஓல்லா, தங்கையின் பெயர் ஓலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஓல்லா சமாரியாவையும், ஓலிபா யெருசலேமையும் குறிக்கின்றன.

ஓல்லா என்னுடையவளாய் இருந்தும், விபச்சாரியானாள்; அசீரியாள் மீது காமம் கொண்டாள்; நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள்.

அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமம் கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள். தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டுவிடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள்.

ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே – அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம் – அவர்கள் அவள் ஆடைகளை உரித்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரைப் பிடித்துக்கொண்டு அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழிமொழிக்குள்ளானாள்.

அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும். தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவளானாள். பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய் ஆசை மூட்டும் அழகு வாலிபர்களுமாய் குதிரை மீது ஏறி வந்து வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள்.

இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம். ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயரின் ஓவியங்களையும் கண்டாள்; அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரத்தைப் போல் இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து படைத் தலைவர்கள் போலத் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள்.

கண்டதும் அவர்கள் மேல் காமம் கொண்டு அவர்களிடம் கல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள். பாபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப் படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டாள்.

இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய்ச் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள். காம வெறியரின் மேல் அவள் மோகங் கொண்டாள்;

அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர் உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்…

எசக்கியேல் 23ஆம் அதிகாரம்

என்று இந்த வேசிகளின் ஆபாசக் கதையை வேதத்தில் கூற வேண்டிய அவசியம் என்ன? இதைத் தாயும் மகனும் அல்லது தந்தையும் மகளும் சேர்ந்து படிக்க இயலுமா? தேவாலயங்களில் கிறித்தவ மதகுருமார்கள் இதைப் படிக்கத் துணிவார்களா? கிறித்தவ நண்பர்களே! சிந்திக்க மாட்டீர்களா?

தந்தையும் குமாரத்திகளும்…?

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோடு கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த வயதானதால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு சயனிப்போம் வா என்றாள்.

அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்.

இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.

ஆதியாகமம் 19:31-37

அண்ணனும் தங்கையும்….?

தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று.

அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.

அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார் வரும் போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன் கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர் அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார் வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்; பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல, அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான்.

அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர் என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார் என்றாள்.

அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான்.

இரண்டாம் சாமுவேல் 13:1-15

மாமனாரும் மருமகளும்….?

சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனையாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலே ஏனாயீம் ஊருக்கு வெளியே சந்தியில் உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அவள் வழியில் இருந்த இடமாய்த் திரும்பி, அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னோடு சேர இடம் கொடு என்றான்.

அதற்கு அவள்: நீர் என்னோடு சேருகிறதற்கு எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன், நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்று சொல்ல, அவள், நீர் அதை அனுப்பும் அளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டுமென்று கேட்க, அவள்: உம் முத்திரை மோதிரமும் உமது தாழ்வடமும் உமது கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து அவளோடு சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பந்தரித்து, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள்.

ஆதியாகமம் 38:14-19

மைத்துனனும் மைத்துனியும்….?

அப்பொழுது யூதா ஓனானைப் பார்த்து, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்திரமாய்ப் படைத்து, உன் தமயனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனின் மனைவியைச் சேரும் போது தன் தமயனுக்குச் சந்ததி உண்டாகாதபடி தன் வித்தைத் தரையிலே விழ விட்டுக் கொடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வையில் தீயதாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப் போட்டார்.

ஆதியாகமம் 38:8-10

தாவீதும் அடுத்தவர் மனைவியும்….?

ஒரு நாள் சாயங்காலம் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரமனை மாடியின் மேல் உலாவிக் கொண்டிருக்கும் போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை மாடியின் மேலிருந்து பார்த்தான். அந்த ஸ்திரீ மிகுந்த அழகுள்ளவள். தாவீது ஆள் அனுப்பி, அந்த ஸ்திரீ யார் என்று விசாரித்தான்; அவள் எலீயாமின் குமாரத்தியும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாளே என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்த போது, அவளோடு சயனித்தான்;

அவள் அப்போது தான் தன் தீட்டு நீங்கி, சுத்திகரித்துக் கொண்டிருந்தாள்; பின்பு அவள் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, தான் கர்ப்பவதி என்று தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பினாள். அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு என்று யோவாப்பினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடம் அனுப்பினான்……. தாவீது அவனைப் போர்க்களத்துக்கு அனுப்பிக் கொல்லச் செய்தான்.

இரண்டாம் சாமுவேல் 11:2-18

கிழவனும் குமரியும்…..?

தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானான்; போர்வைகளினால் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை. அப்பொழுது அவன் ஊழியர் அவனிடம் வந்து: கன்னிகையான ஒரு வாலிபப் பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவது நலம்; அவள் ராஜா சமூகத்தில் நின்று ராஜாவுக்குப் பணிவிடை செய்து, ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உமது மடியிலே படுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள். அப்படியே அவர்கள் இஸ்ரவேலின் நாடெங்கும் அழகான ஒரு வாலிபப் பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடம் கொண்டு வந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 1:1-3

இப்படி முறையற்ற ஆண், பெண் தொடர்புக் கதைகள் மட்டுமின்றி பெண்களைப் பச்சையாக வர்ணிக்கும் கவிதைகளும் கூட பைபிளில் காணப்படுகின்றன. இறை வேதத்தில் இத்தகைய வர்ணனைகள் இருக்கலாமா? அதன் அவசியம் என்ன? என்பதை கிறித்தவ நண்பர்களே நடுநிலையோடு சிந்தியுங்கள்!

* மனோகரமான அன்பே! உனது அழகை என் சொல்ல! நீ எத்தனை இனிமை!

* பனை போல் உயர்ந்தாய்; ஸ்தனங்கள் குலைகளாம்.

* பனை மரத்திலேறி மடல்கள் பிடிப்பேன் என்றேன்.

* உன் ஸ்தனங்கள் திராட்சைக் குலைகளைப் போன்றவை.

* உன் சுவாச வாசனை கிச்சிலிப்பழம் போலும்.

* உன் வாய் உத்தம திராட்சரசமாம்.

* அந்த ரசம் என் வாயிலே மெதுவாயிறங்கும்,

* உதட்டையும் பற்களையும் அது நனைக்கும்.

* நான் உரியேன் காதலர்க்கு, அவர் ஆசை என் மேலாம்.

* வாரும், என் காதலரே, வயல் வெளிக்குச் செல்வோம், கிராமங்களிலே ராத்தங்கிடுவோம்.

* காலையில் எழுந்து திராட்சத்தோட்டம் சென்று

* திராட்சை தளிர்த்ததா, அதன் பூ மலர்ந்ததா,

* மாதளை பூத்ததா என்று பார்த்திடுவோம்;

* அங்கே என் அன்பை உமக்கு அளித்திடுவேன்;

* காதற்பழங்கள் வாசனை வீசும்;

* புதியவும் பழையவும் அரிய பல்கனிகள் நமது வாசல்கள் அண்டையிலுண்டு என் காதலரே! உமக்கென்றே அவை வைத்தேன்.

உன்னதப் பாட்டு 7:6-130

* ஆ! நீர் என் தாயின் பாலுண்ட என் சகோரனாயிருப்பின் எத்தனை நன்றாம்!

* நான் உம்மை வெளியே கண்டு முத்தமிட்டாலும் எவரும் என்னை நிந்தனை செய்யார்.

* என் தாய் வீட்டுக்கழைத்துப் போவேன், நீர்எனக்கப் போதிப்பீர், நீர்குடிப்பதற்கு நான் மணமுள்ள ரசமும், மாதளம்பழ ரசமும் தருவேன்.

* அவர் இடக்கை என் தலைக்கணையாக அவர் வலக்கை என்னைத் தழுவிக் கொள்ளுமே.

உன்னதப் பாட்டு 8:1-3

* நமக்கு ஓர் இளைய தங்கை உண்டு,

* அவளுக்கு இன்னும் ஸ்தனங்கள் இல்லை,

* அவளைப் பெண் பேசவரும் நாளிலே நாம் அவளுக்கு என்ன செய்வோம்.

* அவள் மதிலாயின் வெள்ளி முடியதின் மேல் அமைப்போம்;

* வாசலாயின் அதற்குக் கேருரப் பலகை வைத்தடைப்போம்.

* நான் மதிலே, என் ஸ்தனங்கள் கோபுரங்கள்;

* அவர் கண்களிலே கடாட்சம் பெறலானேன்.

உன்னதப் பாட்டு 8:8-10

* உன் உதடு சிவப்பு நூல், வாயும் இனிமை,

* முக்காட்டினுள் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்.

* உன் கழுத்து தாவீதின் கோபுரமே போலும்,

* ஆயுத சாலையாய்க் கட்டியது அக்கோபுரம்;

* இவையெல்லாம் பராக்கிரமமுள்ளவர் கேடங்கள்.

* உனது இரு ஸ்தனங்கள் லில்லி மலர் மேயும் இள வெளிமான் இரண்டாம், இரட்டை மான் குட்டிகளாம்.

உன்னதப் பாட்டு 4:3-5

* குலமகளே, பாதரட்சையிட்டு நீ நர்த்தனம் செய்கின்ற அழகை என் சொல்ல!

* உனது இடுப்பின் உருண்டை வடிவம் கை தேர்ந்தவன் செய்யும் கழுத்தணி போன்றதே.

* உன் மடிவட்ட கலசமாம், அதிலே இனிய ரசம் என்றும் வற்றாதாகும்;

* உன் வயிறு லிலி சூழ் கோதுமை அம்பரம்.

* உன் ஸ்தனமிரண்டும் இள வெளி மானிரண்டாம்,

உன்னதப் பாட்டு 7:2-4

உன்னதப்பாட்டு நெடுகிலும் இப்படிக் கொச்சையான வர்ணனைகள் ஏராளம்! கிறித்தவ நண்பர்களே! இந்தப் போதனைகள் மனிதனை நல்வழிப்படுத்துமா? அவனைத் தவறான உறவுக்கு இழுத்துச் செல்லுமா? தகாத முறையில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் அடைவதற்குத் தந்திரமான வழிகளைக் கற்றுத் தருவதாக இந்த வசனங்கள் இல்லையா? இதன் பிறகுமா பைபிளை இறை வேதம் என்கிறீர்கள்?