Tamil Bayan Points

06) வேதங்களை நம்புதல்

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

Last Updated on April 23, 2023 by

பாடம் 5

வேதங்களை நம்புதல்

 

வேதங்கள் என்றால் என்ன?

மனித  சமுதாயம் இவ்வுலகில் நேரான வழியில் நடப்பதற்காகவும் மறுமையில் வெற்றி பெறுவதற்காகவும் இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டதே வேதங்களாகும்.

எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டுள்ளதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.

فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ  البقرة

எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான்.

(அல்குர்ஆன் 14:4)

திருக்குர்ஆனில் பெயர் கூறப்பட்டுள்ள வேதங்கள்  எத்தனை?

எல்லா இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் வேதங்களை அருளியுள்ளான். ஆனால், அவற்றின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.    திருக்குர்ஆனில் நான்கு வேதங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு :

  1. ஸபூர்  :    தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)
  2. தவ்ராத்  :    மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:44)
  3. இஞ்சில்  :    ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)
  4. திருக்குர்ஆன் : முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)

 

கிதாப் என்பதற்கும் ஸுஹுஃபு  என்பதற்கும் மத்தியில் வேறுபாடு உள்ளதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய திருமறைக்குர்ஆன்  கிதாப்  என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்  திருக்குர்ஆனை ஸுஹுஃபு  என்றும் அல்லாஹ் கூறியுள்ளான்..

 

رَسُولٌ مِنْ اللَّهِ يَتْلُوا صُحُفًا مُطَهَّرَةً(2) سورة البينة

இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளைக் கூறுகிறார். 

(அல்குர்ஆன் 98:2)

இவ்வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுஹுஃபை ஓதிக் காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.  இதி­ருந்து ஸுஹுஃபு என்பதும், கிதாப் என்பதும்  ஒன்றுதான் என்பதை நாம் விளங்கி்க் கொள்ளலாம்.

 

 

முந்தைய வேதங்களை எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும்.?

முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அதைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ”முஹம்மது நபிக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது. அதற்கு முன் எவருக்கும் அருளப்படவில்லை” என எண்ணாமல் எல்லா இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்ற அடிப்படையை நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன, மாற்றப்பட்டன, மறைக்கப்பட்டன, திருத்தப்பட்டன எனவும் பல இடங்களில் கூறுகிறது.

இறுதி வேதம் எது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருமறைக்குர்ஆன்தான் இறுதி வேதம் ஆகும்.

திருக்குர்ஆனைத் தவிர எந்தவித மாறுதலுக்கும் உள்ளாகாத ஒரு வேதமும் உலகில் கிடையாது. அல்லாஹ் இதனை பாதுகாத்துள்ளான். கியாமத் நாள் வரை இதுதான் பின்பற்றப்படவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :

 

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ(9) سورة الحجر

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன் 15:9)

 

وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ

இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:19)