Tamil Bayan Points

5) சிலுவைப் பலி

நூல்கள்: இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

Last Updated on October 30, 2022 by

5) சிலுவைப் பலி

இனி சிலுவைப் பலி சம்மந்தமான பவுலின் கொள்கையை நாம் ஆராய்வோம். இதில் பல உட்பிரிவுகள் உள்ளன. ஆதாம் பாவம் செய்தார். அதனால் அவரது வழித்தோன்றல்கள் பாவிகளாகப் பிறக்கிறார்கள்

பிறவிப் பாவமாகிய இப்பாவம் விலக வேண்டுமானால் மாபெரும் உயிர்ப் பலி கொடுக்க வேண்டும். எனவே இயேசு தானாக முன் வந்து மனிதர்களின் பாவத்தைச் சுமப்பதற்காகத் தன் உயிரை விட்டார்.

இயேசு நமது பாவத்தைச் சுமப்பதற்காக உயிரை விட்டார் என்பதை யார் நம்பி ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களின் பிறவிப் பாவம் மன்னிக்கப்படும். இவை சரியானவை தானா என்பதை ஒவ்வொன்றாக ஆராய்வோம்

மன்னிக்கப்பட்ட ஆதாமின் பாவம்

ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறி தடுக்கப்பட்ட கனியைப் புசித்தார்கள். அதனால் அவர்கள் பாவிகளானார்கள் என்பதில் நமக்கு மறுப்பு இல்லை. ஆதாம் செய்த இந்தப் பாவத்தில் உண்மையில் ஆதாமுக்குச் சம்மந்தம் இல்லை என்று கர்த்தர் கூறியதாக பைபிள் கூறுகிறது.

பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ விருட்சத்தின் கனியையும் பறித்து புசித்து என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும் என்று அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பி விட்டார்.

ஆதியாகமம் 3:22,23

ஆதாம் என்றென்றைக்கும் உயிரோடு இருந்து விடக் கூடாது என்பதற்காகவும், மண்ணைப் பண்படுத்துவதற்காகவும் அவரைப் பூமிக்கு அனுப்ப வேண்டும் என்று கர்த்தரே திட்டமிட்டுக் கனியைப் புசிக்க வைத்ததாக பைபிள் கூறுகிறது.

மேலும் ஆதாம் நன்மை தீமையை அறியத் தக்கவராக ஆகி விட்டார் எனக் கர்த்தர் கூறியதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது.

நன்மை தீமையை அறியத் தக்க தகுதியை அடைந்து விட்ட ஆதாம், கர்த்தரின் கட்டளையை மீறியது தவறு என்பதையும் நிச்சயம் அறிவார். அதற்காக இறைவனிடம் அவர் மன்னிப்பும் கேட்டிருப்பார். ஆதாம் மன்னிப்புக் கேட்கவில்லை என்று நாம் முடிவு செய்தால் ஆதாம் நன்மை தீமையை அறிந்து கொண்டார் என்ற கர்த்தரின் கூற்றை மறுக்கும் நிலை ஏற்படும்.

பாவம் செய்வது எப்படி மனிதனின் இயல்பாக உள்ளதோ அது போல் பாவங்களை மன்னிப்பது கர்த்தரின் இயல்பாகும். கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டாலும் கர்த்தர் மன்னிக்க மாட்டார் என்று கருதுவது கர்த்தரின் இலக்கணத்துக்கு எதிரானதாகும்.

ஆதாம் பாவம் செய்தார் என்ற போதும் ஆதாமின் பாவத்தைக் கர்த்தர் மன்னித்து விட்ட பிறகு பிறவிப் பாவம் என்பதற்கு இடம் இல்லை.

கிறித்தவர்களின் கத்தோலிக்கப் பிரிவுக்கும் புரோட்டஸ்டண்ட் பிரிவுக்கும் தனித்தனியான பைபிள்கள் உள்ளன. கத்தோலிக்கர் பைபிளில் ஞான ஆகமம் என்று ஒரு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை புரோட்டஸ்டண்டுகள் நீக்கி விட்டனர். அந்த ஆகமத்தில் ஆதாமின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சாவுக்குப் பின் திரும்பி வருதல் இல்லை. முடிவு முத்திரையிடப்படுகின்றது. எவனும் திரும்பி வருதல் இல்லை. முதல் மனிதன் தனியாக உண்டாக்கப்பட்டிருந்தான். ஞானமே அவனைக் காத்து வந்தது. அவனைப் பாவத்தினின்று விடுவித்தது.

ஞான ஆகமம் 10:1 

ஆதாம் செய்தது பாவம் என்றாலும் அவர் பாவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று மேற்கண்ட வசனம் தெளிவாகச் சொல்கிறது. பாவம் செய்த ஆதாமே பாவி இல்லை எனும் போது அவரது சந்ததிகள் பாவிகளாகப் பிறக்கிறார்கள் என்பதும், அவர்களுக்காக இயேசு தன்னையே பலி கொடுத்தார் என்பதும் சுக்கு நூறாக நொறுங்கிப் போகின்றது.

முந்தைய நீதிமான்களின் நிலை என்ன?

இயேசுவுக்கு முன்னர் வாழ்ந்த நோவா, ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ரவேல், தாவீது, சாலமோன் உள்ளிட்ட அநேக நீதிமான்கள் பற்றி பைபிள் பேசுகிறது. இவர்கள் நல்லவர்களாகவும் நீதிமான்களாகவும் இருந்தார்கள் என்று பைபிளில் கூறப்படுவது சிலுவைப் பலி கொள்கையை உடைத்து எறிகிறது.

ஏனெனில் முந்தைய நீதிமான்களில் யாரும் இயேசுவைப் பார்க்கவில்லை. மனிதர்களின் பாவத்தைச் சுமக்க இயேசு சிலுவையில் அறையப்படுவார் என்பதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அப்படி இருந்தும் அவர்கள் நீதிமான்கள் என்று கூறப்படுவ்தால பிறவிப் பாவம் என்று ஒரு பாவம் இல்லை என்பது உறுதியாகின்றது.

பிறவிப்பாவம் என்று ஒன்று இருந்தால் அவர்கள் நீதிமான்களாக முடியாது. ஏனெனில் அவர்கள் யாரும் சிலுவைப் பலி கொள்கையை நம்பவில்லை. அவர்களுக்கு இது தெரிந்திருக்கவும் இல்லை.

ஒருவர் சுமையை இன்னொருவர் சுமக்க முடியுமா?

ஒரு வாதத்துக்காக ஆதாமின் பாவம் மன்னிக்கப்படவில்லை என்று வைத்துக் கொண்டாலும் சிலுவைப் பலி கொள்கை சரியான கொள்கையாகி விட முடியாது. இந்தக் கொள்கை பைபிளின் போதனைக்கும், பகுத்தறிவுக்கும், உலக நடைமுறைக்கும் எதிரானதாகும்.

குற்றம் செய்யும் மனிதர்களைத் தண்டிக்க உலக நாடுகளில் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. போப் ஆண்டவர் ஆட்சி செய்யும் வாடிகன் உள்ளிட்ட கிறித்தவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் தந்தை செய்யும் கொலைக்காகவும், இன்ன பிற குற்றங்களுக்காகவும் மகனைத் தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவில்லை. அவ்வாறு சட்டம் இயற்றுவது அறிவுக்கு எதிரானது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரிகிறது.

தந்தை செய்யும் குற்றத்துக்கு மகன் தண்டிக்கப்படுவான் என்று எந்த நாட்டிலாவது சட்டம் இயற்றப்பட்டால் ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்து இது மனித உரிமைக்கு எதிரானது; காட்டுமிராண்டித்தனமானது என்று கொதித்து எழுந்து விடும்.

மனிதர்களின் சாதாரண அறிவுக்கே இது மடமை என்று தெரிகிறது என்றால் படைத்த இறைவன் இப்படி ஒரு முட்டாள்தனமான சட்டத்தை இயற்றுவானா என்று கிறித்தவ நண்பர்கள் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஆதாம் பாவம் செய்தார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. அதற்காகப் பாவியாகக் கருதப்பட வேண்டும் என்றால் ஆதாம் மட்டுமே பாவியாகக் கருதப்பட வேண்டும். அவர் செய்த பாவத்தால் அவரது பிள்ளைகளும் எப்படி பாவிகளாவார்கள்? கடவுளுக்கு அறிவே கிடையாது என்று கருதத் தூண்டும் இந்தக் கொள்கையைக் கிறித்தவ மக்கள் எப்படி நம்புகிறார்கள்?

பைபிளும் கூட இக்கொள்கையை மிகத் தெளிவாகக் கூறுவதைப் பாருங்கள்!

“பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்பட வேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்”

உபாகமம் : 24:16

“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. நீதிமானுடைய நீதி அவன் மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன் மேல் தான் இருக்கும்”

எசேக்கியேல் 18:20

“பிதாக்கள் திராட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின என்று அந்நாட்களில் சொல்ல மாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான். எந்த மனுஷன் திராட்சக் காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப் போகும்”

எரேமியா 31:29,30

நமது பகுத்தறிவு எதைச் சரி காண்கிறதோ அதையே தான் பைபிளின் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. பைபிளின் போதனைப்படியும் அறிவுப்பூர்வமான பார்வையிலும் நாம் பாவிகளாகவே பிறக்கவில்லை எனும் போது நம்முடைய பாவத்தைச் சுமக்க இயேசு தனது உயிரைத் தியாகம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

ஆதம் செய்த பாவத்தால் நாமும் பாவிகளாகப் பிறக்கிறோம் என்று வைத்துக் கொண்டால் இன்னொரு வகையிலும் இக்கொள்கை தவறாக இருக்கிறது.

நாம் பாவிகளாகப் பிறந்தால் நாம் தானே அதற்காகப் பரிகாரம் தேட வேண்டும்? இதற்காக இயேசு ஏன் பலியாக வேண்டும்? அவர் பலியானால் அது அவரது பாவத்துக்குத் தான் பரிகாரமாக அமையுமே தவிர நம்முடைய பாவத்துக்கு எப்படி அது பரிகாரமாக ஆகும்?

இயேசுவின் போதனைகள் பைபிளில் எழுதப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் போது பாவியாகப் பிறக்கிறான் என்றோ, அந்தப் பாவங்களை நான் சுமந்து கொள்வதற்காக என் உயிரைப் பலி கொடுக்கிறேன் என்றோ இயேசு கூறியதாக பைபிளின் கூறப்படவில்லை.

கிறித்தவர்களின் எதிரியாக இருந்து அவர்களுக்கு சொல்லொணாத துன்பங்கள் கொடுத்த பவுல் என்பவர் தான் இக்கொள்கையைப் பின்னர் உருவாக்கினாரே தவிர இது இயேசு உருவாக்கிய கொள்கை அல்ல.

இயேசு தானாகப் பலியானாரா?

மனிதர்களின் பாவங்களைச் சுமந்து கொள்வதற்காக இயேசு தன் உயிரைப் பலி கொடுத்தார் என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை. பைபிளை நாம் வாசிக்கும் போது பலியாவதை இயேசு அறவே விரும்பவில்லை; அதைத் தவிர்க்க தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் அவர் செய்தார்.

ஆனாலும் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். அவர் விரும்பாமலே எதிரிகளால் சிலுவையில் அறையப்பட்டார் என்று அறிய முடிகிறது. இப்படி இருக்கும் போது மனிதர்களின் பாவத்தைச் சுமக்க இயேசு தன்னைப் பலி கொடுத்தார் எனக் கூறுவது கட்டுக் கதையாகும். பைபிளுக்கு எதிரானதாகும்.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

தப்பிக்க முயற்சி செய்தல்

இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.

மத்தேயு 26:5

அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள்.

மத்தேயு-12:14

இரண்டு நாளைக்குப் பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலை செய்யும்படி வகை தேடினார்கள்.

மாற்கு-14:1

அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலை செய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகை தேடினார்கள்.

லூக்கா-22:2

இயேசு மனிதர்களின் பாவத்தைச் சுமந்து கொள்ள ஆசைப்படவில்லை. அவரது சீர்திருத்தக் கருத்துக்களால் பாதிக்கப்பட்ட மதகுருமார்களும் ஆட்சியாளர்களும் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதன் அடிப்படையிலேயே இயேசு கொல்லப்பட்டார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இயேசு என்ன செய்தார்? அருமையான வாய்ப்பு! இதற்காகத் தான் நான் காத்துக் கிடந்தேன். இதோ வந்து விட்டேன்; என்னைப் பலியிடுங்கள் என்று முன் வந்தாரா? இல்லை.

தன்னைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் இறைஞ்சினார்

அது மட்டுமின்றி தன்னைக் காப்பாற்றுமாறு கர்த்தரிடம் மனமுருகி அவர் வேண்டினார்.

இயேசு கடவுளிடம் மன்றாடினார்

தன்னைச் சிலுவையில் அறைந்து கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதை அறிந்த இயேசு அதிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் மன்றாடினார். மனமுருகி பிரார்த்தனை செய்தார் என்று பைபிள கூறுகிறது.

அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டு போய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

அப்பொழுது, அவர் என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.

பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக் கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்;

அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக் கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்;. அவர் திரும்ப வந்த போது, அவர்கள் மறுபடியும் நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்;

அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களை விட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வாட்;த்தைகளையே சொல்லி, ஜெபம் பண்ணினார். 

மத்தேயு 26:36-44

பின்பு கெத்செமனே எனப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம் பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக் கொண்டு போய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப் போகக் கூடுமானால் அது நீங்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.

பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக் கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் ச்பண்ணினார்.

மாற்கு 14:32-39

பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார்; அவருடைய சீஷரும் அவரோடே கூடப் போனார்கள். அவ்விடத்தில் சோர்ந்த பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லி, அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம் போய், முழங்கால்படியிட்டு: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.

அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவா; மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. அவா; ஜெபம் பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு: நீங்கள் நித்திரை பண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்றார்;

லூக்கா 22:39-46

மனிதர்கள் அனைவரின் பாவத்தைச் சுமப்பதற்காக தன் உயிரைக் கொடுத்தார் என்றால் அவராக முன் வந்து சிலுவையில் தன்னை அறைந்து கொண்டு பலியாகி இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதை மனதாலாவது விரும்பி இருக்க வேண்டும்.

எதிரிகள் தன்னைக் கொன்று விடாமல் காப்பாற்றுமாறு கர்த்தரிடம் அவர் மன்றாடி இருக்கக் கூடாது. அவருக்கே விருப்பமில்லாமல் அவர் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதை அவர் விரும்பி பலியானார் என்று கூறி மக்களை ஏமாற்றுவது நியாயம் தானா?

பயந்து நடுங்குதல்

பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டுபோய் துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது;

நீங்கள் இங்கே தங்கி என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி சற்று அப்புறம்போய் முகங்குப்புற விழுந்து: என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார்.

மத்தேயு 26:37-39

பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக் கொண்டு போய் திகிலடையவும் மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.. அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள் என்று சொல்லி

மாற்கு 14:33,34

தன்னைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்ததும் அவர் துக்கமும் கவலையும் அடைந்துள்ளார். சாதாரணக் கவலை அல்ல. மரணத்துக்கு நிகரான கவலை தனக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் கலங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் போது மனிதர்களின் பாவத்தைச் சுமக்க தன்னையே பலி கொடுத்தார் என்று பவுல் கூறுவதை எப்படி கிறித்தவர்கள் நம்புகிறார்கள்.

காட்டிக் கொடுக்கப்பட்டார்

மனிதர்களின் ஜென்மப் பாவத்தைச் சுமப்பதற்காக இயேசு தன் உயிரைக் கொடுத்தார் என்று நம்பும் கிறித்தவர்கள், இயேசுவை அவரது சீடர் ஒருவர் காட்டிக் கொடுத்ததாகவும் நம்புகிறார்கள். நான்கு சுவிஷேசங்களும் இதைத் தெளிவாகவும் கூறுகின்றன.

அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலை செய்யும்படி யோசித்து ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால் எவ்விதமாய் அப்படிச்செய்யலாமென்று வகைதேடினார்கள். அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.

அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய் அவரைக் காட்டிக் கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான். அவர்கள் சந்தோஷப்பட்டு அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். அதற்கு அவன் சம்மதித்து ஜனக் கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும்படி சமயந்தேடினான்.

லூக்கா 22:2-6

பின்பு: இதோ என்னைக் காட்டிக் கொடுக்கிறவனுடைய கை என்னுடனே கூடப் பந்தியிலிருக்கிறது. தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமார்ன் போகிறார் ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.

லூக்கா 22:21-23

அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். இயேசு அவனை நோக்கி: யூதாசே முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய் என்றார்.

லூக்கா 22:47,48

இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய சீஷருடனே கூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். இயேசு தம்முடைய சீஷருடனே கூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால் அவரைக் காட்டிக் கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.

யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக் கொண்டு பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.

யோவான் 18:1-3

அவர்கள் பந்தியமர்ந்து போஜனம் பண்ணுகையில் இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 14:18

அவரைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே அவரண்டையில் சேர்ந்து: ரபீ ரபீ என்று சொல்லி அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள்.

மாற்கு 14:44-46

நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன் நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அது முதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

மத்தேயு 26:15,16

மனிதர்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தன்னைத் தானே பலி கொடுத்தார் என்பது உண்மையாக இருந்தால் அவர் தானாக தன்னைச் சிலுவையில் அறைந்திருக்க வேண்டும். அல்லது அவரது எதிரிகள் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்திருப்பதைக் கேள்விப்பட்டு அதை வரவேற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் அவர் ஓடி ஒளிந்திருக்கிறார். இதனால் தான் அவரது சீடர்களில் ஒருவரே அவரைக் காட்டிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. ஓடி ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்பவரைத் தான் காட்டிக் கொடுக்கும் அவசியம் ஏற்படும்.

தன்னைப் பலி கொடுக்க அறவே விருப்பமில்லாத ஒருவரை வலுக்கட்டாயமாக யாராவது பலி கொடுத்தால் அது அவர் மனமுவந்து கொடுத்த பலியாக ஆகுமா?

எல்லா மனிதர்களும் இது போன்ற இடர் வரும் போது எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்வார்களோ அது போல் தான் இயேசுவும் முயற்சி செய்தார். இது ஒரு சாதாரணமான சம்பவம் தானே தவிர மனித குலத்தின் பாவத்தைச் சுமக்க பலி கொடுத்தல் என்பதற்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை. கிறித்தவ மக்கள் இதைக் கவனமுடன் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அது மட்டுமின்றி இனி மேல் தப்பிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது கடைசிக் கட்டத்தில் அவர் கூறிய வார்த்தைகள் சிலுவைப் பலி கொள்கை கட்டுக் கதை என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

ஏன் என்னைக் கைவிட்டீர்?

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்ட பொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.

உடனே அவர்களில் ஒருவன் ஓடி கடற்காளானை எடுத்து காடியில் தோய்த்து அதை ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். மற்றவர்களோ: பொறு எலியா இவனை இரட்சிக்க வருவானோ பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஆவியை விட்டார்.

அப்பொழுது தேவாலயத்தின் திரைச் சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.

மத்தேயு 27:46-51

ஒன்பதாம் மணி நேரத்திலே இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்ட பொழுது: இதோ எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.

ஒருவன் ஓடி கடற்காளானைக் காடியிலே தோய்த்து அதை ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து: பொறுங்கள் எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான். இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

அப்பொழுது தேவாலயத்தின் திரைச் சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்ட போது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.

மாற்கு 15:34-39

உயிரை விடும் போது கடைசியாக என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று இயேசு கூறியதில் இருந்து தெரிய வருவது என்ன? கடவுள் எப்படியும் நம்மைக் காப்பாற்றி விடுவார்; நாம் சிலுவையில் இருந்து தப்பித்து விடுவோம் என்று தான் அவர் நம்பி இருக்கிறார்.

அத்தகைய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறார். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போன பின் ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கர்த்தரிடம் முறையிட்டு உயிரை விட்டார். அப்படியானால் இவர் தன்னைப் பலி கொடுக்கும் எண்ணம் அறவே இல்லாதிருந்தார் என்பது தெரிகிறது.

கடைசி வரை உயிர் பிழைக்கப் போராடிய இயேசு அவரது விருப்பத்துக்கு மாறாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு பாவிகளை இரட்சிக்க தன்னையே பலி கொடுத்தார் என்று கிறித்தவர்கள் எப்படி நம்புகிறார்கள்? இயேசுவுக்கு எதிராக புதுக் கொள்கையை ஆதாரமின்றி உருவாக்கிய பவுலின் கொள்கையை இயேசுவின் கொள்கை என்று எப்படி நம்புகிறார்கள்?

இது தான் நமக்கு வியப்பாக உள்ளது. பைபிளுக்கு எதிரான ஒரு கொள்கை- இயேசுவுக்கு எதிரான ஒரு கொள்கை இயேசுவின் கொள்கை என்று ஆக்கப்பட்டது வரலாற்று அதிசயமாகவே தெரிகிறது.