Tamil Bayan Points

49) சிந்தித்துப் பேசுங்கள்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

சிந்தித்துப் பேசுங்கள்

 عَنْ أَبِي هُرَيْرَةَ، سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ
«إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ، مَا يَتَبَيَّنُ فِيهَا، يَزِلُّ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ المَشْرِقِ»

ஓர் அடியான் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறான். அதன் காரணமாக அவன் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி – 647

விளக்கம்:

மனிதனின் உறுப்புகளில் நாக்கு முக்கியமான உறுப்பாகும். இதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறும் மனிதன் இதனால் இழிவடையவும் செய்கின்றான் நல்லதைப் பேசுவதற்கும், நன்மையை மற்றவர்களிடம் எடுத்துரைப்பதற்கும் பயன்படும் இந்த நாவு. மற்றவர்களைக் கெடுப்பதற்கும் அழிப்பதற்கும் பயன்படுகிறது. சில நேரங்களில் நரகத்தின் அடிபாதாளத்தில் விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் தான் மனிதனிடம் அதிகம் பயப்பட வேண்டியது நாவு என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

மனிதன் சில நேரங்களில் பயன்படுத்தும் வார்த்தைகள் பல குடும்பங்களைப் பிரிப்பதற்கும், சில உயிரைப் பறிப்பதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. எனவே எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அளந்து, கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.