Tamil Bayan Points

44) துன்பத்தின் போது

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

துன்பத்தின் போது

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»

(துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பை விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி – 1297

விளக்கம்:

மனிதனின் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். அப்போது பொறுமை மேற்கொள்வது இறைநம்பிக்கையாளரின் கடமையாகும். ஆனால் பலர் துன்ப நேரங்களில் கன்னங்களில் அறைந்து கொள்வதும், சட்டையைக் கிழித்துக் கொள்வதும் ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வதும், ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு நடந்து கொள்பவர்கள் இஸ்லாமியர்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். துன்பங்கள் நேரும் போது, படைத்தவன் நம்மைச் சோதிக்கின்றான் என்று எண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்து “இறைவா! இந்தச் சோதனைக்குப் பகரமாக கூலியைக் கொடு! இதை விடச் சிறந்ததை வழங்கு” என்று கூற வேண்டுமே தவிர கன்னங்களில் அடித்துக் கொள்வதும், சட்டைகளை கிழித்துக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் கண்டிப்பாகக் கூடாது.