43) இறைவனிடத்தில் மோசமானவர்
நூல்கள்: நாவை பேணுவோம்Last Updated on July 12, 2023 by
இறைவனிடத்தில் மோசமானவர்
மற்றவர்களிடம் நற்பெயர் எடுப்பதை விடவும் படைத்த இறைவனிடம் நற்பெயர் எடுப்பது முக்கியமான ஒன்றாகும். அதற்காக இவ்வுலகில் பல வணக்க வழிபாடுகள் செய்து முயற்சிக்க வேண்டும் அதே சமயம் இறைவனிடம் அவப் பெயரை பெற்றுத்தரும் எந்த காரியத்திலும் ஒரு முஸ்லிம் ஈடுபடக்கூடாது. அது அவனின் மறுமை வாழ்க்கைக்கு பெரிதும் கேடு விழைவிப்பவையாகும் அருவருப்பான பேச்சை பேசுபவர்கள் இறைவனிடம் அவப்பெயரை எடுக்கின்றார்கள்.
மனிதர்களில் மிகவும் மோசமானவன் என்ற கெட்ட பெயரை ஒரு அடியான் அருவருப்பான பேச்சை பேசுவதின் மூலம் பெற்று விடுகின்றான். இவ்வுலகில் சில ஜால்ராக்கள் ரசிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டவர்கள் தன் இறைவன் இதை வெறுக்கின்றான் என்பதை மறந்து விட்டார்கள் இந்த அவப்பெயரை எடுப்பதிலிருந்தும் இறைவன் நம்மை காப்பாற்ற வேண்டும்.
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர் என்று (அவரைப்) பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிட(மு)ம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான்
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள், பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே? என்று கேட்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா! மக்கள் எவரது அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத் தற்காத்துக் கொள்ள அவரை விட்டு ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சென்னேன்) என்றார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லீம்-6054