Tamil Bayan Points

அன்பளிப்பு செய்வோம்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 17, 2023 by Trichy Farook

அன்பளிப்பு செய்வோம்
அன்பளிப்பின் சிறப்பு:

மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் மற்றொருவரோடு தொடர்பு கொண்டு தான் இவ்வுலகில் வாழ முடியும். பிறரோடு தொடர்பே இல்லாமல் எவராலும் வாழ இயலாது. தான் தொழில் செய்யும் போது, அல்லது கடையில் பொருள்கள் வாங்கும் போது, கடன் கொடுக்கும் போது, வாங்கும் போது, என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிற மனிதர்களை சார்ந்து தான் வாழ இயலும்.

அப்படி வாழும் நம்மிடையே ஒற்றுமையும், பாசமும் மேலோங்க வேண்டும் என்பதற்காக, இஸ்லாம் ஒரு அழகான வழிமுறையை கற்றுத் தருகிறது. அது தான் அன்பளிப்பு. ஒருவர் பிறருக்கு, நண்பருக்கு அன்பின் காரணமாக ஒரு பொருளையோ, உணவையோ, ஆடையையோ அல்லது வேறு எதையுமோ கொடுப்பது. இதன் காரணமாக அந்த இருவருக்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. அதனால் தான் நபிகள் நாயகம் அன்பளிப்பு செய்யுமாறு நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«تَهَادُوا تَحَابُّوا»

நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : அல்அதபுல்முஃப்ரத்-594 

பல்லாயிரம் ரூபாய் செய்யாததை இந்த அன்பளிப்பு செய்து விடும். அன்பிற்காக, நேசத்திற்காக ஒரு மனிதன் பிறருக்கு எதை வேண்டுமானாலும் செய்வான். இந்த அன்பளிப்பை வழங்கும் போது நாம் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது.

எது அன்பளிப்பு?

அன்பளிப்பு என்றால் ஒரு விலை உயர்ந்த செல்போன், வீடு, கார், நகைகள் போன்ற பெரிய பொருட்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அன்பளிப்பு மிகச் சிறியதாகக் கூட இருக்கலாம். ஒரு பேனாவாகக் கூட இருக்கலாம். ஒருவர் தன் நண்பருக்கு வாங்கித் தரும் ஒரு டீயாகக் கூட இருக்கலாம். அதை கொடுப்பதையும், நாம் அதை வாங்குவதையும் இழிவாக கருதக்கூடாது.  

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ ، أَوْ كُرَاعٍ لأَجَبْتُ وَلَوْ أُهْدِيَ إِلَيَّ ذِرَاعٌ ، أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி! நான் அதைப் பெற்றுக் கொள்வேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-2568 

முதலி­ல் யாருக்கு அன்பளிப்புச் செய்வது.

இரண்டு நண்பர்கள் இருந்தால் நெருங்கியவருக்குத் தான் முதலில் தரவேண்டும். நெருங்கியவரை புறக்கணித்து மற்றவர்களுக்கு தருவதை நபியவர்கள் வழிகாட்ட வில்லை.

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي؟ قَالَ: «إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا»

நான் நபியவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் (முத­ல்) அன்பளிப்பு செய்வது என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவ்விருவரில் யாருடைய வாசல் உன் வீட்டுக்கு அருகில் உள்ளதோ அவருக்கு அன்பளிப்பு செய் என்றார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி-2595 

எனவே, நம் வீட்டில் ஒரு சுவையான உணவை சமைத்தால், அதை வாய்ப்பு கிடைக்கும் நேரங்களிலெல்லாம் அண்டை வீட்டாருக்கு, நண்பர்களுக்கு சிறிதளவாவது கொடுத்து அன்பை வளத்துக் கொள்ள வேண்டும்.

சொல்லிக் காட்டக் கூடாது.

அன்பளிப்பாக இருந்தாலும் சரி, தர்மமாக இருந்தாலும் சரி அதனை ஒருபோதும் சொல்லிக்காட்டக் கூடாது. இதை அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கிறான். சொல்லிக் காட்டுவதால் ஏற்படும் வெறுப்பு ஒருபோதும் நீங்காது. அதற்கு பிறகு அவர் எந்த அன்பளிப்பையும் நம்மிடமிருந்து பெறவும் மாட்டார்.  நான்கு பேருக்கு மத்தியில் வைத்து சொல்லிவிட்டார் என்று வேதனைப்படவும் செய்வார். அதனால்  தான், இதை அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கிறான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லி­க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!

இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

 (அல்குர்ஆன்: 2:264)

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏
اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا‏
فَوَقٰٮهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا‌ۚ‏

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும்  நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்” (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி­லிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.

(அல்குர்ஆன்: 76:8)

திரும்பப் பெறக்கூடாது.

அதுபோல, எக்காரணத்தைக் கொண்டும் அன்பளிப்பை ஒருவருக்கு கொடுத்துவிட்டால் திருப்பி பெறவேண்டும் என்று நினைக்கவே கூடாது. அது எவ்வளவு முக்கியமான பொருளாக இருந்தாலும் சரி. கொடுப்பதற்கு முன்னால் எவ்வளவு வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் கொடுத்த பிறகு, அது உங்களுடையது அல்ல. அவர்களுடையது. நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்பதற்காக, வேறு வழியில்லாமல் தருகிறார். தரும் போது, ”பிச்சைகாரன்; கொடுத்துட்டு திரும்ப கேட்கிறான்” என்று நம்மை கேவலமாக கருதவும் செய்வார். அதனால் தான் நபியவர்கள் கூறுகிறார்கள்.

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِه

தன் அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறி : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-2622 , 6975

فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ

புகாரி-2623 ஆவது ஹதீஸில், தம் தர்மத்தை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்…. என்று இடம்பெற்றுள்ளது.

அன்பளிப்பை திரும்ப பெறக்கூடாது என்றாலும் தந்தை மட்டும் தன் மகனுக்கு செய்த அன்பளிப்பை பெற்றுக் கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

لاَ يَحِلُّ لأَحَدٍ أَنْ يُعْطِيَ عَطِيَّةً فَيَرْجِعَ فِيهَا إِلاَّ الوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்பளிப்பை கொடுத்து அதனை திரும்பப்பெறுவது ஒரு தந்தை தன்மகனுக்கு கொடுக்கின்ற விஷயத்தில் தவிர எந்த ஒரு முஸ்லி­முக்கு அது ஹலால் (அனுமதி) இல்லை.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் :  திர்மிதீ-1298 , நஸயீ (3630)

பிள்ளைகளுக்கு நீதமாக அன்பளிப்புச் செய்தல்

அன்பளிப்பு செய்வதில் அனைத்து குழந்தைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ளவேண்டும்.

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ أَنَّ أَبَاهُ أَتَى بِهِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ
إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا فَقَالَ أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ قَالَ : لاََ قَالَ فَارْجِعْهُ

நுஃமான் பின் பஷீர்(ரலி) அவர்களை அவர்களுடைய தந்தை நபியவர்களிடம் அழைத்துச்சென்று எனக்கு சொந்தமான அடிமையை எனது இந்த மகனுக்கு அன்பளிப்புச்செய்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபியவர்கள் உன் பிள்ளைகள் அனைவருக்கும் இதைப்போன்று அன்பளிப்‎பு செய்துள்ளீரா?  என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். கூறினார்கள்

அறி : நுஃமான் பின் பஷீர் (ரலி),
நூல் : புகாரி-2586 

பிரதிஉபகாரம்

நபியவர்களோ அன்பளிப்புப் பொருளை வாங்குவதோடு மட்டும் இல்லாமல் அதற்கு பிரதி உபகாரம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். எனவே, காலம் முழுவதும் வாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. வாய்ப்பு கிடைக்கும் போது பிரதிஉபகாரம் செய்ய வேண்டும்.

 عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا

நபியவர்கள் அன்பளிப்பை வாங்குபவர்களாகவும், அதற்கு பதில் உபகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

அறி : ஆயிஷா (ர­லி),
நூல் : புகாரி-2585 

ஏழைகள் தரும் சிறிய அன்பளிப்பு சிறிதாக இருந்தாலும் அந்த அன்பளிப்பையும் முகமலர்ந்து ஏற்க வேண்டும்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسَنَ شَاةٍ

நபியவர்கள் கூறினார்கள்:
முஸ்லி­மான பெண்களே! ஒரு அண்டைவீட்டுக்காரி மற்ற அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) கொடுத்தாலும்  அவள் அலட்சியம் செய்யவேண்டாம்.

அறி : அபூஹுரைரா(ரலி),
நூல் : புகாரி-2566 

மறுக்கக் கூடாத அன்பளிப்பு

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيب

நபியவர்கள் வாசனை திரவியத்தை நிராகரிப்பதில்லை.

அறி : அனஸ் (ர­லி),
நூல் : புகாரி-2582 

லஞ்சம்

அன்பளிப்பை வாங்க வேண்டும், மறுக்கக் கூடாது என்பதெல்லாம் அனுமதிக்கப்பட்ட பொருட்களில் தான். ஒருவர் சாராய பாட்டிலை கொடுத்து, ”இதை அன்பளிப்பாக வைத்து கொள்ளுங்கள்” என்றால், அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்கவும் கூடாது. அதைப் போல, இன்றைக்கு வரதட்சனை, வட்டி, லஞ்சம் போன்றவை அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படுகின்றன.

وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

(அல்குர்ஆன்: 2:188)

எனவே, மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட லஞ்சமாக தரும் பொருட்களை அன்பளிப்பாக வாங்கவோ கொடுக்கவோ கூடாது. இதுபோன்ற சட்டங்களை பேணி, அன்பளிப்பு செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக!