Tamil Bayan Points

4) வாழத்தகுந்த கோள்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்-2

Last Updated on December 20, 2022 by Trichy Farook

வாழத்தகுந்த கோள்

நாம் வாழுகின்ற இந்த பூமி எல்லையற்ற பரப்பளவைக் கொண்ட உலகமாக பழங்கால மக்களால் நம்பப்பட்டு வந்தது. அவர்களிலுள்ள தத்துவ சிந்தனையாளர்கள் அவர்களின் அறிவுக் கேற்ற கற்பனைத் திறனோடு வித்தியாசமான சில உலகங்களைப் பற்றிய விபரங்களை மக்களிடம் போதனை செய்தனர். காலப்போக்கில் மக்கள் எழுத்தறிவைப் பெற்ற போது அவர்களின் இப்பழங்கதைகளெல்லாம் புராணங்களில் நிரப்பப்பட்டன. அவர்கள் நம்பி வந்த வித்தியாசமான உலகங்கள் வானத்திற்கு மேலும் பூமிக்குக் கீழும் இருந்தன.

அவற்றுள் சில இன்பங்கள் நிறைந்த வியத்தகு உலகங்களாகவும் வேறுசில துன்பங்கள் நிறைந்த கொடூரமானவைகளாகவும் இருந்தன. ஆனால் அந்த முற்கால சிந்தனையாளர்கள் ஒருவரும் நமது பூமியின் இயற்கை மற்றும் இயற்பியல் குணங்களை முழுமையாகப் பெற்று பூமியை ஒத்திருக்கும் உலகங்கள் வேறு உள்ளனவா என சிந்திக்கவில்லை. ஆனால் தற்போதைய விஞ்ஞானியர்களில் ஒரு சாரார் நமது பூமியை ஒத்த கிரகங்கள் வேறு உள்ளனவா எனத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நமது சூரியக் குடும்பத்தை அரித்தெடுத்த அறிவியலாளர்கள் இப்போது இதர நட்சத்திரங்களின் சுற்றுச் சூழலில் நமது பூமியை ஒத்த கிரகங்கள் உள்ளனவா என தேடத் தொடங்கி விட்டனர். என்றேனும் ஒருநாள் அப்படிப்பட்ட கிரகங்கள் பலவற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் பரவலாக இருந்து வருகிறது.

மனுகுலத் தந்தை ஆதம்

உலகில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் இப்பேரண்டத்திற்கோர் படைப்பாளன் உண்டென்றும் அவனே மானிடப் படைப்பை நிகழ்த்தினான் என்றும் நம்புகின்றனர். கடவுள் முதலில் ஆதமைப் படைத்து அந்த ஆதத்திலிருந்தே அவரின் இணையாம் ஹவ்வாவையும் படைத்து, அவ்விருவரிலிருந்தே மானிட குலத்தைப் பல்கிப் பெருகச் செய்தான் என்பது அவர்களது நம்பிக்கையாகும். இப்படைப்புச் செயலின் முதற்படியாக ஆதமையும் ஹவ்வாவையும் படைத்து அவர்களை இறைவன் சொர்க்கபூமி தோட்டத்தில் குடியமர்த்தினான். இதைக் குறித்து திருக்குர்ஆனின் அறிவிப்பு வருமாறு:

2:35 وَقُلْنَا يٰٓـاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ‏

ஆதமே! நீயும் உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்! என்று நாம் கூறினோம்.

(திருக்குர்ஆன்:2:35.)

மேற்கண்ட வசனத்தில் ஆதமையும் அவரது இணையாம் ஹவ்வாவையும் படைத்த இறைவன் அவர்களை சொர்க்கத் தில் வசிக்கச் செய்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஷைத்தான் அவர்களை ஏமாற்றி அவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டான். அந்த நிகழ்ச்சியைத் திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது.

2:36 فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ‌ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப் படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். “இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்,வசதியும் உள்ளன என்று கூறினோம்.

(திருக்குர்ஆன்:2:36.)

இந்த வசனத்தில் நாம் தேடும் பொருள் குறித்து சில விபரங்கள் தொக்கி நிற்பதைக் காண்கிறோம். அந்த விபரங்கள் நம்மைப் பலவாறு சிந்திக்கத் தூண்டுகின்றன. சொர்க்கத்திலிருந்து வெளியேறும் மனிதனை குடியமர்த்துவதற்காக கடவுள் ஏன் பூவுலகைத் தேர்ந்தெடுத்தான்? இன்று நமக்குப் பேரண்டத்தில் கோடானு கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு என்பதும் அவற்றுள் பலவற்றிற்கும் கோள் குடும்பங்கள் (Planetary systems) உண்டென்றும் தெரியும்.

நமது விஞ்ஞானிகள் நவீன தொலை நோக்கியைக் கொண்டு பேரண்டத்தை ஆய்வு செய்து இப்பேரண்டத்தில் மொத்தமாகக் காணப்படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை பத்து கோடானு கோடி 1022 (ஒன்றுக்குப் பிறகு 22சைபர்கள் உள்ள எண்ணின் மதிப்பு) நட்சத்திரங் களைப் பார்க்க முடிவதாகக் கணக்கிடுகிறார்கள். அவற்றுள் ஆயிரத் தில் ஒன்றுக்கு கோள் குடும்பங்கள் உள்ளதாக அபிப்பிரா யப்படுகிறார்கள். எனவே மொத்தமுள்ள நட்சத்திரங்களை ஆயிரத்தால் வகுக்கும் போது (1022/103) = 1019 = ஒரு லட்சம் கோடானு கோடி (ஒன்றுக்குப் பிறகு 19 சைபர்கள் உள்ள எண்ணின் மதிப்புக்குச் சமம்) நட்சத்திரங்களுக்கு கோள் குடும்பங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது.

(பார்க்க : தி நியூ ஹான்ட் புக் ஆஃப் ஹெவன் பக்கம் – 67)

நாம் இப்போது கண்ட புள்ளி விபரங்கள் பேரண்டத்தில் ஏராளமான கோள்கள் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. பேரண்டத்தில் கோடிக்கணக்கான கோள்கள் இருந்தபோதும் மனிதர்களைக் குடி அமர்த்துவதற்கு பூமி ஏன் தேர்வு செய்யப் பட்டது என்பது இங்கு இயல்பாக எழும் கேள்வியாகும்.

பூமியின் சிறப்பம்சங்கள்

7:10 وَلَقَدْ مَكَّـنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ

“பூமியில் உங்களை (அதிகாரத்துடன்) வாழச் செய்திருக் கிறோம். உங்களுக்கு (வாழ்க்கைகுரிய) வசதி வாய்ப்புகளை யும் இதில் ஏற்படுத்தினோம், (இருப்பினும் நீங்கள்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

(திருக்குர்ஆன்:7:10)

27:61 اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِىَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا‌ ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ

“(நீங்கள் எவைகளையெல்லாம் இறைவனுக்கு இணை கற்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முனைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்

(திருக்குர்ஆன்:27:61.)

மேற்கண்ட திருமறை வசனங்களில் பலதரப்பட்ட விபரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நமது தலைப்புக்கேற்ற விபரங்களாவன: முதல் வசனத்தில் “பூமியில் உங்களை (அதிகாரத்துடன்) வாழச் செய்திருக்கிறோம் எனக் குறிப் பிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் விண்ணில் பற்பல கோள்கள் இருப்பினும், நமக்கு பூமியில் வாழும் தகுதியே அல்லாஹ் வழங்கியுள்ளான் எனும் கருத்தை வெளிப்படுத்துகிறது. இதையே வேறு விதத்தில் கூறினால் நாம் வாழும் தகுதி படைத்த மற்றொரு கோள் பேரண்டத்தில் இல்லை என்பதாகும்.

இரண்டாவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகள், பூமி தாமாகவே (By Chance)மனிதனுக்கேற்ற வசிப்பிடமாக உருவாக வில்லையென்றும் அல்லாஹ் அதை அவ்வாறு உருவாக்கிய தால் மட்டுமே பூமி ஒரு வசிப்பிடமாக மாறியது என்றும் கூறுகிறது. மேலும் பூமியை வசிப்பிடமாக்கும் பொருட்டு அதில் மேற்கொள்ளப்பட்ட பல முக்கியமான பணிகளில் சிலவற்றையும் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

அவைகளாவன: பூமியில் ஆறுகளை உருவாக்குதல், பூமியின் மேற்பரப்பில் நிலச்சரிவு கள் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு முளைகளைப் போன்று மலைகளை நாட்டுதல், கடல்களை உருவாக்கி அக்கடல்கள் சந்திக்கும் இடங்களில் அவைகளுக்கு இடையே கட்புல னாகாத தடைகளை ஏற்படுத்துதல் போன்றவையாகும்.

பூமிகளின் எண்ணிக்கை ஏழு

நாம் வாழும் இந்த பூமியை இதர கோள்களைப் போலன்றி நமக்கு வசிப்பிடமாக இறைவன் உருவாக்கிய தகவல் வேறு பல வசனங்களிலும் நம்மால் பார்க்க முடியும். ஆயினும் இந்த பூமியைப்போன்று வேறு ஒரு கோள் நாம் வாழும் பேரண்டத்தில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் (indication) திருக்குர்ஆனில் தென்படவில்லை.

திருக்குர் ஆனில் ஓரிடத்தில்“அல்லாஹ்வே ஏழு வானங்களையும், பூமியில் அது போன்றதையும் படைத்தான் (65:12) எனக் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் : வானங்கள் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறு பூமியும் அடுக்கடுக்காகப் படைக்கப்பட்டுள்ளது எனும் விளக்கம் கிடைக்கிறது. அதே நேரத்தில் வானங்களின் (பேரண்டத்தின்) எண்ணிக்கை ஏழு என்பதைப்போன்று பூமிகளின் எண்ணிக்கையும் ஏழாகும் எனும் விளக்கமும் இந்த வசனத்திலிருந்து கிடைக்கிறது.

இருப்பினும் இந்த விளக்கம் சரியாக இருந்தால் கூட ஏனைய ஆறு பூமிகள் நாம் வாழும் பேரண்டத்திலன்றி ஏனைய ஆறு பேரண்டங்களைச் சார்ந்ததாகும் என்பதால் நமது பூமியை ஒத்த மற்றொரு பூமி நாம் வாழும் பேரண்டத் தில் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் திருமறையிலிருந்து கிடைக்கவில்லை.

நாம் இதுவரை கண்ட திருக்குர்ஆன் வசனங்களின் விளக்கத்திலிருந்து முக்கியமான மூன்று தகவல்களை அறிந்தோம். அவைகளாவன : முதலாவதாக பேரண்டத்தில் ஏரானமான கோள்களும் துணைக் கோள்களும் இருந்த போதிலும், நாம் வாழும் பூமி மட்டுமே மனிதர்கள் வாழ்வதற்கேற்ற இடமாக இறைவனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும்

இரண்டாவதாக பூமியின் ஏனைய உயிரினங்களைப் போலன்றி மனிதன் பூமியின் மீது ஆதிபத்தியம் (அதிகாரத் துடனான வாழ்க்கையை) நிலை நாட்டக் கூடியவனாகவே தோற்றுவிக்கப்பட்டான் என்பதும்

மூன்றாவதாக இந்தப் பேரண்டத்தில் இந்த பூமியைத் தவிர வேறெந்த கோளும் மனிதன் வாழத் தகுந்த கோளாக இல்லை என்பதுமே அவைகளாகும்.

பூகோளம் உயிரினங்களுக்கேற்றதாய் மாறுதல்

இப்போது நாம் திருமறையிலிருந்து விளங்கிய முதல் செய்தியைப் பார்ப்போம். இப்பேரண்டம் ஒரு பெருவெடிப்பிலிருந்து தோன்றி படிப்படியான பரிணாம வளர்ச்சியிலிருந்து உருவாகப்பெற்றதாகும் என்பதை நாம் முன்னர் கண்டோம். இந்தக் கோட்பாட்டின்படி பார்க்கும்போது பெருவெடிப்புக்குப் பின்னரும் ஏராளமான வெடிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற தாகவும், அவற்றுள் ஒன்றாக விண்ணில் ஓரியன் எனும் பகுதியில் நடைபெற்ற ஒரு வெடிப்பு நிகழ்ச்சியிலிருந்தே நமது சூரியக் குடும்பம் பிறந்ததாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஓரியனிலிருந்து எறியப்பட்ட வாயுப் பொருட் கள் தசலட்சக்கணக்கான வருடங்கள் விண்ணில் சுழன்று கொண்டிருந்தபோது அதன் மையப் பகுதியிலிருந்து சூரியன் உருவாகியது. அதன் வெளிப்புறப்பகுதி காலப்போக்கில் குளிர்ச்சியான விண்வெளியில் குளிர்ந்து படிப்படியாக திரவமாகி பின்பு திடப்பொருளாகி சூரியனுக்குச் சுற்றிலும் காணப்படும் விண்ணகப் பொருட்களாக மாறின.

அவ்வாறு மாறியவற்றுள் ஒன்றே நமது பூமியாகும். யுரேனிய காலக் கணிப்பைப் (Uranium Dating)பயன்படுத்தி பூமியின் வயதை அளந்தபோது நமது பூமி தோன்றி 5000 தசலட்சம் (500கோடி) வருடங்கள் ஆகிவிட்டதாகத் தெரிய வந்ததாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

(பார்க்க ஆஃப் டார் அன்ட் மென் பக்கம் : 85)

பூகோளம் உருவம் பெற்ற தொன்மையான காலகட்டத் தில் காலக்சிகள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாகவும், நட்சத்திரங்கள்கூட பூமிக்கு மிக நெருக்கமானவைகளாகவும் இருந்தன. குறிப்பாக சூரியன் பூமிக்கு மிக நெருக்கமாக இருந்தமையால் வெப்பமும்,கதிரியக்கமும் (Heat and Radiations) பூமியின்மீது மிக வன்மையாக இருந்தன.

நாம் அறிந்தவரை நமது பேரண்டத்தில் சுகவாச தலமாக இருந்து கொண்டிருக்கும் இந்த பூமி,அதன் இளம் வயதில் அமிதமான வெப்பத்தாலும், ஆற்றல் மிகு கதிரியக்கத்தாலும் பொசுக்கப் பட்டிருந்ததோடன்றி மிகக் குறுகிய பரப்பளவைக் கொண்டதும் மிக அடர்த்தி மிக்கதுமான விண்ணகத்தின் இறுக்கத்திற்குள் இருந்து வந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆகாய பூமிகளின் இளமைப் பருவத்தில் காணப்பட்ட இந்த நிலையைக்கூட அற்புதத் திருமறை மிகப் பொருத்த மான வார்த்தைகளில் “வானங்களும் பூமியும் இணைந் திருந்தன (21:30) எனக் கூறியதை நாம் பாகம் 1ல் கண்டோம். பூமியின் இந்த நிலை மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்பது மட்டுமின்றி மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள உயிரினங்களாம் வைர, பாக்டீரியா, கடற்பாசி (Alga) போன்றவை கூட வாழ முடியாத நிலையே அப்போது இருந்து வந்தது.

னவே பூமியில் மனிதன் தோன்ற வேண்டுமாயின் அவனுடைய வாழ்க்கைச் சூழலுக்கும் வாழ்க்கைத் தேவை களுக்கும் மிக இன்றியமையாத உயிரினக் குழுக்கள் அவனுக்கு முன் தோன்றி, பெருகுவதற் கும் ஏற்ற விதத்தில் பூமியின் சூழல் மாற்றப்பட வேண்டி இருந்தது என்பது மிகத் தெளிவாகும். எனவே கோடிக் கணக் கான வருடங்களில் பூமியிலும், அதைச் சூழ்ந்துள்ள விண் வெளியிலும் வேறு எந்தக்கோளிலோ அவைகளைச் சூழ்ந்துள்ள விண்வெளி களிலோ நடைபெறாத பற்பல மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டதன் விளைவாகவே இந்த பூமி ஒரு வசிப்பிடமாக மாற்றப்பட்டது என்பது ஐயத்திற்கிடமில்லாத உண்மையாகும்.

பூமியில் இப்போது மனிதனும், அவனுடைய சக உயிரினக் குழுக்களும் வாழ்ந்து கொண்டிருப்பது மேற் குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமே யாகும். சுருங்கக் கூறின், நமது பூமியின் தோற்றம் இதர கோள்களின் தோற்றம் நடைபெற்றதைப்போன்றே நடை பெற்ற போதிலும், அதன் பிறகு நமது பூமி மட்டும் திருக் குர்ஆன் கூறியது போன்று நாம் வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றப்பட்டது என்பது ஒரு மகத்தான உண்மையாகும்.

பெருவெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகிவரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றப்படுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதாக இருப்பினும் அறிவியல் பார்வையில் மிக, மிக, மிக கடினமான காரியமாகும். அவற்றுள் நாம் அறிந்தவரை முக்கியமான சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். இப்போது மனிதனை இறைவன் பூமியில் ஆதிபத்தியமுள்ளவனாக ஆக்கினான் எனக் கூறும் திருக்குர்ஆன் வசனத்தின் நிலை என்னவென்று பார்ப்போம்.

ஆதிபத்தியம் இறைவனின் தானம்

உயிரினம் (Living Body எனும் பேரினத்தில் (Genus) பூமி யில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 3தசலட்சம் (3 Million) சிற்றினங்களில் (Species) மனிதன் என்பது வெறும் ஒரு சிற்றினமாகும். ஆயினும் அந்த 30 லட்சம் சிற்றினங்களின் மீதுள்ள ஆதிபத்தியம் (Domination) மனிதனின் கைகளிலா கும். இந்த நிலை அவன் பெற்றதற்குக் காரணம் முதலாவதாக ஏனைய உயிரினங்கள் எதற்கும் புத்திமதி வழங்கப்படாமல் அவனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதாகும்.

இதன் விளைவாக ஏனைய உயிரினங்களை எவ்வாறு அடக்கி ஆளலாம் எனச் சிந்தித்து மனிதன் உபாயங்களைக் கண்டு பிடிப்பதைப்போல் ஏனைய சிற்றினங்களால் முடிவதில்லை. எனவே அவையாவும் மனிதனுக்கு அடங்கி வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும்படி அவை படைக்கப்பட்டன.

மனிதன் தன்னுடைய புத்திமதியின் துணைகொண்டு எவ்வளவு வலிமையான பிராணிகளாயினும் அவைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது பூண்டோடு கொன்றொடுக்கவோ ஆற்றலுள்ள உபகரணங்களைப் பெற்று இருக்கின்ற போதிலும், அவன் அவைகளை உருவாக்கிக்கொள்ளும் காலம்வரை அவை இல்லாமலே வாழ்ந்திருக்க வேண்டியிருந்தது.

எனவே அவனை தொடக்கம் முதற்கொண்டே பூமியில் ஆதிபத்தியம் உள்ளவனாக இருக்கும்படி செய்வதற்காக அவனுடைய பண்டைகால கைக்கருவிகளை மீறித் தாக்கும் ஆற்றலுள்ள விலங்கினங்கள் தோன்றாமல் இருக்கும்படி செய்யப்பட்டது. அல்லது தோன்றியிருப்பின் மனிதன் தோன்றுவதற்கு முன் அவை வம்ச நாசம் செய்யப்பட்டது.

முன்னோரு காலத்தில் பூமியில் வாழ்ந்த “டைனோசர் கள் (Dinosaurs) என்பவை இதற்கொரு எடுத்துக்காட்டாகும். அந்த இனத்தில் மிகவும் கொடூரமானதும் ஆபத்தானதுமான சில வகைகள் இருந்தன. அவைகள் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மெசோ சேயிக்யுகத் (Mesozoic Era) தில் ஜுராஸிக் காலகட்டத் (Jurassic Period) தில் உலகின் மீது ஆதிபத்தியம் செலுத்தியதாக அறிவியலாளர்கள் (பார்க்க : ஆஃப் தி டார் அன்ட் மென் பட்டியல்-11) கூறுகின்றனர்.

மனிதன் உலகில் தோற்றுவிக்கப்படும் காலகட்டத்தில் இந்த இனம் இங்கு வாழ்ந்து இருக்குமேயானால் நமது ஆதிகால மூதாதையர்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி இருப்பார்கள். நமது ஆதிகால மூதாதையர்கள் இந்த இனத்தை வெல்லும் கருவிகளைப் பெற்றிருக்காத காரணத்தால் அவைகளை எதிர்த்து வாழ்க்கையை நடத்தி இருக்க முடியாது. எனவே ஒரு பெரிய விண்கல் (Meteor) பூமியைத் தாக்கியதன் விளைவாக பூமியில் தோன்றிய இயற்கை மாற்றங்களால் அந்த இனங்கள் பூமியிலிருந்து பூண்டோடு அழிக்கப்பட்டன. இதன் வாயிலாக மனித இனம் தொடக்கம் முதற்கொண்டே பூமியின் மீது ஆதிபத்தியம் உள்ளவனாக வாழும் அரிய வாய்ப்பைப் பெற்றுக் கொண்டான்.

மனிதனுக்கு ஏற்றதாய் ஆவது எப்படி?

நாம் இப்போது பூமியைத் தவிர இப்பேரண்டத்தில் மனித வாழ்க்கைக்கு ஏற்ற கோள்கள் எதுவும் இல்லை எனத் திருக்குர்ஆனிலிருந்து கண்ட விளக்கம் தொடர்பாக நவீன அறிவியலின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். பேரண்டத் தில் கோடானு கோடிக்கணக்கான கோள்களும், துணைக் கோள்களும் இருப்பதாக அறிவியல் உலகால் அனுமானிக்க இயன்ற போதிலும், இதுவரை அவற்றுள் இரு நூற்றுக்கும் அதிகமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவைகளைப் பற்றிய விபரங்கள் இன்னும் தெரியவில்லை.

ஆனால் நமது சூரியக் குடும்பத்திலுள்ள ஏனைய கோள்கள் மற்றும் துணைக்கோள்களைப் பற்றிப் போதுமான விபரங்கள் நமக்குத் தெரிய வந்துள்ளன. எனவே அவற்றுள் ஏதேனும் ஒன்று மனித வாழ்க்கைக்கு ஏற்புடையதா எனப் பார்ப்போம்.

ஒரு கோள் (அல்லது துணைக் கோள்) உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமாயின் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலாளர் ஷேப்லி அவர்கள் கூறுகிறார். அவையாவன :

1.அந்தக்கோள் நட்சத்திரத்திலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.

  1. அக்கோள் சரியான வெப்பநிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப்பாதை(Orbit)அதற்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.
  2. அந்தக் கோளிற்கு விஷம் கலவாத ஒரு வளிமண்டலம்(Atmosphere) இருக்க வேண்டும்.
  3. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுக்கள்(Sources) இருக்க வேண்டும்.
  4. காற்றும், நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயணக் கலவையாக(Chemical Composition) இருக்க வேண்டும்.
  5. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலைநிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.

(பார்க்க : ஆஃப் டார் அன்ட் மென், பக்கம் : 66-67)

மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர் கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வு, குறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால், மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக்கோள் பெற்றிருக்க வேண்டும். அவையாவன :

  1. அந்த கோள் மனிதனின் உணவிற்கும் ஏனைய உப யோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங் களின் உற்பத்தியை(Production) பெற்றிருக்க வேண்டும்.
  2. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை(Seasons) அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.
  3. இராப்பகலை ஏற்ற விதத்தில் அமையும்படிச் செய்யும் அச்சில் சுழற்சியை(Axial Rotation)அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.
  4. மனிதனுக்கு ஏற்ற விதத்திலான புவி ஈர்ப்பு விசையை அது பெற்றிருக்க வேண்டும்.

ஒரு நிலப்பரப்பு, அது கோள், துணைக்கோள் அல்லது குறுங்கோள் (Minar Planet) எதுவாக இருப்பினும் அது மனித வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமாயின் குறைந்த பட்சம் மேற்கண்ட பத்து சிறப்பம்சங்களையாவது அந்த நிலப்பரப்பு பெற்றிருக்க வேண்டும். நாம் இப்போது நமது சூரியக் குடும்பத்திலுள்ள நிலப்பரப்புகளின் நிலை எப்படி உள்ளது எனப் பார்ப்போம்.

நமது சூரியக் குடும்பம் ஒன்பது பிரதான கோள்களையும் (புளூட்டோவையும் உள்ளடக்கிய கணக்கின்படி) ஆயிரக் கணக்கான குறுங்கோள்களையும் கொண்டிருந்த போதிலும்,வெள்ளியும், செவ்வாயுமே பூமிக்கு அருகில் இருக்கும் கோள் களாகும். எனவே பூமிக்கு அடுத்தபடியாக இவை சூரியனி லிருந்து கிட்டத்தட்ட சரியான தூரத்திற்கு அருகாமையில் இருக்கும் கோள்களாகும்.

அத்துடன் மனித வாழ்க்கைக்கு ஏற்ற கோளாகிய பூமியுடன் அவைகளுக்கு ஒப்பீட்டளவில் சில ஒற்றுமைகளும் இருக்கின்றன. அவ்விரு கோள்களில் வெள்ளி வழக்கமாக பூமியின் இரட்டை சகோதரி (Twin Sister) என அழைக்கப்படும் அளவிற்கு பூமியுடன் மிக நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

வெள்ளிக் கோளின் நிலை

வெள்ளி குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டலத்தை பெற்றிருப்பினும் அதில் பெரும் பகுதி கரி அமில வாயுவே ஆகும். வெள்ளியின் வளிமண்டலத்தில் உள்ள கரி அமில வாயுவின்(Carbon-di-Oxide) அளவு பூமியில் இருப்பதைப் போன்று 200 மடங்கு இருக்கக் கூடும் எனக் கூறுகிறார் அறிவியலாளர் ஹீத் அவர்கள்.

மேலும் சூரியனுக்கு நேருக்கு நேர் கீழ்பகுதியில் நிலவும் வெப்பம் தண்ணீரின் கொதி நிலைக்கு உயரக் கூடும் என்றும் அவர் கூறுகிறார். மேலும் காற்றில் கலந்துள்ள பெருவாரியான கரி அமில வாயுவின் காரணமாக வெள்ளியில் அமில மழை பெய்வதன் காரணமாக அதன் மேற்பரப்பு அரிக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது. வெள்ளியைப் பற்றிக் கூறப்படும் இத்தகவல்களே அது மனிதன் வாழ்வதற்கேற்ற கோளில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

செவ்வாய் வழங்கும் ஏமாற்றம்

நமது பூமிக்கருகில் இருக்கும் மற்றொரு கோள் செவ்வாய் (Mars) ஆகும். செவ்வாய் கோளுக்கும், பூமிக்கும் இடையில் இருக்கின்ற ஒரு சில சிறப்பான ஒற்றுமைகள் காரணமாக மனிதன் வாழ்வதற்கு செவ்வாய் ஒரு உகந்த கோளாகும் என சென்ற நூற்றாண்டில் கிட்டத்தட்ட கடைசி காலகட்டம்வரை அறிவியல் உலகம் நம்பிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் செவ்வாயைப் பற்றிக் கிடைத்துக் கொண்டிருக்கும் தகவல்கள் எல்லாம் நம் போன்ற மனிதர்கள் வாழ்வதற்கு செவ்வாய் உகந்த கோள் இல்லை என்பதாகும்.

செவ்வாயிலுள்ள பிராண வாயுவின் (Oxygen) அளவு ஒரு சதவீதத்தில் பத்தில் ஒன்றாகும். (பூமியில் இதனளவு 21 சதவீதம் என்பதைக் கருத்தில் கொள்க.) காற்றின் ஈரப்பதம் பூமியில் உள்ளதில் 5 சதவீதம் மட்டுமே ஆகும். (பார்க்க : நியூ ஹான்ட் புக் ஆஃப் ஹெவன், பக்கம்69) இங்கிலாந்து வானியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் (Jupiter Section) அலெக்ஸாண்டர்(Od Alexander) அவர்கள் செவ்வாயின் ஈர்ப்பு விசை பூமியினுடைய ஈர்ப்பு விசையில் 0.38பங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார். (பார்க்க : அட்ரானமி ஃபார் எவரி மென், பக்கம் :122,123) இந்தக் கோள் சூரியனிலிருந்து பூமியை விட மிகத் தொலைவில் இருப்பதால் செவ்வாய் பெறும் சூரிய வெப்பம் பூமி பெறும் சூரிய வெப்பத்தில் வெறும் 40 சதவீதம் மட்டுமேயாகும்.

செவ்வாய் கோளின் உற்பத்தியில் தண்ணீரைத் தவிர தாவர இனங்களோ அல்லது விலங்குகளோ அறவே இல்லை. நீரும் கூட திரவ நிலையில் இதுவரை செவ்வாயில் இருப்பதற் கான அறிகுறிகள் தென்படவில்லை.

ஒருசில வருடங்களுக்கு முன் அமெரிக்க நாட்டு துருவ ஆராய்ச்சிக் குழுவுக்கு துருவப் பகுதியிலிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு பாசிலைப் (Fossil) பற்றிய செய்திகள் அனைத்து செய்தி ஊடகங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு பெரிதாக பாராட்டப்பட்டுக்கொண்டிருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த பாசிலை ஆய்வுக்குட்படுத்தி அது செவ்வாயிலிருந்து விழுந்த விண்கல்லே என்றும் அந்தக் கல்லில் முன்னொரு காலத்தில் செவ்வாயில் சூட்சும உயிரிகள் (Microorgananisms) வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

அதன் பிறகு அந்த பாசிலை பற்றி நடைபெற்ற விவாதங் களை நாம் புறக்கணித்து இப்போதும் அங்கு சூட்சும உயிரிகள் உண்டு என்றே வைத்துக்கொண்டாலும் மனித வாழ்வுக்கு சூட்சும உயிரிகள் மட்டும் போதுமானதன்று. எனவே செவ்வாய் கோளைப் பற்றி இதுவரை நாம் பெற்ற விபரங்களே அக்கோள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற கோள் இல்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கக் கூடியதாகும்.

சூரியனுக்கு தொலைவிலுள்ள கோள்களின் நிலை

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்களைப் பற்றி ஓரளவு விபரங்களை அறிந்து கொண்ட நாம், இப்போது சூரியனுக்கு தொலைவிலுள்ள கோள்களைப் பற்றி சில விபரங்களைக் காண்போம். புளூட்டோ (Pluto) எனும் 1930 மார்ச் மாதம் 13ம் தேதி `டோம் பர்க் (Tom Bargh) எனும் அறிவிய லாளரால் கண்டுபிடிக்கப்பட்ட கோளே சூரியனிலிருந்து மிக தொலைவில் இருப்பதாக அதுவரை அறியப்பட்டுள்ள கோளாகும்.

இது சூரியனிலிருந்து3,666 தச லட்சம் மைல் தொலைவில் இருப்பதால் மிகக் குறைந்த சூரிய வெப்பத் தையே இக்கோள் பெறுகிறது. புளூட்டோவை விட சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் நெப்டியூன்(Neptiune- – இது சூரியனிலிருந்து 2793 தசலட்சம் மைல் தொலைவில் இருக்கும் கோளாகும்) எனும் கோளின் வெப்பநிலை (-)330டிகு ஆகும்.

ஆகவே நெப்டியூனை விட தொலைவில் இருக்கும் புளூட்டோவின் வெப்பநிலை நெப்டியூனை விடக் குறைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. (பார்க்க: அட்ரானமி ஃபார் எவரி மென், பக்கம் 199) மனிதன் மட்டுமின்றி பூமியைச் சார்ந்த உயிரினங்களில் எந்த ஒன்றுமே (-)158டி கு வெப்பத்தை விடக் குறைவான வெப்ப நிலையில் வாழ முடியாது என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

இக்கோள் சுற்றுப் பாதையில் செல்லும் வேகம் வினாடிக்கு வெறும் மூன்று மைல்களாகும். (பூமியின் வேகம் வினாடிக்கு பதினெட்டரை மைல்களாகும்) எனவே புளூட்டோவின் ஒரு வருடம் என்பது நமது 248 வருடங் களுக்கு ஒப்பானதாகும். இதன் விளைவாக புளூட்டோவின் பருவ கால மாற்றம் பூமியின் பருவ கால மாற்றத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். (பார்க்க : அதே புத்தகம் பக்கம் 203) எனவே இக்கோள் எல்லா விதத்திலும் மனித வாழ்க்கைக்குத் தகுதியற்றது என்பதற்கு மேற்கண்ட காரணங்கள் போதுமானவையாகும்.

மெர்க்குரியைத் (புதன்) தவிர மற்ற அனைத்துக் கோள்களும் செவ்வாய்க்கும்,புளூட்டோவிற்கும் இடையில் அமைந்திருப்பதால் அவற்றுள் எதுவும் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் அமைந்திருக்கவில்லை. ஒரு நட்சத்திரத் திற்கும், அதன் கோள்களுக்கும் இடையிலுள்ள தூரத்தில் ஏற்படும் வேறுபாடு அந்தக் கோளின் இயற்பாட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இதன் காரணமாக ஒரு கோள் உயிரினங்கள் வாழ்வதற்குத் தகுதி வாய்ந்ததா என்பதைத் தீர்மானிப்பதில் நட்சத்திரத்திலிருந்து அந்தக் கோள் அமைந்திருக்கும் தூரம் பிரதான பங்கேற்கிறது. செவ்வாய்க்கு அப்பாலுள்ள எந்த ஒரு கோளும் சூரியனி லிருந்து சரியான தூரத்தில் அமைந்திருக்கவில்லை எனும் ஒரே ஒரு காரணமே அக்கோள்கள் எதுவும் மனித வாழ்க்கைக்கு ஏற்ற கோள்களாக இல்லை எனத் தீர்மானிப்பதற்கு போதுமான காரணமாகும்.

புதன் கோளின் கதி!

நாம் இப்போது புதன் (Mercury) கோளின் நிலையைப் பார்ப்போம். இக்கோள் சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகும். சூரியனிலிருந்து இது 30 தசலட்சம் மைல் தொலை வில் இருக்கிறது. (பார்க்க : நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன், பக்கம் 63) இதன் காரணமாக அதன் மேற்பரப்பில் வெப்ப நிலை சில நேரங்களில் பூமியைவிட பத்து மடங்கு அதிகமாக உயர்ந்து விடுகிறது.

அதன் பொருண்மை பூமியின் பொருண்மையில் 1/22 பங்கும் அதன் மேற்பரப்பின் ஈர்ப்பு விசை பூமியினுடையதில் 0.29 பங்குமாகும். மேலும் இந்தக் கோள் எப்போதும் சூரியனுக்கு ஒரேயொரு பக்கத்தையே காட்டிக் கொண்டிருப்பதால் இராப்பகல் அங்கு நிரந்தர மானதே அன்றி மாறுவதில்லை. (பார்க்க : அட்ரானமி ஃபார் எவரி மென்,பக்கம் 113-115) இக்கோள் மனித வாழ்க்கைக்கு ஏற்றதில்லை என்பதற்கு இவைகள் போதுமான காரணங்களாகும்.

குறுங்கோளின் பரிதாப நிலை

சூரியக் குடும்பத்தில் அறியப்பட்ட பெரிய கோள்கள் (புளூட்டோ சூரியக் குடும்பத்தின் பிரதான கோள் வரிசை யைச் சாராத கோள் என்பதற்கு சமீப காலத்தில் சில சான்றுகள் கிடைத்தாதாக கூறப்படுகிறது) மேற்கண்டவை களேயாகும். இவைகளைத் தவிர இக்குடும்பத்தில் ஆயிரக் கணக்கான சிறிய கோள்கள் (Minor Planets) இருக்கின்றன.

இவைகளில் எதுவும் ஒரு காற்று மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக இல்லை. இவற்றுள் மிகப் பெரியது “சிறிய (Ceres) என அழைக்கப் படும் கோளாகும். இதன் குறுக்களவு 485 மைல்களாகும். (பார்க்க : பக்கம் 112, அட்ரானமி ஃபார் எவரி மென்) அவை களின் பொருண்மை மிகக் குறைவாக இருப்பதால் அவைகளுக் கும் குறிப்பிடும்படியான ஈர்ப்பாற்றலும் இல்லை. மேலும் அவைகளில் எவ்விதமான உற்பத்திப் பொருட்களும் (நீர், தாவரம் மற்றும் விலங்கினங்கள்) இல்லை. எனவே இக் கோள்கள் எதுவும் மனித வாழ்க்கைக்கு ஏற்றவை இல்லை.

நிலவே! நீயுமா?

சூரியக் குடும்பத்திலுள்ள துணைக்கோள்களில் பூமி யின் துணைக்கோள் மட்டுமே சூரியனிலிருந்து கிட்டத்தட்ட சரியான தூரத்தில் அமைந்த துணைக் கோளாகும். இதன் விட்டம் 2160 மைல்களாகும். இதனுடைய மேற்பரப்பின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் 1/6 பங்காகும். ஆயினும் இந்த ஈர்ப்பு விசை ஒரு வளிமண்டலத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு வலுவற்றதாக இருப்பதால் நிலவில் காற்று அறவே கிடையாது. மேலும் அங்கு உற்பத்தி பொருட்களும் இல்லை. நிலாவின் இராப் பகல்களும் பூமியிலிருந்தும் பெரிதும் வேறுபடுகிறது.

நிலவின் அச்சில் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை என்பதால் நிலவின் ஒருநாள் அதன் மாதத்தைப் போன்று 28 நாட்களாகும். எனவே அங்கு 14 நாட்களுக்கு நீண்ட பகலும் 14நாட்களுக்கு நீண்ட இரவும் (பூமியின் கணக்குப்படி) இருந்து வருகிறது. இவ்வளவு நீண்ட இராப்பகல்களும் காற்று மண்டலம் இல்லாமையும் காரணமாக இது பூமிக்கு மிக அருகில் (ஏறத்தாழ பூமியிலிருந்து 4 லட்சம் கிலோ மீட்டர்) இருந்தும் கூட அதன் தட்ப வெப்ப நிலை பூமியிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.

அங்கு பகல் நேரத்தின் உயர்ந்த வெப்ப நிலை 130டி ஊ ஆகவும் இரவு நேர வெப்ப நிலை மிகவும் குறைந்து சென்று இரவுப் பிரதேசத்தின் மையப்பகுதியின் வெப்ப நிலை (-)156டி ஊ அளவிற்கு தாழ்ந்து விடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

(பார்க்க : நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன், பக்கம் 93-97)

மேற்கூறப்பட்ட அனைத்து பாதகமான சூழல்களோடு நிலவில் மனிதனுக்குத் தேவையான எவ்வித உற்பத்திப் பொருட்களும் இல்லை என்பதையும் பார்க்கும்போது இந்த நிலப்பரப்பு பூமிக்கு மிக அருகில் இருந்தும் கூட புவி வாழ் உயிரினங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஏனையவற்றிலும் ஏமாற்றமே!

துணைக்கோளைப் பொருத்தவரை ஏனைய கோள் களுக்கும் துணைக்கோள்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும். ஆயினும் செவ்வாயின் துணைக்கோளைத் தவிர மற்ற துணைக்கோள்கள் யாவும் சூரியனிலிருந்து புவிவாழ் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான தொலைவில் அமைந்திருக்காமல் மிகவும் தொலைவில் அமைந்துள்ளன.

எனவே அவைகளில் ஒன்றுகூட மனிதனுக்கு ஏற்ற வசிப்பிடமாக இருக்க இயலாது என்பது தெளிவு. ஆனால் செவ்வாயின் துணைக்கோள்கள் அமைந்திருக்கும் தூரம் ஓரளவு சாதகமாக இருப்பினும், அவை மிகவும் சிற்றுருவம் கொண்டவை. (ஒவ்வொன்றும் பத்து மைல் குறுக்களவு கொண்டவை) ஆகும். எனவே இவைகளும் மனிதனுக்கு வசிப்பிடமாக இருக்க தகுதியற்றவைகளாகும் என்பது தெளிவு.

நாம் இதுவரை கூறியதிலிருந்து சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர பெரும் கோள்கள்,குறுங்கோள்கள் மற்றும் துக்கோள்கள் என ஆயிரக்கணக்கான நிலப்பரப்புகள் இருந்த போதிலும், அவைகளில் ஒன்றுகூட மனிதன் வாழ்வ தற்கு ஏற்றதாக இல்லை என்பதை ஐயமறத் தெரிந்து கொண்டோம்.

(வேற்று நட்சத்திரக் கோள்கள் இப்போது கண்டு பிடிக்கப்பட்டிருப்பினும் அவைகளைப் பற்றிய கூடுதல் செய்திகள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை) எனவே இதுவரை நாம் தெரிந்து கொண்ட செய்திகள் யாவும், ஏனைய கோள்களைப் போலன்றி மனிதன் வாழ்வதற்கென்று அல்லாஹ்வால் வேண்டுமென்றே(Purposefully) உருவாக்கப் பட்ட கோளே பூமி எனத் திருக்குர்ஆன் கூறியதை நிரூபிக் கின்ற செய்திகளாகும்.