Tamil Bayan Points

04) வரலாற்று முரண்

நூல்கள்: இது தான் பைபிள்

Last Updated on February 24, 2022 by

வரலாற்று முரண்

இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் பைபிள் இறை வேதம் அல்ல என நாம் கூற வரவில்லை. இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

பழைய ஏற்பாடு என்பது பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். (அதாவது கிறிஸ்தவ நம்பிக்கையின் படி)

உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவை மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டவை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். தவ்ராத் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுவது, இந்த ஐந்து ஆகமங்கள் தாம் என்று முஸ்லிம்களிடம் ஊடுருவிக் குழப்பம் விளைவிக்கும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இந்த ஐந்து ஆகமங்களில் ஒன்றான உபாகமத்தின் இறுதி வசனத்தைப் பாருங்கள்.

1. பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண் மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

2. நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம் வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,

3. தென்புறத்தையும், சோவா வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.

4. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இது தான். இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்து போவதில்லை என்றார்.

5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்.

6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக் குழியை அறியான்.

7. மோசே மரிக்கிற போது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுது கொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

9. மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

10. மோசே எகிப்து தேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.

(மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்கள் இவை)

மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும், அவரை அடக்கம் செய்த விபரமும், மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும், மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாட்கள் துக்கம் கொண்டாடிய செய்தியும், மோசேவுக்குப் பிறகு யோசுவா என்பவர்அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்?

இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை அறிவுடையோர் உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

மேற்கண்ட பைபிள் வசனங்களில்  மோசேவுக்கு நிகரான தீர்க்கதரிசி இஸ்ரவேலில் பிற்காலத்தில் தோன்றியதில்லை என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.

பிற்காலத்தில் மோசேயைப் போல் எவரும் தோன்றவில்லை என்பது இறந்து போய் அடக்கம் பண்ணிய பிறகு மோசேவுக்கு எப்படித் தெரியும்? அதை மோசே எப்படி எழுதியிருக்க முடியும் என்பதையாவது சிந்திக்கக் கூடாதா? பிற்காலம் வரை வாழ்ந்து, அந்தக் காலம் வரை மோசேயைப் போல் எவரும் தோன்றியதில்லை என்பதை அறிந்தவர் தாம் இப்படிச் சொல்ல முடியும். மோசேவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களாலேயே இந்த ஆகமம் எழுதி செருகப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிறிஸ்தவத் திருச்சபையிடம் பதிலில்லை. எந்த விதமான சமாதானமும் கூற முடியாத அளவுக்குக் கேள்விகள் நியாயமாக உள்ளதால் கிறிஸ்தவ உலகம் பின்வரும் பதிலைக் கூறுகின்றது:-

மோயிசனின் (மோசே) மரணத்தைக் குறித்த பகுதியுடன் இப்பகுதி முடிவடைகின்றது. இதைப் பிற்காலத்தில் இந்த நூலில் சேர்த்திருக்கலாம். (பார்க்க: கத்தோலிக்க பைபிள்-உபாகமம் முன்னுரை)

அதாவது இந்தப் பகுதி மட்டும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஒப்புக் கொள்வதன் மூலம் இதைத் தவிர உள்ள மற்ற பகுதிகளின் புனிதத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது கிறிஸ்தவத் திருச்சபை.

இந்தப் பகுதி பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றால் இன்னும் வேறு எவையெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கும் என்ற ஐயம் ஏற்படாதா? கிறிஸ்தவ நண்பர்களே! பிற்காலத்திலும் கூட எதையும் சேர்க்கலாம் என்ற அளவுக்கு அவ்வளவு பாதுகாப்பற்ற பரிதாபமான நிலையில் தான் பைபிள் இருந்து வந்துள்ளது என்பது உங்களுக்குப் புலனாகவில்லையா?

பிற்காலத்தில் தான் இவை சேர்க்கப்பட்டன என்றால் இதை எப்படிக் கண்டுபிடிப்பது? மூலத்துடன் ஒத்துப் பார்க்கலாமே என்றால் மூலம் உலகிலேயே இல்லையே!

இங்கே மற்றொரு நியாயமான சந்தேகமும் நமக்கு வருகின்றது. பின்னாளில் தான் மோசே மரணம் சம்பந்தப்பட பகுதி சேர்க்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் கிறிஸ்தவ உலகம், இடைச் செருகல், பிற்சேர்க்கை என்று தெரிந்த பிறகு அதை அப்புறப்படுத்தாதது ஏன்? வேதத்திலிருந்து அதை நீக்கிவிடுவது தானே முறை! இதையும் செய்யவில்லை.

இதை நீக்கிவிட்டால் இன்னும் ஏராளமான அபத்தங்கள் பைபிள் முழுவதும் மலிந்து கிடக்கின்றனவே அவற்றையும் நீக்க வேண்டியது வரும். அப்படி நீக்கினால் இப்போது இருக்கும் பைபிளில் கால் பாகம் கூட மிஞ்சாது. (அந்த அபத்தங்கள் பிறகு அடையாளம் காட்டப்பட்டுள்ளன.)

இதற்கெல்லாம் அஞ்சித் தான் கிறிஸ்தவத் திருச்சபைகள் இடைச்செருகல் என்று தெரிந்தும் கூட அதை நீக்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டின் நிலை இதுவென்றால் புதிய ஏற்பாடும் இதற்குத் தப்பவில்லை.

புதிய ஏற்பாட்டின் முகப்பில் இயேசு கிறிஸ்தவனின் பரிசுத்த சுவிசேஷம் என்று கத்தோலிக்க பைபிளிலும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு என்று புரோட்டஸ்டண்டு பைபிளிலும் குறிப்பிடப்படுகின்றது. அதாவது பைபிளின் புதிய ஏற்பாடு இயேசுவால் எழுதப்பட்டது என்று நம்ப வைக்க முயல்கிறது கிறிஸ்தவ உலகம்.

புதிய ஏற்பாடு என்பது இயேசுவாலேயே எழுதப்பட்டது என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். அப்படியானால் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மரணம், அவரது அடக்கம், அவருக்காக துக்கம் கொண்டாடிய விபரம் ஆகியவை இடம் பெற்றுள்ளனவே அது எப்படிச் சாத்தியமாகும். இயேசுவுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

பிற்காலத்தில் சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டு அந்தத் தீர்க்கதரிசிகளின் பெயரால் சுவிசேஷங்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்பதே உண்மை. பைபிள் இறை வேதமாக இருக்கவே முடியாது என்பதற்கு இவை மட்டுமின்றி இன்னும் அனேக சான்றுகளும் உள்ளன.

தெளிவான வாக்குமூலம்

பைபிளின் முன் பக்கத்தில் தான் புதிய ஏற்பாடு இயேசுவுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டின் உள்ளே மத்தேயு மார்க்கு, லூக்கா, யோவான் ஆகியோர் எழுதியதாகக் காணப்படுகின்றது! எந்தவொரு இடத்திலும் இயேசு எழுதியதாக பைபிளில் இல்லவே இல்லை. முன் சொன்ன நான்கு சுவிசேஷகர்களும் இன்றைய கிறிஸ்தவத்தை உருவாக்கிய பவுலும் புதிய ஏற்பாட்டில் உள்ளவற்றை தாங்கள் சுயமாகப் எழுதியதாக வாக்குமூலம் தந்துள்ளனர்.

பைபிளின் புதிய ஏற்பாட்டில் மூன்றாவது சுவிசேஷம் லூக்கா என்பது. லூக்கா என்பவர் பரிசுத்த ஆவியின் உந்துதலால் அதை எழுதினார் என கிறிஸ்தவ உலகம் நம்புகின்றது. இந்த லூக்கா என்பவர் தருகின்ற வாக்குமூலத்தைப் பாருங்கள்!

மகாகனம் பொருந்திய தெயோப்பிலுவே! நீங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சந்ததிகளை ஆரம்ப முதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு அறிவித்தபடியே அவைகளைக் குறித்து சரித்திரம் எழுத அனேகர் ஏற்பட்டபடியினாலேயே ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டும் என்று அவர்களை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

லூக்கா 1:2-4

இது நான் நேரடியாகப் பார்த்து எழுதிய வேதம் அன்று; பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதுமன்று; நான் விசாரித்தறிந்ததையே எழுதியிருக்கின்றேன் என லூக்கா ஒப்புக் கொள்கிறார். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு எனவும் ஒப்புக் கொள்கிறார். அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததை நான் கண்ணால் கண்டதில்லை என்றும் ஒப்புக் கொள்கின்றார். இவ்வளவு தெளிவான வாக்கு மூலத்திற்குப் பிறகும் பைபிளை இறை வேதம் என்று யார் தான் நம்ப முடியும்?

புதிய ஏற்பாட்டின் நான்காவது சுவிசேஷத்தை எழுதியவர் யோவான். இவரும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் தான் இதை எழுதினார் எனத் திருச்சபைகள் சாதிக்கின்றன. சம்பந்தப்பட்ட யோவானோ அதை மறுக்கிறார். இதோ யோவான் கூறுவதைக் கேளுங்கள்:-

இயேசு செய்த வேறு அனைத்து காரியங்களும் உண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்களை உலகம் தானும் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.

யோவான் 21:25

இது இறைவேதம் என்பதும், இறைவனின் கட்டளைப் பிரகாரமே எழுதப்பட்டது என்பதும் உண்மையானால் அனேக காரியங்களை யோவான் எப்படி எழுதாமல் விட்டிருக்க முடியும்? இயேசுவைப் பற்றி விசாரிந்தறிந்தவைகளை இவர் சுயமாக எழுதியதனாலேயே காகிதங்கள் போதாதென்று காரணங்காட்டிப் பல விஷயங்களை விட்டு விட்டார். தாம் எழுதியது இறை வேதம் அல்ல என யோவான் இவ்வளவு தெளிவான வாக்குமூலம் தந்த பிறகும் பைபிளுக்கு வேத முலாம் பூசுவது நியாயமா என்பதைக் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

புதிய ஏற்பாட்டின் மிகப்பெரும் பகுதியை எழுதிய அப்போஸ்தலர் பவுல் என்பார் பல இடங்களில் தருகின்ற வாக்கு மூலங்களும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தேவனே சத்தியர். எந்த மனிதனும் பொய்யர். நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய் பேசுகிறவன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்.

ரோமர் 3:4-7

தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் பவுல் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்சையாக ஒப்புக் கொள்கிறாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக -புனித வேதமாக- இடம் பெற்றுள்ளது.

திருவாளர் பவுல் மேலும் கூறுவதைக் கேளுங்கள்:

நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தவனை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன்.

அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன். எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.

முதலாம் கொரிந்தியர் 9:19-23

பைபிள் என்பது மனிதனின் கற்பனையில் உருவானது என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து, திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன்; வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்ற இவ்வளவு தெளிவாக பவுல் வாக்குமூலம் தருகிறார். கிறித்தவ நண்பர்களே! மேலே உள்ள இந்த பைபிளின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்! பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்ற கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்து விடுகிறதல்லவா?

இதன் பிறகும் கூட பைபிளை இறை வேதம் எனவும் பரிசுத்த ஆவிகளால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

நான் கொஞ்சம் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நீங்கள் இதைப் பொறுத்துக் கொண்டால் நலமாயிருக்கும். பொறுத்தும் இருக்கின்றீர்களே!

இரண்டாம் கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனன் என்று எண்ண வேண்டாம். அப்படி எண்ணிக் கொண்டாலும் நானும் சற்றே பெருமை பாராட்டும்படி புத்தியீனனைப் போலாவிலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! இப்படி நான் பேசுகிறது ஆண்டவருக்கு ஏற்றபடி பேசாமல் பெருமை பாராட்டும் என்ற தைரியத்தினால் புத்தியீனனைப் போல் பேசுகிறேன்.

 இரண்டாம் கொரிந்தியர் 11:16,17

நான் புத்தியீனனானேன். இதற்கு நீங்களே என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் தான் என்னை மெச்சிக்கொள்ள வேண்டியதாயிருந்தது. நான் ஒன்றுமில்லை; ஆகிலும் மகாபிரதான அப்போஸ்தலர்களை விட எவ்வகையிலும் நான் குறைவுள்ளவனல்ல.

இரண்டாம் கொரிந்தியர் 12:11

இவை யாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும், பேசுவது ஆண்டவரல்லர் தம் தைரியத்தினாலேயே தாம் பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் பவுல்.

அந்தப் புத்திகெட்ட உளறல்களும், பிறரது வற்புறுத்தலுக்காகவும் தம் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறை வேதமாக இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறித்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்கு மூலங்களும் இடம்பெற்றுள்ளன. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிள் இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்?

மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள்!

மற்றவர்களுக்கோ ஆண்டவரல்ல நானே சொல்லுவதாவது

முதலாம் கொரிந்திரியர் 7:12

கன்னிகைகளைக் குறித்து ஆண்டவரால் எனக்குக் கட்டளையில்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறதற்கு ஆண்டவரால் இரக்கம் பெற்றவனாய் என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்.

முதலாம் கொரிந்திரியர் 7:25

எனினும் அவள் அப்படியே இருந்துவிட்டால் அதிகப் பாக்கியவதி என்பது என்பதும் என் அபிப்பிராயம். நானும் கடவுளின் ஆவியுடையவன் என்று எண்ணுகிறேன்.

முதலாம் கொரிந்திரியர் 7:40

பவுல் ஆகிய நான் இதை என் கைப்பட எழுதியிருக்கிறேன். நானே அதைச் செலுத்தித் தீர்ப்பேன்.

பிலமோனுக்கு எழுதின நிருபம்,19

இந்த வாக்குமூலங்களிலிருந்து தெரிய வருவது என்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டு பவுல் என்ற சவுல் தமது சொந்தச் சரக்குகளை கலந்து வேதங்களை அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்து புது மார்க்கம் கண்டார் என்பதைத் தவிர வேறு என்ன?

பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் அந்தத் தடையை இவர் சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவறத்தை இவர் நியாயப்படுத்தினார். விருத்த சேதனத்தையும் இவர் ரத்துச் செய்தார். இவற்றையெல்லாம் இறைக் கட்டளையின்படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார். (பைபிளில் முரண்பாடுகளைப் பற்றி அலசும் போது இதை விபரமாக நாம் தருவோம்)

இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர், அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுமல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர் பலமுறை பல்டியடித்துள்ளதை அவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்.

பின்பு அவனிடம் சகோதரனே! யூதருக்குள் பல்லாயிரம் பேர் விசுவாசியாக இருக்கிறதைக் காண்கிறீரே! அவர்கள் எல்லோரும் நியாயப் பிரமாணத்தைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்கள். புற ஜாதிகளிடத்திலிருக்கின்ற யூதர் எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனஞ் செய்யாமலும் முறைமைகளின்படி நடவாமலிருந்து மோசேயை விட்டு மாறுபட நீர் உபதேசிக்கின்றீர் என்று உம்மைப் பற்றி இவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியிருக்க செய்ய வேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என இவர்கள் கேள்விப்படுவது நிச்சயம்.

ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்கிறதைச் செய்யும். பொருத்தனை பண்ணிக்கொண்ட நாலு பேர் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்துக் கொண்டு நீரும் அவர்களோடு சுத்திகரிப்பு செய்து கொள்ளும். அவர்கள் தலைச் சவரஞ் செய்து கொள்வதற்கு அவர்களுக்காக நீரே செலவு செய்யும். அப்படிச் செய்தால் உம்மைப் பற்றி போதிக்கப்பட்டவைகள் அப்பத்தமென்றும் நீரும் நியாயப் பிரமாணத்தைக் கொண்டு நடக்கிறவரென்றும் யாவரும் அறிந்து கொள்வார்கள்.

விக்கிரகங்களுக்குப் பலியிட்டதற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததற்கும், வேசித்தனத்திற்கும் விசுவாசிகளான புற ஜாதிகள் விலகியிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் அவர்களைப் பற்றி தீர்மானம் அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுசரைச் சேர்த்துக் கொண்டு மறுநாள் அவர்களோடு தானும் சுத்திகரிப்புச் செய்து கொண்டு தேவாலயத்தில் பிரவேசித்து சுத்திகரிப்பு நாட்கள் எப்பொழுது நிறைவேறும் என்றும் ஒவ்வொருவனுக்காகவும் எப்பொழுது பலி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தான்.

அப்போஸ்தலர் 2:20-26

பைபிள் என்பது பவுலின் சொந்தத் தயாரிப்பு என்பதும், அதில் கூறுகின்ற போதனைகளிலும் அவருக்கே உறுதியில்லை என்பதும், கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும், மோசேயின் நியாயப் பிரமாணங்களை இவர் அலட்சியப்படுத்தியவர் என்பதும் இதன் மூலம் தெரியவருகின்றதல்லவா?

பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கையில் கிறித்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா!

 கூட்டல், குறைத்தல்

ஒரு நூலை இறைவேதம் என்று நம்ப வேண்டுமானால் அதை வேதமென்று நம்புகின்ற மக்கள் அனைவரிடமும் ஒரே விதமாக அமைந்திருப்பது அவசியமாகும். கூட்டல், குறைத்தல், திருத்தல், மாற்றுதல் போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அது இருப்பது அவசியமாகும்.

வேதத்திற்கு இந்தத் தகுதி இருந்தாக வேண்டும் என்பதைப் பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. மனித உள்ளங்களும் வேதத்தில் இந்தத் தகுதியை எதிர்பார்க்கின்றது.

நான் உங்களுக்குக் கற்பிக்கின்ற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்.

உபாகமம் 4:2

நான் உனக்கு விதிக்கின்ற யாவையும் செய்யும்படி கவனமாயிரு! நீ அதனோடு கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்.

உபாகமம் 12:32

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர் உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய்.

நீதிமொழிகள் 30:6

ஒருவன் இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்.

வெளிப்படுத்தின சுவிசேஷம் 22:19

வேதம் என்பது கூட்டப்படாமலும் குறைக்கப்படாமலும் பாதுகாக்கப்பட்டதாக இருப்பது அவசியமாகும் என்பதை மேற்கண்ட வசனங்கள் ஒப்புக் கொள்கின்றன.

பைபிளே நிர்ணயிக்கின்ற இந்தத் தகுதி பைபிளுக்கு உண்டா என்றால் இல்லை என்று நாம் உறுதியாக நாம் கூறி விடலாம். வேதம் எதுவென முடிவு செய்வதில் கிறித்தவ உலகம் தடுமாறுகின்றது. கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் வேதம் என்று நம்புகின்ற பல வசனங்களை மற்றும் ஒரு பிரிவினர் வேதமில்லை என மறுக்கின்றனர்.

கத்தோலிக்கப் பிரிவினருடைய பைபிளின் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 ஆகமங்கள் உள்ளதாக நம்புகின்றனர். தமிழ்நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையம் (திண்டிவனம்) வெளியிட்டுள்ள பரிசுத்த வேதாகமத்தில் இன்றளவும் 46 ஆகமங்கள் இருப்பதைக் காணலாம்.

புரோட்டஸ்டண்டுகளுடைய பைபிளின் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 39 ஆகமங்கள் மட்டுமே உள்ளதாக நம்புகின்றனர். இந்திய வேதாகமச் சங்கம் (பெங்களூர்) வெளியிட்டுள்ள புரோட்டஸ்டண்டு பிரிவினரின் பைபிளில் இன்றளவும் 39 ஆகமங்கள் இருப்பதைக் காணலாம்.

இங்கே வித்தியாசப்படுவது ஏழு வார்த்தைகளோ, ஏழு வசனங்களோ, ஏழு அதிகாரங்களோ இல்லை! ஏழு ஆகமங்கள் வித்தியாசப்படுகின்றன. அதாவது பல ஆயிரம் வசனங்கள் வித்தியாசப்படுகின்றன அவை பின்வருமாறு:-

1. தொபியாஸ் ஆகமம்                       297 வசனங்கள்

2. யூதித் ஆகமம்                                  346 வசனங்கள்

3. ஞான ஆகமம்                                 439 வசனங்கள்

4. சிராக் ஆகமம்                                 1589 வசனங்கள்

5. பாரூக் ஆகமம்                                213 வசனங்கள்

6. முதலாம் மக்கபே ஆகமம்              928 வசனங்கள்

7. இரண்டாம் மக்கபே ஆகமம்          558 வசனங்கள்

 மொத்தம்                                            4370 வசனங்கள்

4370 வசனங்களைக் கொண்ட இந்த ஏழு ஆகமங்களும் கத்தோலிக் பிரிவின் பைபிளில் காணப்படுகின்றன. புரோட்டஸ்டண்டு பைபிளில் இந்த 4370 வசனங்கள் காணப்படவில்லை. முழுமையாக வித்தியாசப்படும் ஏழு ஆகமங்கள் இவை. இவை தவிர அரைகுறையாக வித்தியாசப்படும் ஏழு ஆகமங்கள் உள்ளன.

தானியேல் என்றொரு ஆகமம் இரண்டு பிரிவினரின் பைபிளிலும் உள்ளது. இந்த ஆகமம் புரோட்டஸ்டண்டுகளின் பைபிளில் 12 அதிகாரங்களுடன் முடிந்து விடுகின்றது. கத்தோலிக்க பைபிளில் இதே ஆகமத்தில் 14 அதிகாரங்கள் உள்ளன. அதாவது 64 வசனங்களைக் கொண்ட 13 வது அதிகாரமும் 43 வசனங்களைக் கொண்ட 14 வது அதிகாரமும் (மொத்தம் 107 வசனங்கள்) புரோட்டஸ்டண்டு பைபிள்களில் காணப்படவில்லை.

முன்னர் நாம் குறிப்பிட்ட 4370 வசனங்களுடன் இந்த 107 வசனங்களைச் சேர்க்கும் போது 4477 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

இதே தானியேல் ஆகமத்தில் 3 வது ஆகமத்தில் புரோட்டஸ்டண்டு பைபிளில் 30 வசனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் கத்தோலிக்க பைபிளில் 97 வசனங்கள் உள்ளன. இங்கே 67 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

இதையும் சேர்த்து வித்தியாசப்படும் வசனங்கள் 4554 ஆக உயர்கின்றன.

எஸ்தர் என்றொரு ஆகமம் இரண்டு தரப்பினரின் பைபிள்களிலும் காணப்படுகின்றது. இந்த ஆகமத்தின் 10 வது அதிகாரம் புரோடஸ்டண்டு பைபிளில் 3 வசனங்களுடன் முடிந்து விடுகின்றது. ஆனால் கத்தோலிக்க பைபிளில் 13 வசனங்களைக் கொண்டதாக இந்த அதிகாரம் அமைந்துள்ளது.

இந்த 10 வசனங்களையும் சேர்த்து 4554 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

வித்தியாசங்கள் இத்துடன் முடியவில்லை.

இதே எஸ்தர் ஆகமம் புரோட்டஸ்டண்டுகளின் பைபிளில் 10 அதிகாரங்களுடன் முடிகின்றது. கத்தோலிக்க பைபிளில் 16 அதிகாரங்கள் காணப்படுகின்றன. இந்த 6 அதிகாரங்களிலும் (முறையே 12+6+18+19+19+24=98) வசனங்கள் உள்ளன.

ஆக மொத்தம் 4652 (4554+98=4652) வசனங்கள் வேதமா? இல்லையா என்பதில் கிறித்தவர்களுக்கிடையே அடிதடிகள்!

இந்த 4652 வசனங்களும் வேதத்தில் உள்ளவை தான்; புரோட்டஸ்டண்டுகள் அவற்றை நீக்கி விட்டார்கள் என்று கத்தோலிக்க உலகம் குற்றஞ்சாட்டுகின்றது. இவை வேதத்தில் உள்ளவை அல்ல! கத்தோலிக்க குருமார்களின் சொந்தக் கற்பனை என்று புரோட்டஸ்டண்டுகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கத்தோலிக்கர்கள் கூற்று உண்மை என்றால் வேதத்தின் பெரும் பகுதியை சிலர் நீக்கிவிடும் அளவிற்கு பைபிள் பலவீனமானதாகவும், பாதுகாக்கப்படாததுமாகவும் இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது.

புரோட்டஸ்டண்டுகளின் கூற்று தான் உண்மை என்று வைத்துக் கொண்டால் வேதத்தில் இல்லாததையும் கூட வேதத்தில் சேர்த்து விடுமளவுக்குத் தான் பைபிளின் பாதுகாப்புத் தன்மை இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது.

இது போக இன்னும் எத்தனை வசனங்கள் நீக்கப்பட்டிருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. எப்படிப் பார்த்தாலும் இரண்டு பிரிவினரின் வேதமும் இப்போது சந்தேகத்திற்குரியதாகி விடுகின்றது.

4652 வசனங்களை நீக்கவிட்ட புரோட்டஸ்டண்டுகள் எப்போது தோன்றினார்கள்? இந்தப் பிரிவு தோன்றியதே 16 ஆம் நூற்றாண்டில் தான். இயேசுவுக்கு 1600 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இந்தப் பிரிவினர் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான வசனங்களை எப்படி நீக்க முடிந்தது? அதனை எதிர்த்து கத்தோலிக்கத் திருச்சபைகளால் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை?

தங்கள் வேதத்தில் நீக்கம் செய்வதை அன்றைய மக்கள்- கிறித்துவ மக்கள்- எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? இந்தப் பிரிவினரும் எப்படி வளர முடிந்தது? சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை தான் இருக்க முடியும். இவர்கள் இதற்கு முன்பே அடிக்கடி நீக்கியும், சேர்த்தும் வந்துள்ளனர். மக்களும் இந்த நீக்குதல் சேர்த்தலுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். இதனால் தான் இவ்வளவு வசனங்கள் நீக்கப்பட்டதையும் கிறித்தவர்கள் ஜீரணித்துக் கொண்டார்கள். கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பு எடுபடாமல் போனதற்கு இதைத் தவிர எந்தக் காரணமும் இருக்க முடியாது.

புரோட்டஸ்டன்டுகள் இவற்றை நீக்குவதற்கு ஏன் துணிந்தனர் என்பதையும் கிறித்தவ உலகம் அறிந்து கொள்வது அவசியமாகும். எந்த ஆகமங்களைப் புரோட்டஸ்டண்டுகள் நிராகரித்து விட்டனரோ அந்த ஆகமங்களில் பவுல் உருவாக்கிய கிறித்தவக் கோட்பாட்டுக்கு எதிரான பல வசனங்கள் இடம் பெற்றிருந்தன என்பது முதல் காரணமாகும்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்து மீண்டும் உயிர்பெற்று எழுந்தார் என்பது கிறித்தவர்களின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையை நம்பாத எவரும் கிறித்தவராக இருக்க முடியாது.

ஆதாம் எனும் முதல் மனிதர் ஒரே ஒரு பாவம் செய்தார். அப்பாவத்தைக் கர்த்தர் கடைசி வரை மன்னிக்கவே இல்லை. அப்பாவம் மன்னிக்கப்பட வேண்டுமானால் அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் பிறக்கும் மாந்தர் அனைவரும் பாவிகளாகவே பிறக்கின்றனர். இயேசு வந்து தம்மையே சிலுவையில் பலி கொடுத்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார்என்பது கிறித்தவத்தின் மற்றொரு நம்பிக்கை. புரோட்டஸ்டண்டுகள் நீக்கியுள்ள ஞான ஆகமமும் சீராக் ஆகமமும் இந்தக் கொள்கையையும் தவிடு பொடியாக்குவதைப் பாருங்கள்!

முதல் மனிதன் தனியாக உண்டாக்கப்பட்டிருந்தான். ஞானமே அவனைக் காத்து வந்தது. அவனைப் பாவத்தினின்று விடுவித்தது.

ஞான ஆகமம் 10:1

(கடவுள்) எழுந்து அவனவனுக்கு அவனவன் செய்ததற்குத் தக்கபடி தீர்ப்பிடுவார்.

சீராக் ஆகமம் 17:20

இந்த இரண்டு வசனங்களையும் சிந்தித்தால் ஆதாமின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது என்பதையும் அவனவன் செய்ததற்கு அவனே பொறுப்பாளி; மற்றவர் வந்து அதனைச் சுமக்க முடியாது என்பதையும் அறியலாம். உதாரணத்துக்காக நாம் எடுத்துக் காட்டிய மூன்று வசனங்களும் கிறித்தவக் கோட்பாட்டையே தகர்த்து தரை மட்டமாக்கி விடுவதனால் தான் புரோட்டஸ்டண்டுகள் இந்த ஆகமங்களை நீக்கியுள்ளனர்.

இப்படிப் பல ஆயிரம் வசனங்களை புரோட்டஸ்டண்டுகள் நீக்கும் போது கத்தோலிக்கர்களால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை? கிறித்தவ உலகில் பெருமளவு மக்கள் புரோட்டஸ்டண்டு பிரிவின் இந்த நீக்குதல் வேலையை எப்படி ஜீரணித்துக் கொண்டார்கள்?

புரோட்டஸ்டண்டுகள் என்ற பெயரில் பிரிவதற்கு முன் கத்தோலிக்கர்களுடன் இணைந்து ஒரே பிரிவாக இவர்கள் இருக்கும் போது இரு சாராரும் இணைந்து பல்லாயிரக் கணக்கான வசனங்களை முன்னரே நீக்கியுள்ளனர். பல ஆகமங்களை மறைத்துள்ளனர்.

இவர்கள் அடிக்கடி நீக்கியும், மறைத்தும், கூட்டியும், குறைத்தும் வந்துள்ளதால் வேதத்தின் இலக்கணத்தையே கிறித்தவர்கள் மறந்து விட்டனர். வேதத்தில் எதையும் நீக்கவோ, மறைக்கவோ கூடாது என்று அவர்கள் நம்புவதில்லை.

இப்படி நீக்குவதற்கும், குறைப்பதற்கும், அதை ஜீரணிப்பதற்கும் கிறித்தவ மக்கள் பழகிப்போன காரணத்தினால், மார்ட்டின் லூதர் வந்து புரோட்டஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்த போதும், வேதத்தின் பல்லாயிரக் கணக்கான வசனங்களை நீக்கிய போதும் கிறித்தவர்களில் ஒரு பிரிவினர்அதையும் ஜீரணித்துக் கொண்டனர். அவர்,பின்னாலும் கணிசமான மக்கள் திரண்டனர்.

கத்தோலிக்க திருச்சபைகளால் எதுவுமே செய்ய முடியாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம். இவர்களே பல ஆகமங்களை நீக்கியிருக்கும் போது மார்ட்டின் லூதர் சில ஆகமங்களை நீக்கியதை எப்படி விமர்சிக்க முடியும்?

கத்தோலிக்கர்களும் இதற்கு முன், வேதத்தில் ஏராளமான ஆகமங்களை நீக்கி விட்டனர் என்று நாம் கூறுவதை எந்த ஆதாரமுமற்ற சொந்தக் கருத்து என்று எண்ணி விடாதீர்கள். பைபிள் தருகின்ற வாக்கு மூலத்தினடிப்படையிலேயே நாம் இதைக் கூறுகிறோம்.

பைபிள் என்பது ஒரு தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதன்று. மாறாகப் பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கும், ஞான திருஷ்டிக்காரர்களுக்கும் அருளப்பட்ட பல்வேறு வேதங்களின் தொகுப்பே என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

பைபிளில் இடம் பெற்றுள்ள சில ஆகமங்கள் தமக்கு முந்தைய ஆகமங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிடுவதை பைபிளில் நாம் காணலாம்.

 உதாரணமாக:-

உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தனமானங்களை ஆமோத்சின் குமரனாகிய  ஏசாயா எனும் தீர்க்கதரிசி எழுதினான்.

இரண்டாம் நாளாகமம் 26:22

இரண்டாம் நாளாகமத்தில்  ஏசாயா எனும் தீர்க்கதரிசி எழுதிய வேதம் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய ஆகமம் பைபிள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளதா என்று நாம் தேடிப் பார்த்தால் கத்தோலிக்க பைபிளின் 27ஆவது ஆகமமாகவும் புரோட்டஸ்டண்டு பைபிளில் 23ஆவது ஆகமமாகவும்  ஏசாயா ஆகமம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

எசக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும் யூதா, இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

இரண்டாம் நாளாகமம் 32:32

இங்கே கூறப்படுவது போலவே ராஜாக்கள் எனும் புஸ்தகம் ஒன்றுக்கு இரண்டாக (முதலாம் ராஜாக்கள், இரண்டாம் ராஜாக்கள்) பைபிள் தொகுப்பில் காணப்படுகின்றது.

பைபிளின் சில ஆகமங்கள் வேறு சில ஆகமங்கள் பற்றி அனேக இடங்களில் குறிப்பிடுகின்றன. அவற்றில் ஒருசில ஆகமங்கள் தாம் பைபிளில் உள்ளனவே தவிர, பைபிள் குறிப்பிடும் ஏராளமான ஆகமங்களை பைபிளில் காணவில்லை. இரண்டு சாராருமே சேர்ந்து அவற்றை நீக்கி விட்டார்கள் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். இதை விரிவாகவே நாம் காண்போம்.

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

முதலாம் நாளாகமம் 29:29

இந்த வசனத்தில் மூன்று ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இவற்றில் சாமுவேல் ஆகமம் பைபிளில் இன்றளவும் உள்ளது. ஆனால் தீர்க்கதரிசியாகிய நாத்தான் எழுதிய பிரபந்தமும், ஞானதிருஷ்டிக்காரனாகிய  காத் தின் பிரபந்தமும் பைபிளில் காணப்படவில்லை. இந்த இரண்டு ஆகமங்களும் எங்கே?

இரண்டோடு முடியவில்லை இன்னும் ஏராளமான ஆகமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

ஆர் எனும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும், மோவோபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது எனும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

எண்ணாகமம் 21:15

இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா?

யோசுவா 10:13

சாலெமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீயோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும் நேபாத்தின் குமரனாகிய யெரோபெயாமைக் குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.

இரண்டாம் நாளாகமம் 9:29

மேற்கண்ட வசனங்களில் சுட்டிக் காட்டப்படுகின்ற இத்தனை ஆகமங்களும் பைபிளில் காணப்படவில்லை.

நாத்தானுடைய புஸ்தகம் எங்கே?

காத்துடைய பிரபந்தம் எங்கே?

கர்த்தருடைய யுத்த புஸ்தகம் காணாமல் போன மர்மம் என்ன?

யாசேருடைய புஸ்தகமும் காணாமல் போய்விட்டதா?

அகயிர் எழுதிய புஸ்தகம் எங்கே போய்விட்டது?

இத்தோ எழுதிய பிரபந்தம் தொலைந்து விட்டதா? இதற்கெல்லாம் கிறித்தவ உலகில் விடை இல்லை.

ஆக, இப்படி  நீக்குவது என்ற வியாதி ஆரம்பம் முதலே கிறித்தவர்களிடத்தில் இருந்து வந்துள்ளது என்பதற்கு இவை மறுக்க முடியாத சான்றுகளாகும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டின் பரிதாப நிலை இது. புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம்.

புதிய ஏற்பாடு என்பது என்ன?  நம்முடைய கர்த்தரும், ஆண்டவருமாகிய இயேசுவின் புதிய ஏற்பாடு என்று கிறித்தவர்கள் சொன்னாலும் மறுபுறம் அவர்களே அதை மறுத்துக் கொள்கின்றனர்.

புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு இறைவன் அருளியதுமன்று. ஏசு கூறியதும் அன்று. மாறாக இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதியவற்றின் தொகுப்பே புதிய ஏற்பாடு.  மத்தேயு என்றால் இயேசுவைப் பற்றி மத்தேயு என்பவர் எழுதியது.  மாற்கு என்றால் இயேசுவைப் பற்றி மாற்கு எழுதியது.  யோவான் முதலான மற்றும் பல பெயர்களில் இடம் பெற்றவைகளின் நிலையும் இது தான் என்பதை முன்னர் கண்டோம்.

இயேசுவுக்குப் பின் மற்றவர்கள் எழுதி வைத்த – இயேசுவைப் பற்றிய பொய்யும் மெய்யும் கலந்த – வரலாறு தான் புதிய ஏற்பாட்டில் உள்ளதேயன்றி இயேசுவுக்கு அருளப்பட்ட, இயேசு போதித்த வேதமன்று.

நாம் கேட்கிறோம்! மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான இயேசுவுக்குக் கடவுளிடமிருந்து எந்த வேதமும் வரவில்லையா? கிறித்தவ நம்பிக்கையின்படி பாவிகளாகவே பிறந்த பல தீர்க்கதரிசிகளுக்கு வேதங்கள் அருளப்பட்டிருக்கும் போது அனைவரின் பாவங்களையும் சுமக்க வந்தவருக்கு புஸ்தகமோ, பிரபந்தமோ, வேதமோ இல்லாமலிருக்குமா?

இயேசுவுக்கும் ஒரு வேதம் அருளப்பட்டிருக்கும் என்பது நமது அனுமானமன்று. புதிய ஏற்பாடே அதை வெளிப்படையாகப் பல இடங்களில் ஒப்புக் கொள்ளவும் செய்கிறது.

பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.

மத்தேயு 4:23

இயேசு கலிலேயாவில் வந்து தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.

மாற்கு 1:14

காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.

மாற்கு 1:15

இயேசுவைப் பற்றி எழுதிய மத்தேயுவும், மாற்கும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை (புத்தகத்தை) இயேசு பிரசங்கித்ததாகக் கூறுகிறார்கள். மாற்கு ஒரு படி மேலே போய் தேவனுடைய புத்தகம் அது என்கிறார். தேவனால் அருளப்பட்டதும், ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எனப் பெயர்பெற்றதும் இயேசுவால் மக்களுக்குப் பிரசிங்கப்பட்டதுமான அந்தப் புத்தகம் எங்கே?

யார்யாருடைய புத்தகங்களை எல்லாமோ வேத முத்திரையுடன் உலா வரச் செய்த கிறித்தவ உலகம் -இயேசுவுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு அருளப்பட்டதையெல்லாம் பாதுகாத்துப் பழைய ஏற்பாட்டில் சேர்த்த கிறித்தவ உலகம் – இயேசுவே பிரசங்கித்த புஸ்தகத்தை எப்படிக் கோட்டை விட்டது?

பவுல் அவராக ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டு, அதை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியதால் அதற்குத் தடையாகவுள்ள  ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைத் தலை முழுகி விட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

புத்தகத்தை விசுவாசியுங்கள் என்று இயேசு கூறியது அவருக்குப் பின்னால் கற்பனை செய்யப்பட்ட இந்த புதிய ஏற்பாட்டையா? அவரே பிரசங்கித்த புத்தகத்தையா? கிறித்தவ உலகம் சிந்திக்குமா?

இயேசு எழுதிய – பிரசங்கித்த – போதித்த – வேதத்தையே தலை முழுகியவர்கள் எதைத் தான் நீக்கியிருக்க மாட்டார்கள்? என்ற கேள்வி உங்களுக்கு எழ வேண்டாமா? இனியும் எப்படி பைபிளை இறை வேதம் என்று நம்ப முடியும்?